வெளிநாட்டு பிரஜையொருவரை திருமணம் செய்யவிரும்பும் இலங்கை பிரஜை இது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் அனுமதியை பெற்ற பின்னரே திருமணப்பதிவை முன்னெடுக்கவேண்டும் என பதிவாளர் நாயக திணைக்களம் சுற்றறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வாழ்க்கை துணைவர்கள் தங்கள் உடல்நலம் குறித்து ஆவணமொன்றை சமர்ப்பிக்கவேண்டும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களா அல்லது தடுப்பூசிசெலுத்திக்கொண்டவர்களா என்ற விபரங்களையும் வெளியிடவேண்டும் என பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தாங்கள் ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் கிசிச்சைக்கான செலவு அனைத்தையும் பொறுப்பேற்கவேண்டும் என்பது தங்களிற்கு தெரிந்துள்ளது என்ற ஆவணத்தையும் சமர்ப்பிக்கவேண்டும்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவின் பேரிலேயே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என பதிவாளர் நாயகம் டபில்யூஎம்எம்பி வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற தீயநோக்கங்களிற்காக பல வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்ய முயல்வதை அவதானிக்க முடிகின்றது அதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது இலங்கையின் திருமண சட்டங்களில் உள்ள பலவீனங்களை சில தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்டவாறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.