எனது மக்களுக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் - சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2019 (வெள்ளிக்கிழமை)
நான் போட்டியில் இருந்து விலகாவிட்டால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தான் நான் அறிந்துள்ளேன். எந்தவித கடிதங்களும் எனக்கு வரவில்லை. கடிதம் கிடைத்தால் கிடைத்தவுடன் என்னுடைய விளக்கத்தை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா வாடி வீட்டில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் பிரசசாரங்கள் தென்னிலங்கையில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலும் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 7 ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. இது எட்டாவது தேர்தல்.
சிங்கள கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை. ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை, சுயாதீன அமைப்புக் குழு, திருகோணமலை மாவட்ட வணக்கத்திற்குரிய ஆயர், தென்கைலை ஆதினம், யாழ்ப்பாணம் சின்மியா மிசன் சாமியார் உட்பட பலர் பல்வேறு தமிழ் தலைவர்களை சந்தித்தார்கள்.
இதன்போது பொது வேட்பாளர் குறித்து பேசப்பட்ட போது இந்தக் கட்சித் தலைவர்கள் மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் எவருமே இவ்வாறு போட்டியிட்டால் வாக்குகள் பிளவுபடும் என்ற கருத்தை கூறவில்லை. அவர்களால் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலைமை ஏற்பட்ட பொழுது தான் திருமதி அனந்தி சசிதரன் அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட வைக்க பேசியிருந்தேன். கனடாவில் இருந்து வழக்கறிஞர் கரிகாலன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களுடன் பேசியிருந்தார். எவையும் சரிவராத நிலையில் தான் நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி பல சுற்றுப் பேச்சுக்களை நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். ஆறு கட்சிகள் கூடிய நிலையில் இடைக்கால அறிக்கையை நாங்கள் நிராகின்றோம் என்ற வசனம் குறிக்கப்படாமை காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியிருந்தது. ஏனைய 5 கட்சிகளும் கையெழுத்திட்டு 13 அம்சக் கோரிக்கைளை முன் வைத்திருந்தார்கள். பிரதான வேட்பாளர் மூவருக்கும் அனுப்பப்பட்டது.
அந்தக் கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்து அதனை முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றேன். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் 5 தமிழ் கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் நான் போட்டியில் இருந்து விலகத் தயார் என்றும் கூறியிருந்தேன். இதைவிட இரண்டு கோரிக்கைகைளை ஒருவராவது ஏற்றுக் கொண்டால் விலகுவதாக தெரிவித்திருந்தேன்.
அரசியலமைப்பில் 13 வது திருத்தம் உட்பட அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய அரசியலமைப்பு வருகின்ற போது ஒற்றையாட்சி, பௌத்தம் என்ற முன்னுரிமை இல்லாமல் அரசாங்க தரப்பு பேச வேண்டும். அதுபோல் எங்கள் தரப்பும் பேச வேண்டும். அதற்கும் எவரும் பதிலளிக்கவில்லை. ஆகையால் இனி போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என கருதவில்லை.
புதிய ஜனநாயக முன்னனியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழர் விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எவையும் இல்லை. அனுரகுமார திசாநாயக்காவும் தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கூற தவறிவிட்டார். அதனால் தான் 5 கட்சிகளும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்குமாறு நாங்கள் கைகாட்ட முடியாது. நீங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்கள். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் அவ்வாறு கூறியிருக்கிறார்.
இனி தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது மற்றைய தமிழ் கட்சிகளோ புதிய ஜனநாயக முன்னனிக்கு அடையாளம் காட்ட மாட்டடார்கள் என நம்புகிறோம். ஏனெனில் அடையாளம் காட்டினால் அந்தக் கட்சி வெற்றி பெறாது என்ற கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆகவே இவர்கள் மறைமுகமாக வேலை செய்து சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெற் செய்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
எது எப்படியோ தமிழ் மக்களது வாக்குகள் தேவை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் சொல்ல மாட்டோம் என மூன்று வேட்பாளர்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனவே எங்களுடைய மக்கள் நவம்பர் 16 ஆம் திகதி தீர்மானம் எடுக்க வேண்டும். தபால் மூல வாக்களிப்பில் கணிசமானோர் பிரதான கட்சிகள் இரண்டையும் நிராகரித்து வாக்களித்ததாக பல்வேறு இடங்களில் இருந்து கூறுவது உற்சாகத்தை தருகிறது. மக்களுக்கும் இந்த நிலைமைகள் தெரியவரும்.
கோத்தாபய அல்லது சஜித் தான் ஜனாதிபதியதக வரப்போகிறார்கள். இந்த நிலையில் தான் நாங்கள் சர்வதேசத்திற்கும், தென்னிலங்கைக்கும் தெளிவான செய்தியை சொல்ல வேண்டும். எங்களுடைய அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பாடாத நிலையில் நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு சென்று போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் நீதி கோருவோம். புதிய ஜனாதிபதி 3 மாத காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு கொண்டு வராத நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மூலம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொதுசன வாக்கெடுப்பை கோருவோம். இவற்றை உள்ளடக்கியதாக என்னுடைய தேர்தல் பிரகடனம் வெளியிடப்படும். பெரும்பாலும் எதிர்வரும் 9 ஆம் திகதி திருகோணமலைளில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் இணைந்து வெளியிடுவேன்.
எனவே 16 ஆம் திகதி வாக்குகளை அளிக்கும் போது கவனம் செலுத்தவும். நான் ஒரு அடையாளம் மாத்திரம் தான். இந்த வாக்குகளுக்கு நான் தனித்து உரிமை கோரமாட்டேன். எனக்கு ஒரு லட்சம் வாக்குகளை அளிக்கும் பட்சத்தில் சர்வதேசம் திரும்பி பார்க்கும். நான் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்தவுடனேயே பல வெளிநாட்டு தூதரங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள். எங்களுக்கு இவர், அவர் வெல்ல வேண்டும் என்றல்ல. பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். மத்தியஸ்தம் வகித்து பெற்றுத் தாருங்கள் போட்டியில் இருந்து விலகுகிறேன் எனக் வெளிநாட்டு துர்துவராலயங்களுக்கு கூறியுள்ளேன். எனவே மக்கள் எங்களுக்கு பேராதரவு தரவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
நான் போட்டியில் இருந்து விலகாவிட்டால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தான் நான் அறிந்துள்ளேன். எந்தவித கடிதங்களும் எனக்கு வரவில்லை. அவர்கள் தீர்மானித்துள்ளார்கள். அதை நான் மறுக்கவில்லை. 3 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நான் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.
இதற்கு முன்னர் கடந்த 13 ஆ ம் திகதி அவர்களுடைய தலைமைக்குழு கூடி ஒருவார கால அவகாசம் விதித்திருந்தது. மீண்டும் 26 ஆம் திகதி கூடி 3 ஆம் திகதி வரை நீடித்திருக்கிறார்கள். என்னுடைய தன்னிலை விளக்கத்தை நவம்பர் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்குமாறு கேட்டுள்ளார்கள். எனக்கு இன்னும் கடிதம் கிடைக்கவில்லை. கிடைத்தால் கிடைத்தவுடன் என்னுடைய விளக்கத்தை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன்.
அவர்களுடைய கோரிக்கையை ஏற்று 3 ஆம் திகதி விலகக் கூடிய நிலமையில் நான் இல்லை. அவர்கள் விரும்பிய நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. யாப்பு கட்சிக்கு தேவை என உருவாக்கி 10 தேசிய மாநாடுகளை நடாத்தி காட்டிய எனக்கு அவர்கள் அந்த யாப்பின் அடிப்படையில் கூடியது இடைநிறுத்த முடியும். விசாரணையின் பின்னர் நிரந்தரமாகவும் நீக்க முடியும். எதையும் செய்யட்டும். நான் என்னுடைய மக்களுக்காக தான் போட்டியிடுகின்றேன். அவர்கள் என்னை நீக்கினால் பொது வேட்பாளர் என்ற பலம் அதிகரிக்கும் என்று தான் நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.