இம்முறையும் மக்கள் கூட்டத்தால் நிறைந்த வல்வெட்டித்துறை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2020 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம், வல்வை உதயசூரியன் கழகம் இணைந்து நடத்தும் வினோத விசித்திர பட்டப் போட்டி திருவிழா 10 வது வருடமாக வெகு விமர்சியாக உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் கொண்டாடப்பட்டது.
பட்டப் போட்டி திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதனால் விசேட வாகனத் தரிப்பிடம், வீதிப் போக்குவரத்து ஏற்பாடுகள், அவசரகால மருத்துவ உதவி, காவல்துறையினரின் கரையோர மீட்புக்குழு, குடிநீர் தாங்கிகள், விசேட உணவகங்கள் என சகல ஏற்பாடுகளும் விழா ஏற்பாட்டாளர்களால் முன்னரே ஒழுங்கமைக்கப்பட்டிருந்த்தது. மேலும் காவல்துறையினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இம்முறை விசேடமாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் விசேட வாகனத்தரிப்பிடத்திற்க்காக கேள்வி அறிவித்தல் மூலம் தனியாரிடம் வழங்கப்பட்டது. இந்திர விழாவிற்கு வீதித்தடை போடுவது போல ஊறணி, மருதடி மற்றும் ஊரிக்காடு ஆகிய பிரதேசங்களில் வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டதனால் வல்வையின் வீதிகளில் மக்கள் நெரிசலின்றி விழாவிற்கு வருகைதந்திருந்தனர்.
இருந்தும் உதயசூரியன் உல்லாசக் கடற்கரை பல்லாயிரக் கணக்கான சனக்கூட்டத்தால் நிரம்பியிருந்தது. வழமைபோன்று இவ் வருடமும் தொலைபேசி அலைவரிசை அதிக மக்களின் பாவனையால் அவ்வப்போது முடங்கியது. பட்டம் ஏற்றும் திடல் தவிர்ந்த ஏனைய இடங்களில் மக்கள் நெரிசலை அவதானிக்க முடிந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வல்வை விக்னேஸ்வரா அங்கத்தவர்கள் மற்றும் உதயசூரியன் கழகத்தினருடன் காவல்துறையினரும் கடமையில் ஈடுபட்டனர்.
இம்முறை பட்டப் போட்டித் திருவிழாவினைக் காண யாழின் பல்வேறு பிரதேசத்திலிருந்து மட்டுமல்லாது வடக்கு கிழக்கு எனப் பலரும் வருகைதந்திருந்தனர். அத்துடன் சிங்கள மக்களும் பேரூந்துகளில் வல்வையை நோக்கி வந்திருந்தனர். மேலும் ஒரு சில வெளிநாட்டு பிரஜைகளையும் காணக் கூடியதாகவிருந்தது.
பல்லாயிரக் கணக்கான மக்களின் வருகையால் தைப் பொங்கல் திருநாளில் பொங்கல் நிகழ்வு, வினோத விசித்திர பட்டப் போட்டி திருவிழா மற்றும் தென்னிந்திய இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சி என வல்வெட்டிதுறையே கோலாகலமாகியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.