நடைபெற்ற 7 ஆவது வல்வை கலை இலக்கியவிழா (முழுப் படத்தொகுப்பு இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2017 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுவருடத்தினத்தன்று பிற்பகல் 04.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் வல்வை சிவன் கோயில் பொது வீதியில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் கு.பரமதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் (சிரேஸ்ட விரிவுரையாளர், சமூகவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு ஆ.சிவநாதம் (அதிபர் யா/புற்றளை மகாவித்தியாலயம்) அவர்களும், திரு.மாவை. நா.கஜேந்திரன் (முகாமையாளர் - வலம்புரிப் பத்திரிக்கை) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
,
அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல்.இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, மன்ற கீதம், சோமஸ்கந்த சிவஸ்ரீ தண்ட பாணிக தேசிகர் மற்றும் மனோகரக் குருக்கள் ஆகியோரின் ஆசியுரைகள் அருட்தந்தை காள்ஸ்போவர் ஆகியோர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் கு.பரமதாஸ் வரவேற்புரையை வழங்கியதைத் தொடர்ந்து கலைஞர்கள் கெளரவிற்பும் , அதனைத் தொடர்ந்து நெய்தல் மலர் 7வது இதழ் வெளியீடும், விருது வழங்கல்களும் இடம்பெற்றது.
நிகழ்வுகளின் வரிசையில் J.தயானந்தின் பாடலினைத் தொடர்ந்து கவிதை, தனி மற்றும் குழு நடனங்கள். நாடகங்கள் என்பன இடம்பெற்றன.
நடனங்களின் வரிசையில்
லா.லாவாண்யா, கோ.அபிராமி, து.தமிழினி, ஜெ.ஜென்சிகா ஆகியோர் தனி நடன நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.
சி.சைந்தவி மற்றும் க.கிருசாயினி ஆகியோரின் நடனமும், ச.சஞ்சிகா மற்றும் மேனகா ஆகியோரின் குறவன் குறத்தி நடனமும் மற்றும் திவ்யா, லக்க்ஷிகா, நிசாந்தி ஆகியோரின் மூவர் நடனமும் இடம்பெற்றிருந்ததுடன், பரதசுரபி கலா மன்றத்தின் இரு வேறு குழு நடனங்கள் இடம்பெற்றிருந்தன.
நாடகங்களின் வரிசையில்
படும்பாடு
நாடகங்களின் வரிசையில் முதாலவதாக படும்பாடு எனும் குறு நேர நகைச்சுவை நாடகம் இடம்பெற்றது
ஒருவன் கலையை ஒருவனுக்கு புகட்டும் போது படும் பாட்டினை சித்தரிக்கும் நகைச்சுவை நாடகம் நேற்றைய வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை விழாவில் மேடை ஏற்றப்பட்டிருந்தது. இருவர்கள் மட்டும் நடித்திருந்த இந்த நகைச் சுவை நாடகம் 10 நிமிடங்கள் கொண்டதாக அமைந்திருந்தது.
குறித்த இந்த நாடகத்தில் வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் உறுப்பினர்களான பிரசாத் மற்றும் வினோ ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
காலம் போகின்ற போக்கு
அடுத்து சுமார் 0830 மணியளவில் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் இயக்கத்தில் 'காலம் போகின்ற போக்கு' என்னும் சமூக விழிப்புணர்வு - நகைச்சுவை நாடகம் மேடை ஏற்றப்பட்டிருந்தது. தற்போதைய போதைப் பொருள் பாவனையை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்த இந்த நாடகம் சுமார் 25 நிமிடங்கள் நீடித்திருந்தது.
இந்த நாடகத்தில் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் உறுப்பினர்களான பார்த்தீபன், குருபரன், பரமதாஸ், பிரசாந்த், சுஜீவன், ஜெயரூபன், மெளனிசன், வினோ, மாதவன், நரேன், மற்றும் ஜிவிந்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.
"ஆசைகளே!!! ஓ..... ஆசைகளே!!!!"
இறுதி நிகழ்வாக வல்வை ஹெலியன்ஸ் நண்பர்களின் 45 ஆவது தயாரிப்பான "ஆசைகளே!!! ஓ..... ஆசைகளே!!!!" என்ற நாடகம் மேடை ஏற்றப்பட்டிருந்தது.
சுமார் 48 நிமிடங்கள் நீடித்திருந்த இந்த நாடகத்தை எழுதி இயக்கியவர் ஹெலியன்ஸ் நாடகக் குழுவைச் சேர்ந்த நாடகக் கலைஞர் கலாபூஷணம் வெ.முத்துசாமி அவர்கள் ஆவார். இவரே நாடகத்திற்கான ஒப்பனையையும் மேற்கொண்டிருந்தார்.
நிகழ்கால வாழ்வின் ஒரு பகுதியைச் சித்தரிக்கும் வகையில் அமையபெற்ற இந்த நாடகம், வெளி நாடு ஒன்றிற்கு மகனை கடன் பட்டு அனுப்பிவிட்டு,, ஆடம்பர வாழ்வில் ஈடுபாடும் குடும்பங்களை மையப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
நாடகத்தின் கதா பாத்திரங்களாக கடன் பட்டு மகனை வெளி நாட்டுக்கு அனுப்பும் பெற்றோர், மகன், அறிவுரை கூறும் குடும்பம், மற்றும் வெளிநாட்டில் மகனுடன் உள்ள நண்பர்கள் என வெளிப்படுத்தப்பட்டிருந்தனர்.
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் இன, மொழி, மத வேறுபாடுகள் இன்றி வாழ்வதைக் குறிக்கும் வகையில் இஸ்லாமியர் ஒருவரின் கதாபாத்திரம் ஒன்றும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
நாடகத்தின் சிறப்பம்சமாக, நாடகத்தின் கருப்பொருளை இலகுவாக பார்வையாளருக்கு வெளிக்கொணரும் வகையில் 2 உரைஞர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். 2 உரைஞர்களாக பங்கேற்றிருந்தவர்கள் விநோலினா, விக்டோரியா எனும் 2 பெண்மணிகள் என்பதும் சிறப்புடன் குறிப்பிடத்தக்கது.
நாடகத்தில் பங்கேற்று இருந்தவர்கள் Capt.பாஸ்கரன், அப்பர், மகேந்திரன், ரகு, தர்சன், ரகுநாதன், சதா, சாஞ்ஜேவேல் ஆகியோர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.