அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில், வல்வெட்டித்துறை நகரசபை, காரைநகர் பிரதேசசபை, நெடுந்தீவு பிரதேசசபை, வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சைக் குழுக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுகளை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏழு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு மேலும் இரண்டு ஆசனங்கள் தேவையாகவுள்ளன.
இந்நிலையில், வல்வெட்டித்துறை நகர சபையில் நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழுவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஊர் மக்களின் பிரசன்னத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே குழுவாக ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறும் சுயேட்சைக் குழுவுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு நகர சபைத் தலைவர் பதவியை வழங்குவதற்கு உறுதியளிப்பதாகவும் தமிழ் தேசிய கூடமைப்பினர் இந்தச் சந்திப்பில் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது..
மேலும் சுயேட்சைக்குழு தமது நகரசபைத் தலைவர், உப தலைவர் ஆகியோருடன் இரண்டாண்டுகளுக்கு ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கோரியுள்ளதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தான தலைவர், உப தலைவருடனான அவர்களின் ஆட்சிக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக, வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதற்கான பேச்சுக்கள் காணப்படுகின்ற நிலையில், சுயேட்சைக் குழுவுடன் ஒரே குழுவாக இயங்குவது சாத்தியப்படாதவிடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கு எதிரணியிலிருந்து சுயேட்சைக் குழு குழப்பாது, ஆட்சி இடம்பெறுவதற்கு ஆதரவளிக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி தவிர்ந்த ஏனைய கட்சிகளுடனும், சுயேட்சை குழுவும் இதர கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.