அடுத்த வருட புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2016 (புதன்கிழமை)
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்தவருடம் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்த எதிர்பார்த்துள்ளதாக உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது உள்ளூராட்சி எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் ஆனாலும் இந்த பணிகளைப் பூர்த்தி செய்ய மேலும் சில மாதங்கள் செல்லும் எனவும் இதன்படி தேர்தல் அடுத்த வருடத்திலேயே நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி எல்லை நிர்ணயங்கள் தொடர்பாக இறுதி அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கு மேலும் சில மாதங்கள் தேவைப்படுவதாக அது தொடர்பான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இந்த வருடத்திற்குள் தேர்தல் நடைபெறாது. எவ்வாறாயினும் அடுத்த வருடம் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இந்தத் தேர்தலை நடாத்துவதற்கு நாம் முயற்சி செய்து வருகின்றோம்.
யார் என்ன கூறினாலும் மக்கள் வழங்கிய வாக்குறுதியை மீறி பழைய முறையில் தேர்தல் நடைபெறாது. புதிய முறையிலே நடக்கும் என்பதனை நாம் உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.
இதே வேளை தேர்தல் பயம் காரணமாக தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைப்பதாக பொய் பிராசரங்களை செய்து வருகின்றனர். யாருக்கும் பயந்து தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பல சவால்களை கண்டு வெற்றிகொண்டவர் அவருக்கு உள்ளூராட்சி தேர்தல் என்பது ஒரு விடயமே அல்ல.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருக்கின்றார். இதன்படி அவர் நியாயமான புதிய முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் அதற்காக செயற்படுகின்றார். இதன்படி புதிய முறையில் அடுத்த வருடம் தேர்தல் நடக்கும் என்றார்.
மேற்கண்டவாறு தினக்குரல் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.