மருத்துவமனை அமைக்க ஒரு இலட்சம் கேட்டபோது 10 இலட்சம் தர இணங்கினார் பிரபாகரன் – சிவாஜிலிங்கம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2017 (சனிக்கிழமை)
யாழ்ப்பாண மாவட்டம் வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நாம் ஒரு இலட்சம் கோரியபோது அவர் 10 இலட்சம் தருவதற்கு இணங்கினார் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று வடமாகாணசபையின் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையிட்டு வடக்கு மாகாணசபையின் மூன்று வருடகால செயற்பாடுகள் தொடர்பான அமர்வு நடைபெற்றவேளை அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
2003ம் ஆண்டு காலப்பகுதியில் ஐ.நா அகதிகளுக்கான ஸ்தாபனத்தின் யாழ்.பணிப்பாளராக இருந்த திருமதி மொறிஸ் மொஹான் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் யாழ்ப்பாணத்தில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலையை உருவாக்க இணக்கம் தெரிவித்தார்.
அந்த வைத்தியசாலை அதி நவீன வசதிகளுடன் ஒரு நோயாளியின் குடும்பமே தங்கியிருந்து வைத்தியம் பெறும் வகையில் வடிவமைக்க திட்டமிடப்பட்டது.
அதற்காக தமிழீழ விடுதலை புலிகள் வல்வெட்டித்துறையில்அமைத்திருந்த நிலக்கீழ் மருத்துவ மனையை புற்றுநோய் மருத்துவ மனையாக மாற்றும் யோசனையை நாங்கள் முன்மொழிந்தோம்.
அப்போது அப்போதிருந்த அமெரிக்க தூதுவர் அல்சி பில்ஸ் அந்த மருத்துவனை புலிகளின் மருத்துவமனை என்பதால் அதற்கு புலிகள் பகிரங்கமாக ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் எனவும் புலிகள் ஒருதொகை நிதியை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
அதற்கமைய நாம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் பேசியிருந்தோம். அப்போது புலிகள் சார்பில் 1 லட்சம் ரூபாய் கேட்டோம். அவர் ஒரு லட்சம் எப்படி வழங்குவது அழகல்ல எனவும் அதற்காக 1 கோடி வழங்க தன்னிடம் பணம் இல்லை எனவும் கூறி, 10 லட்சம் ரூபாய் பணத்தை தருவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
அத்துடன், அதனை சிவில் உடையில் வந்து தருவதற்கும் இணங்கினார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் அது தொடர்பாக பேசப்பட்ட போது இங்குள்ள தமிழ் தலைவர்கள் சிலர் அதனை குழப்பினார்கள்.
அப்போது வல்வெட்டித்துறையில் கட்ட விரும்பாவிட்டால் யாழ்ப்பாணத்தில் வேறு பகுதியிலாவது கட்டுங்கள் என நான் கேட்டேன்.
அதனையும் அவர்கள் மறுத்தார்கள். இப்போது ஒரு முறையான மருத்துவ வசதிகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை இல்லாமல் எமது மக்கள் கஸ்டப்படுகின்றார்கள் என சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.