நீச்சல் தடாகத் திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்?
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2019 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் கடந்த 9 ஆம் திகதி குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
திறப்பு விழாவில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், குறித்த நீச்சல் தடாக உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்தவர்களில் குறிப்பிடக் கூடியவர்களில் ஒருவரான திரு.சிவாஜிலிங்கம் புறக்கணிக்கப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.
திரு.சிவாஜிலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர்.
எவ்வாறு புறக்கணிக்கப்பட்டார்.
1.திறப்பு விழாக் கல்வெட்டில் அமைச்சர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பெயர்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது
2. அழைப்பிதழிலும் திரு.சிவாஜிலிங்கத்தின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
3.மேடையில் விருந்தினர்கள் இருக்கையில் திரு.சிவாஜிலிங்கத்திற்கு இடம் ஒதுக்கப்படவில்லை.
4.ஒதுக்கப்பட்ட விருந்தினர்கள் வரிசையிலும் சிவாஜிலிங்கத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.
5.நீச்சல் தடாகத்தை நீர் ஊற்றி ஆரம்பிக்கும் வைபவத்திலும் இவருக்கு இடம் கொடுக்கவில்லை.
6.அறிவிப்பாளர்களும் மிகக் கவனமாக எந்தவொரு இடத்திலும் சிவாஜிலிங்கத்தின் பெயரை உச்சரிக்கவில்லை.
7. எல்லாவற்றுக்கும் மேலாக தடாகத்தைப் பற்றியும், அழிக்குமரன் ஆனந்தனைப் பற்றியும் பெரிதும் அறிந்திருந்த திரு.சிவாஜிலிங்கம் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக திரு.மாவை சேனாதிராஜாவும், திரு.சுமந்திரனும் சிறப்புரை ஆற்றியிருந்தார்கள்.
ஆனாலும் நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, தடாக பணி பற்றி குறிப்பிடும் பொழுது, திரு.சிவாஜிலிங்கம் பற்றி குறிப்பிட்டு அதாவது 'நீச்சல் தடாகம் அமைக்க தொடர்ந்து வற்புறுத்தியவர்' என்று கூறி நன்றி தெரிவித்தார்.
மங்கள சமரவீரவின் உரையை தமிழாக்கம் செய்தவர் மேற்குறித்த விடயத்தை கவனமாக தவிர்த்தமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
இதேவேளை, அன்றைய தினம் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது அமைச்சர் மங்கள சமரவீரவிடம் திரு சிவாஜிலிங்கம் நீச்சல் தடாகத்தின் அடுத்தகட்டமாக குழந்தைகள் நீச்சல் தடாகம், குத்துக் கரணம் அடிக்கும் பகுதி மற்றும் கடல் நீச்சல் தடாகம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குமாறு கேட்டபோது, இந்த வருட பட்ஜெட்டில் குழந்தைகள் நீச்சல் தடாகம் அமைப்பதற்கு முதலில் ஒதுக்குவதாக அமைச்சர் மங்கள சமரவீரதெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.