சட்டத்தரணி கனக மனோகரன் அவர்களுக்கு கடந்த 07 -09 -2016 அன்று நடைபெற்ற வல்வை நலன் புரிச்சங்க கோடைகால ஒன்றுகூடலில் பன்முகப்பட்ட சமூகசேவைகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை அளித்துக் கௌரவம் கொடுக்கப்பட்டுள்ளது. திரு.கனக மனோகரன் வல்வெட்டித்றை செல்லத்துரைத் தண்டயல் மகன் கனகராசா தையல்நாயகி அம்பாள் ஆகியோரின் புதல்வராவார்.
வருடாவருடம் ஆயிரத்திற்கும் அதிகமான பக்கங்களுடன் வெளிவரும் 'தமிழன் வழிகாட்டி" என்ற தகவல் களஞ்சியம் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம்தான் கனடாவில் உருவாகிய முதலாவது ஊர்ச்சங்கம் என்று குறிப்பிட்டுள்ளது.
திரு.கனக மனோகரன் 1989ம் ஆண்டில் அதன் உருவாக்கத்தில் பங்கெடுத்ததோடு அச்சங்கத்தின் தலைவர் செயலாளர் பதவிகளை வகித்திருந்தார்.
கனடாவில் தமிழருக்கு உரித்தான முதலாவது கலாச்சார மண்டபதத்தை அமைத்த சங்கம் 'தமிழ் இசைக்கலாமன்றம்". அதன் உத்தியோகபூர்வ ஏடான 'இசைத் தென்றல்" மலராசிரியராக 17 வருடங்களாகப் பணியாற்றும் இவர் ஒரு இலட்சம் டொலர்களுக்கு அதிகமான நிதியை இம்மன்றத்திற்குச் சேர்த்துக்கொடுத்துள்ளார்.
22 வருடங்களாக கனடா இந்துமாமன்ற துணைத் தலைவராகப் பணியாற்றுகின்ற இவர் ஆரம்பகாலத்தில் பெற்றோர் ஆசிரியர் சம்மேளனத் தலைவராக இருந்ததோடு எட்டு சமயப் பாடசாலைகளைப் பொறுப்பேற்று ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தியுள்ளார்.
கனக மனோகரன் உடுப்பிட்டி அமெரிக்கன்மிசன் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் கனடாக்கிளையிலும் ஒரு முன்னணி உறுபப்பினர். 2008ம் ஆண்டுக்கான அதன் தலைவராக இருந்த அவர் கனடாவில் மட்டுமல்ல லண்டனிலும் சுவிற்சலாந்திலும் நடைபெற்ற 'வானவில்" விழாக்களிலும் பங்குபற்றியிருந்தார்.
இளமையில் ஜனநாயக அரசியலில் தீவிரமாகப் பங்குகொண்டு தடியடி தடுப்புக்காவல் எதிர்கொண்ட அனுபவங்களும் உண்டு. சமூக சீர்திருத்தம் சாதியொழிப்புகளில் ஈடுபட்ட துணிச்சல் நிறைந்த இவர் கொலை முயற்சிகளுக்கும் இலக்கானதுண்டு சிறந்த குற்றவியல் சட்டத்தரணி என்று பேரெடுத்த இவர் மேல்நீதிமன்றக் கொலை வழக்குகளில் நிகழ்த்திய சாதனைகள் பல. பிரபல்யமான யாழ்மேயர் துரையப்பா. அருட்தந்தை ஆபரணம் சிங்கராயர்;, குட்டிமணிக்கு எதிரான பொலிஸ் சிவனேசன் கொலை வழக்குகளிலும் பங்கெடுத்துள்ளார்.
சிறந்த பேச்சாளரான இவர் அகில இலங்கை ரீதியிலான போட்டிகளில் நான்கு பதக்கங்களைப் பெற்றதோடு. சட்டக்கல்லூரியில் ஆயத்தமின்றிப் பேசும் போட்டிகளில் நான்கு பதக்கங்களை வென்றெடுத்து சாதனை படைத்துள்ளார். படிப்பவரை கவர்ந்திழுக்கும் வகையில் கவர்ச்சியான கவிநடையில் கட்டுரை வரைவது இவரது சிறப்பம்சம். 1970ல் ஆறுமுகநாவலரின் 150வது பிறந்தநாள் விழாவினையொட்டி நடத்தப்பட்ட அகிலஇலங்கை ரீதியிலான கட்டுரைப் போட்டியில் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
கவியரங்கங்களைக் கலகலக்க வைக்கும் கனக மனோகரன், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் பிரச்சாரப் பீரங்கியாக (வட - கிழக்கு) மன்னாரிலிருந்து பொத்துவில் வரை சென்று சிறுவயதிலேயே 'சொல்லேந்தி" என்ற பட்டத்தைப் பெற்றவர்.
கனடாவில் வெளிவரும் 'தாய்வீடு" என்ற மாதாந்தப் பத்திரிகையில் 2016 சனவரியில் இலக்கிய உறவுகள் என்ற தலைப்பிலான கட்டுரையில், தமிழறிஞர் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'கன்னித்தமிழின் காதலன் கனக மனோகரன்" என்ற கட்டுரை அவரின் திறமைகளையும் சாதனை களையும் சேவைகளையும் பலரும் அறியவைத்திருந்தது.
எமது வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் 2008ம்ஆண்டில் நண்பன் மனோகரனுக்கு மணிவிழா எடுத்ததோடு 'மனோமணி மலர்கள்" என்ற மகுடத்தில் அவரது கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தோம். அதன் அறிமுக உரையில் கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிபர் இளையபாரதி 'தமிழ்நதியைச் சிறைப்பிடிக்கும் எழுத்தாற்றலும் இலக்கியக்காற்றை மயிலிறகால் வருடும் சொல்லாற்றலும்; கனக மனோகரனின் முகவரிகள். பேச்சில் இலக்கியமும் எழுத்தில் மொழிஐக்கியமும் இவருக்கு கைவந்தகலை.
அவரின் தனிமனித வாழ்க்கையும்சரி சமூகம்சார்ந்த வாழ்க்கையும் சரி எதிர்பார்ப் புகள் இல்லாத எளிமையானவை. சைவம் தமிழ் ஊர் இனம் விடுதலையென வேரோடிப்போயி ருக்கும் இவரின் பணிகள் இந்தப் பனிவயல்களில் ஏதோ ஒரு வகையில் வேறுபட்டு நிற்பதுதான் தனி முத்திரைகள்!"
தகுதி நிறைந்த ஒரு சமூகப்போராளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருப்பது கனடாவாழ் மக்கள் அனைவருடன் நாமும் பெருமைகொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Tamilan (Canada)
Posted Date: July 17, 2016 at 17:46
What he did for the people. He did for him not for society.he is not suitable for this award before giving award must have to verify their social work.
k.S.Thurai (Denmark)
Posted Date: July 16, 2016 at 00:31
அன்பின் அண்ணன் திரு. கனக. மனோகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.. மேலும் மேலும் சாதனை படைத்து வல்வைக்கு பெருமை தேடித்தர வாழ்த்துக்கள்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.