உடுப்பிட்டியில் இன்று இடம்பெற்ற மருத்துவ முகாம், பலர் பயன்பெற்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)
யாழ் உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று இன்று 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமாகி நண்பகல் 11.00 மணி வரை இடம்பெற்றது.
முன்னதாக உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத் தலைவர் எஸ். தயானந்தம் அவர்களினால் மருத்துவக் குழுவினர்கள் வரவேற்கப்பட்டு, உடுப்பிட்டி கிராமத்தில் மருத்துவ முகாமின் அவசியம் குறித்து சிற்றுரை ஒன்றையும் அவர் ஆற்றினார்.
தொடர்ந்து இந்த சிறப்பு மருத்துவ முகாமுக்கு தலைமையேற்க வந்திருந்த வைத்திய கலாநிதி ம. அரவிந்தன் (அகஞ்சுரக்கும் தொகுதியியல் நிபுணர்) அவர்கள் தொற்றா நோய்கள் குறித்த சிறிய உரை ஒன்றினையும் ஆற்றினார்.
அதில் அவர் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
இவ்வாறான மருத்துவ முகாம்களினை கடந்த வருடத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் போன்ற அனைத்து பிரதேசங்களிலும் கிட்டத்தட்ட 60 முகாம்களுக்கு மேல் நடத்தி வந்திருக்கின்றோம். இதன் மூலம் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்களை பரிசோதித்து இருக்கின்றோம்.
ஆரம்பத்திலேயே நோய்களைக் கண்டறிவது தான் இந்த மருத்துவ முகாமின் முக்கிய நோக்கமாகும். பலருக்கும் நோய்கள் இருக்கலாம், ஆனால், அவை கண்டறியப்படாமல் இருக்கலாம். குறிப்பாக நீரிழிவு, இருதய நோய் போன்ற இந்த நோய்களை தொற்றா நோய்கள் என்றும் கூறுவர். இவை எமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணிகளால் ஏற்படுகின்றது.
இவற்றை எல்லாம் நாம் முளையிலேயே கிள்ளி எறிவோமாக இருந்தால் நாம் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். அத்துடன் ஆரோக்கியமான சமுதாயத்தையும் கட்டியெழுப்பலாம். பாடசாலைப் பிள்ளைகளுக்கு கூட நீரிழிவு நோய் இருக்கின்றது.
இதற்கு காரணம் இன்றைய காலத்தில் மேற்கத்தைய கலாசாரத்தை பின்பற்றி வாழும் வாழ்க்கை முறையாகும். இதன் மூலம் வருகின்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் தான் இவ்வாறான மருத்துவ முகாம்களை நடாத்தி வருகின்றோம். இதன் நோக்கம் அனைவரையும் பரிசோதிப்பதாகும். இதனால் தான் உங்கள் இடத்திற்கே வந்து இவ்வாறான முகாம்களினை நடாத்தி வருகின்றோம்.
இதன் மூலம் பலருக்கு முதன் முறையாக நீரிழிவு, கொலஸ்ரோல் இருப்பதனை கண்டறிந்துள்ளோம். அப்படி நீரிழிவு நோய் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களை யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள நீரிழிவு மையத்துக்கு (Diabetic Center) அழைத்து மேலதிக சிகிச்சைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகின்றோம். என்று தெரிவித்தார்.
இன்றைய மருத்துவ முகாமில் 40 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு கொலஸ்ரோல், நீரிழிவு, குருதியமுக்கம் மற்றும் பொதுவான உடல் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஆர். பரமேஸ்வரன் அவர்கள் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கான பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கினார்.
மருத்துவ முகாமில் பங்கேற்ற பலரும் குறிப்பாக முதியவர்கள் இந்த முகாம் தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.