யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி - 2015 ( JITF - 2015 ) நாளை முதல் 3 தினங்கள் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)
இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தகக் கண்காட்சி நிகழ்வாக யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ( Jaffna International Trade Fair ) தொடர்ந்து ஆறாவது வருடமாக எதிர்வரும் ஜனவரி 23,24,25ஆம் திகதிகளில் யாழ். மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். வர்த்தக தொழில் மன்றத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்படும் யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி 2015 இற்கான பிரதான அனுசரணையை ஸ்ரேலிங் ஓட்டோ மொபைல் நிறுவனம் வழங்குகின்றது.
உள்நாட்டு வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த உற்பத்தி, விற்பனை மற்றும் வியாபார நிறுவனங்களுடன் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் கலந்து கொள்ளும் இக் கண்காட்சி மூலம்; நிறுவனங்கள் தமது உற்பத்தி மற்றும் விற்பனைப் பொருள்களை மக்கள் மத்தியில் இலகுவில் கொண்டு செல்வதற்கும் மேலதிக முதலீட்டுக்களை பெற்றுக் கொள்ளவும் இக்கண்காட்சி வழிசமைக்கின்றது.
இக்கண்காட்சியில் நிர்மாணம், உபசரிப்பு, உணவு, பானவகை, பொதியிடல், கனங்கள், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம், நிதியியல் சேவைகள், ஆடைத்துறை, விவசாயம் மற்றும் நுகர்வோர் உற்பத்திகள் போன்ற பலதுறைகளை உள்ளடக்கிய 250 ற்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளது.
மேலும் ஒருவருக்குரிய கண்காட்சி அனுமதி நுழைவுச்சீட்டு 25ரூபாவும் பாடசாலை மாணவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் யாழ். வர்த்தக தொழில் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி வடக்கு மக்களுக்கு விருந்தாக அமையவுள்ளதொடு நுகர்வோரின் பல் தெரிவு வியாபாரச் சந்தையாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இருப்பினும் வட மாகாண உள்ளூர் உற்பத்தி மற்றும் வியாபார நிறுவனங்களுக்கான சந்தை என்பது குறுகியதாகவும் போட்டித்தன்மை மிக்கதாகவும் உள்ளதோடு முதலீடுகள் செய்யப்படாது காணப்படுகின்றது. இவற்றுக்கான உரிய முதலீடு மற்றும் சந்தை விரிவுபடுத்தல்கள் அமையுமிடத்தே உள்ளூர் நிறுவனங்களும் வடக்கின் சக்திவாய்ந்த வர்த்தக வளர்ச்சியை ஏற்ப்படுத்த முடியும்.
கடந்த காலங்களில் வடக்கின் வர்த்தகமானது வெறுமனே வங்கி மற்றும் குத்தகை வியாபாரத்தை சார்ந்த வளர்சியை நோக்கியே செல்கின்றது, நாட்டின் வளர்சிக்கு தேசிய உற்பத்திகளின் வளர்சிப் போக்கே மிக முக்கியமானதாகும். எனவே எம்மவரின் சந்தைப்படுத்தல்களில் நாமும் முதலீடு செய்வதன் மூலம் சக்திவாய்ந்த வர்த்தக வளர்ச்சியை ஏற்ப்படுத்த முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.