புதுக்கோட்டையில் வீதி விபத்தில் வல்வையைச் சேர்ந்த இளைஞன் பலி, உறவினர் காயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2016 (திங்கட்கிழமை)
தமிழ்நாடு புதுக்கோட்டையில் நேற்று 5 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்றில் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் பலி ஜெயகாந்தன் ரஜீவன் என்னும் இளைஞர் பலியாகியுள்ளார்.
இவருக்கு வயது 20. இவர் வல்வையின் மூத்த கடலோடிகளான மகாலிங்கம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த காலம் சென்ற கப்பல் கப்டன் சிவசுந்தராமுர்த்தி (மூர்த்தி) ஆகியோரின் பேரன் ஆவார்.
சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பொம்மாடிமலை என்ற இடத்தில் பஸ் வந்தபோது, முன்னால் புதுக்கோட்டைக்கு சுற்றுலா வந்து விட்டு திருச்சி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
அந்த காரை பஸ் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக கார் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொருங்கியது.
நொருங்கிய கார்
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரஜிவன் உட்பட சஜிதா(18), கிருபா(8) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ரஜிவனின் உறவினர்கள் ஜீவாராணி(35), ரோமிலா, பாலதரணி, ஹேமா(22), சர்மிளா(21), சஞ்சய், சஞ்ஜீவ்(12), வரூண், வித்யா(10), தனுஷ் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினர். அவர்கள் உதவி கேட்டு அபய குரல் எழுப்பினர்.
அவ்வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 11 பேரையும் மீட்டனர். இதில் ஜீவாராணி, வித்யா, தனுஷ் ஆகியோரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜீவாராணி பரிதாபமாக இறந்தார். வித்யா, தனுஷ் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக புதுக்கோட்டை-திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.