மனப்பட மனிதர்கள் : சிந்திக்க வேண்டிய சிறுகதை கமலா டீச்சர்.. பாகம் 14
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)
மனம் என்னும் தோணி பற்றி, மதியென்னும் கோலை ஊன்றி, நினைவென்னும் சரக்கை ஏற்றி செறி கடலாய் ஓடும் கால வெள்ளத்தைக் கடந்து அறுபதுகளின் திரைச்சீலையை கிழித்தபடி சிதம்பராவிற்குள் நுழைகிறேன்..
1500 மாணவர்கள், 52 ஆசிரியர்கள், வகுப்புக்கு இரண்டு மொனிட்டர்கள், அவர்களை கண்காணிக்க உயர்வகுப்பு மாணவர் தலைவர்கள், எல்லோருக்கும் பீதியை கிளப்ப தோளில் பிரம்பை ஏந்தியபடி இரட்ணம் மாஸ்டர்.. வகுப்பில் பிரம்பின் நுனிப்பக்கம் வெடிக்காதிருக்க இறப்பர் குழாய் போட்டபடி ஆசிரியர்..
நாலாம் வகுப்பு..
அரியகுட்டி பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு படித்துவிட்டு நேரடியாக சிதம்பரா வந்திருந்தேன்.. ஒன்றுக்கு போகவே பயமாக இருந்தது.. பூசா முகாமிற்குள் மாட்டிவிட்டது போன்ற உணர்வு..
அன்றய தினங்களில் என்றுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று என்னுடைய சிறு பிள்ளை மனம் கண்ணீர் வடித்தது..
அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவு வந்தால் சித்தியடைய தவறிய மாணவர்களில் ஒருவராவது பொலிடோல் குடித்து மரணிப்பது வழமையாக இருந்தது..
ஒரு நாள் கம்பர்மலைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சித்தியடையத் தவறி பொலிடோல் குடித்து சாக, சவம் பாடசாலையை கடந்தது.. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் அச்சத்துடன் பார்த்துக் கொண்டோம்..
அடடா.. அடிக்காமலும் படிப்பிக்கும் ஓர் ஆசிரியை இந்தப்பாடசாலையில் உண்டா..? சங்கீதம், ஆங்கிலம், தமிழ், சமயம் என்பன அவர் எங்களுக்கு படிப்பித்த பாடங்கள்..
உயரமான தோற்றம், அடர்த்தியான கேசம், நீண்டோடும் பின்னல், காலைப் பனியில் குளித்த ரோஜாக்கள் கூந்தலில், வண்ண வண்ணச் சேலைகள் கட்டி, நம்மை குறைந்தபட்சம் முட்டாள் என்றுகூட திட்டாத உயர்வழக்கு தமிழில் பேசியபடி கற்பித்தலை ஆரம்பித்தார்.
இந்த இடத்தில் நிறுத்தி மறுபடியும் அவசர அவசரமாக சிதம்பராவை பார்க்க வேண்டியிருக்கிறது.. இல்லையேல் வாசகர்கள் சிதம்பரா என்ற தெய்வீகக் கலைக்கூடத்தை தப்பாக நினைத்துவிடுவீர்கள் என்று பயப்படுகிறேன்..
தற்கொலை செய்த மாணவனின் சவத்தின் பறை ஒலி கேட்கிறதல்லவா.. எல்லோரும் அனுதாபம் கொண்டு அவன் முகத்தைப் பார்க்க ஓடினோம் இரட்ணம் மாஸ்டர் ஓடிவந்து விரட்டி அடித்தார்..
"அந்த ....... பார்க்கவா போகிறீர்கள்.. கழிவு.. கழிவு... " என்று இறந்து போன மாணவனை தாறுமாறாக திட்ட ஆரம்பித்தார்..
ஐயையோ இறந்தவனை இப்படித் திட்டலாமா..?
"ஆம்..! பரீட்சைக்காக தற்கொலை செய்பவன் மதிப்பிற்குரிய ஒருவன் அல்ல தற்கொலை தவறு, குற்றம், கிரிமினல் செயல் .." என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
அவருடைய பிரம்பு உயிர் குடிப்பதல்ல உயிர் காப்பதென்பதை அன்றுதான் கண்டு கொண்டேன்.. படிப்பிக்கும்போது இரட்ணம் மாஸ்டர் ஒரு காலமும் அடிக்கமாட்டார் என்பது பலர் அறியாத உண்மை.
1970 ல் இருந்து சனி, ஞாயிறு பாடசாலை மூடினாலும் நான், நண்பன் தர்மலிங்கம் போன்றவர்கள் சனி, ஞாயிறு கூட பாடசாலை போய் வருவோம்.. எல்லோரும் எம்மைப்பார்த்து சிரிப்பார்கள்.. 1974ல் நான் சிதம்பராவை விட்டு வெளியேறிய கடைசிநாள் வந்தது, நானும் பின்நாளில் சிதம்பராவின் அதிபராக இருந்த நண்பர் அரியரட்ணமும் வீடு போக மறுத்து கதறிக்கதறி அழுதோம்.
நாலாம் வகுப்பு சிறுவனாக இன்றும் என் மனம் தினசரி இதையே பாடுகிறது..
இதுதான் சிதம்பரா.. இதுதான் கல்வி.. எப்போதும் கல்வி என்பது முதலில் கசக்கும் போகப்போக இனிக்கும்.. போதுமா.. இனி மறுபடியும் கமலா டீச்சருக்கு வருகிறேன்..
அந்தக்காலத்திலே கலையில் ஈடுபட வேண்டும் என்ற விதையை எமது உள்ளத்தில் தூவியவர் கமலா டீச்சர்தான்.. இதனால் நாடகம், நடிப்பு, எழுத்து என்று பல்துறை கலை ஆற்றல்களும் எம்முள் சுடர்விட ஆரம்பித்தன.
ஒவ்வொரு புதன் கிழமையும் பாடசாலையில் மூன்று வகுப்புக்களை இணைத்து மாணவர் மன்றக்கூட்டம் நடக்கும் அதில் பாடுவது, பேசுவது, எழுத்தை வாசிப்பது என்று எமது கலைத்துவ ஆற்றல்களை வெளிப்படுத்துவோம்.
அந்த நேரத்தில் சிறுகதைகளையும் எழுத ஆரம்பித்தேன்.. நாம் சிறுகதைகளை எழுதுவதற்கு கடதாசிகளை சிதம்பராவில் கிளாக் கந்தசாமி தருவார்.. நல்லா எழுதுங்கோ என்று ஊக்குவிப்பார்..
அப்போது தேனீ என்ற சிறுகதையை எழுதியிருந்தேன்.. அக்காலத்தே மித்திரன் பத்திரிகையில் தினசரி ஒரு சிறுகதையை பிரசுரித்து வந்தார்கள், இதனால் மித்திரனுக்கு அதை அனுப்பினேன்.
என்ன ஆச்சரியம் எனது பெயரில் அச்சு ஊடகம் ஒன்றில் சிறுகதை வந்திருந்தது.. ஆனால் தேனீ என்ற தலைப்பை மாற்றி கமலா டீச்சர் என்று கதைக்கு பெயரிட்டிருந்தார்கள்.
நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு இதை கமலா டீச்சரிடம் காட்டாதே.. அவர் என்ன நினைப்பார் என்று மிரட்டினார்.. இதனால் பேசாமல் இருந்துவிட்டேன், ஆனால் கமலா டீச்சர் அதைப்படித்ததாகத் தெரியவில்லை.. நானும் சொல்லவில்லை..
அதனால்தான் இந்த ஆக்கத்திற்கு சிந்திக்க வேண்டிய சிறுகதை கமலா டீச்சர் என்று மகுடமிட்டுள்ளேன்.
வாழ்வில் என்றுமே ஓர் எழுத்தாளன் பத்திரிகையில் வந்த முதல் கதையை மறக்க முடியாது, அதுபோல கமலா டீச்சரையும் மறக்க முடியாது என்பதை அந்த நிகழ்வு எனது மனதில் ஆழமாகப் பதித்தது.
அதன் பிறகு கமலா டீச்சரை கூர்ந்து அவதானித்தேன்..
அவர் சாதாரண ஆள் அல்ல.. ஆங்கிலம், சங்கீதம் இரண்டையும் துறைபோகக் கற்ற ஒருவர் என்பது ஆச்சரியம் தந்தது.
சிறுவயதிலேயே சங்கீதப்பாடலில் அகில இலங்கையில் முதலிடம் பெற்ற கானக்குயில் என்பதை அறிந்து கொண்டேன்.
அக்காலத்தே தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை மிகச்சிறந்த கதாப்பிரசங்கியாக இலங்கை கொண்டாடியது, சிதம்பராவுக்கும் அவர் நவராத்திரி விழாவில் உரையாற்ற வந்திருக்கிறார்.
அவர் அடுக்கு மொழியற்ற சீரான நடையில் பேசும் ஒரு பேச்சாளர், சங்கீதப்பாடல்களை அவர் பாடுவதாக தெரியவில்லை, ஆனால் அவரை வரவேற்று திருமதி ஜெகானந்தகுரு ஆசிரியை பேசிய வரவேற்புரையை கேட்டபோது தங்கம்மா அப்பாக்குட்டியை விட அருமையாக இருந்தது..
பின் ஒரு நாள் கமலா டீச்சரின் இசைப்பிரசங்கத்தைக் கேட்டபோது.. அவருடைய திறமை தங்கம்மா அப்பாக்குட்டிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே சவால் விடுமளவுக்கு தரத்திலும், எடுத்துரைப்பிலும் காத்திரமானதாக இருந்தது.
அதைத்தவிர பெண்ணியம் பேசுவோர் சிந்தித்துப்பார்க்க வேண்டிய ஒரு பாத்திரமாகவும் அவர் இருந்தார்.. சிறுமியாக இருந்தபோது பாடசாலையில் ஓர் ஆசிரியர் பிரம்பால் அடித்தபோது அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.. பெண் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடித்தல் கூடாது என்று போரிட்டுள்ளார்.
அத்துடன் விட்டதாகவும் தெரியவில்லை.. பெண்கள் ஆண்களிடம் அடிமைப்பட்டு இரண்டாந்தர பிரஜைகளாக நடந்த அக்காலத்தில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் தனது அன்றாட வாழ்வை வகுத்துக் கொண்டு பெண்களுக்கு வாழ்வால் வழிகாட்டினார்.
பாரதி கண்ட பெண்ணாக நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச்செருக்குடன் இருக்க வேண்டுமென பாடசாலையிலும், வல்வை வீதியிலும் பெருமையுடன் வலம் வந்தார்.
"ஒரு பெண்ணின் பெருமையை குலைக்காத கணவனே முக்கியம் " என்று கூறியே தம்மை மணமுடித்ததாக அவருடைய கணவன் திரு. பெரியதம்பி ஆசிரியர் கூறுவார்.
கமலா டீச்சர் படிப்பித்த பாடசாலைகளில் எல்லாம் தவறான பாதையில் செல்லும் ஆசிரியர்களை துணிந்து கண்டித்திருக்கிறார்.. நீதியின் காவலனாக ஓர் ஆசிரியை நிற்க வேண்டுமென தொடர்ந்து பாடுபட்டார்.
சிதம்பராக் கல்லூரி கட்டிட நிதிக்காக நடத்திய விழாவில் பெண்களை வைத்து இவர் இயக்கிய நாடகத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன்.. அதன் தரம் இன்றும் என்னை அதிசயிக்க வைக்கிறது, அவ்வளவு தமிழ் நேர்த்தி, நடிப்பின் முதிர்ச்சி போன்றவற்றை மாணவிகளிடமிருந்து வெளிக்கொணர்ந்தார்.
ஒவ்வொரு பெண்களும் தெரு வெளியில் பெண்ணாக வாழ முன்னர் கமலா டீச்சரை ஒரு தடவை பார்த்து அவரை தனக்கு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்ற தோரணையில் பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்ல அன்றைய வல்வை முழுவதிற்குமே முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்.
பிற்காலத்தில் கமலா டீச்சரை கனடா ரொரன்ரோவில் கண்டேன்.. அவர் எழுதிய ஒவ்வொரு புத்தகமும் எனக்கு கிடைத்துக் கொண்டிருந்தது..
அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அவர் வல்வை என்ற கூட்டுக்குள் சிறகடிக்கும் ஒரு பறவையல்ல.. அகில இலங்கைக்குமான எழுத்தாளர் என்பதை படைப்புக்களில் இருந்து கண்டு கொண்டேன்.
கமலா டீச்சரை வல்வைக்குள் முடக்கிவிடாமல் இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் என்ற இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென அவருடைய படைப்புக்கள் எடுத்துரைத்தன.
அதனால்தான் இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் மரணமென அவர் இறந்தபோது செய்தித்தலைப்பு தீட்டியிருந்தேன்..
வல்வை என்றால் வல்வையில் உள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள் நமக்கு ஏன் வம்பு என்று இலங்கை எழுத்தாளர்கள் விலகிக் கொள்வது வழமை.
வல்வையில் உள்ள உள்ளுர் போட்டிகளால் வல்வை கலைஞர்களை வல்வையே கைவிடுவதும் வரலாறு... கடைசி வல்வை கலைஞர்கள் இரண்டும் கெட்டான் நிலையை அடைவதும் வரலாறு..
கமலா டீச்சர் விடயத்திலும் அதுதான் நடந்தது, இலங்கை எழுத்தாளர்கள் அதுபற்றி அதிகம் சிந்தித்திருக்க வேண்டும், விமர்சகர்கள் தமது கடமையை செய்திருக்க வேண்டும், செய்யவில்லை... அல்லது போதாது.. காரணம் கமலா டீச்சர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகும்.
ஆனாலும் கனடா அவரை கைவிடவில்லை அவருடைய இறுதிச்சடங்கில் வைக்கப்பட்ட மலர் வளையங்கள் வல்வை என்ற வட்டத்தை விட்டு அவர் நெடுந்தூரம் பயணித்திருப்பதைக் காட்டியது, ஏராளமான வெளியூரவர்கள் அவரை அஞ்சலித்திருந்தார்கள் இது தமக்கு ஆச்சரியம் தந்ததாக கனடாவில் இருந்து வல்வை நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்.
நான் கனடாவுக்கு எனது திரைப்படங்களை காண்பிக்கச் சென்றபோது தன்னால் படுக்கையை விட்டு எழும்பி வர முடியாது," இருந்தாலும் என்ன" டிக்கட்டை கொடு என்று இரண்டு தடவைகளும் டிக்கட்டுக்களை வாங்கினார்.
எனது கதைகளை படித்து என்னை ஊக்கப்படுத்தினார்.. வந்தாரை வரவேற்கும் வல்வை பண்பை கனடாவில் கமலா டீச்சர் வீட்டில் கண்டு நான் பேரானந்தம் அடைந்தேன்.
என்னோடு வந்த நண்பர் கலிங்கராஜன் சொன்னார் கமலா டீச்சர் வீட்டில் உமக்கு இவ்வளவு மரியாதை கிடைத்ததை என்னால் நம்பமுடியவில்லை என்றார்.
நான் சிதம்பராவில் இருந்து வந்திருக்கும் கலைஞன்.. எல்லா சிதம்பரா ஆசிரியர்களும் தங்கள் தங்கள் மாணவர்களை சொந்தப் பிள்ளைகளாகவே நேசிக்கிறார்கள் இதை நான் பல இடங்களில் கண்டுள்ளேன்.
தமது மாணவரின் வெற்றியில் அவர்கள் வாழ்கிறார்கள்.. கமலா டீச்சரும், பெரியதம்பி மாஸ்டரும் அப்படியே வாழ்ந்தார்கள்..
கமலா டீச்சர் ஒரு நுண்பாகக் கலைஞர் அவரை சாதாரண மக்களால் விளங்கிக்கொள்ளவோ வியாக்கியானப் படுத்தவோ முடியாது.. அதற்கு தனியான திறமை வேண்டும்.
பொறாமை இல்லாமல்.. கலைஞர்களை நேசித்து, குடும்பத்தை அன்போடு பேணி, ஊரையும், உணர்வையும் போற்றி தமிழ் பற்றுடன் வாழ்ந்த ஒரு வீரம் மிக்க ஆசிரியை கமலா டீச்சர்.
அவருடைய இறுதி அஞ்சலிக்காக ஒரு கவிதை எழுதியிருந்தேன்.. அதை கனடாவில் படித்திருக்கிறார்கள்..
அங்கே இறுதி நிகழ்வுக்கு எமது பாடசாலைத்தோழர் திக்கம் இராஜதுரையும் போயிருக்கிறார்.. அங்கு எனது கவிதையைப் பார்த்து, விசாரித்து சென்ற வாரம் போன் செய்தார்.
சிதம்பராவில் கமலா டீச்சரிடம் படித்த முக்கிய மாணவர்களில் அவரும் ஒருவர்.. கோண்டாவிலில் மணம் முடித்த காரணத்தினால் 42 வருடங்களாக தொடர்பில்லாமல் தேடிக்கொண்டிருந்தேன்.
கமலா டீச்சர் அவரையும் தேடிப்பிடித்து என்னிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றுள்ளார் என்பதை நினைக்கும்போது கண்கள் பனிக்கின்றன.
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. என்று
எங்களுக்கெல்லாம் தமிழ் உணர்வூட்டிய அந்த மாதரசியை மறக்கத்தான் முடியுமா...
தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலுக்கு பாவனை கொடுக்கும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவை சினிமாவிற்கு கொண்டு சேர்த்தவரும் ஒரு வல்வையரே என்பதை பின்னொரு பொழுதில் எழுதுவேன்...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.