வல்வை நகராட்சி மன்ற பிரதேச மக்களே.....தெரிந்து கொள்ளுங்கள் - சுயேற்சைக்குழு தலைவர் ச.செல்வேந்திரா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2018 (வியாழக்கிழமை)
வல்வை நகரசபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீருவில் பூங்கா தொடர்பான தனது நிலைப்பட்டை விளக்கி சுயேற்சைக்குழு தலைவர் திரு. ச.செல்வேந்திரா அவர்கள் வெளியிட்டுள்ள விபரத்தின் எழுத்து வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
18.07.2018
வல்வை நகராட்சி மன்ற பிரதேச மக்களே......
தெரிந்து கொள்ளுங்கள்......
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்கள் சபையின் 4வது மாதாந்தக்கூட்டம் இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் நாங்கள் 7 உறுப்பினர்கள் அமர்விலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானோம்.
ஏன் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று என்று எமது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.
சென்ற அமர்வின் போது தீருவில் பூங்கா திடலில் இன்னுமொரு தூபி அமைத்து போரில் உயிர்நீத்த அனைத்து பொதுமக்கள் போராளிகளையும் ஞாபகப்படுத்தவேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இத்தீர்மானம் 8-7 என்ற எண்ணிக்கையால் எம்மால் தோற்கடிக்கப்பட்டது.
இத்தீர்மானம் நாம் எதிர்த்ததற்கான காரணம் என்னவென்றால், தீருவில் தூபி எமது ஒரு வரலாற்றுச் சின்னம் இந்திய அரசு தழிழர்களை ஏமாற்றிய காரணத்தால் 12 தமிழிழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் உயிர் துறக்கவேண்டி ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தை ஞாபகப்படுத்தி நின்ற ஒரு சின்னம். அத்தோடு அங்கு கிட்டுவுக்கும் போராளிகளுக்கும் நினைவுச் சின்னங்களும், சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வரலாற்றை மளுங்கடிக்காது, போரில் உயிர் துறந்த அனைத்துத் தமிழர்களுக்கும் நினைவுத் தூபி அமைப்பது அவசியம் அதற்கு தகுந்த வேறு பல இடங்கள் உள்ளன. ஆகவே தீருவிலில் இன்னுமொரு தூபி வேண்டாம் இப்போதைக்கு பூங்காவை அபிவிருத்தி செய்வோம் தூபி வேண்டாம் என்றே எடுத்துக் கூறினோம்.
தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இவர்கள் ஓயவில்லை யாழ்ப்பாணத்தில் உள்ள சில அரசியற் கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பை பெற்று 8-7 என்ற கணக்கில் தமது தீர்மானத்தை இம்முறை நிறைவேற்றியுள்ளார்கள்.
இவர்களின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தோர் விபரம்-
இது மாத்திரமல்ல, புதிய நகராட்சி மன்றம் செயற்படத் தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே நாம் பல பிரேரணைகளை முன்வைத்து இப்பிரதேசத்தை முன்னேற்றுவதற்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், அவற்றை நிறைவேற்ற தேவையான பெரிய அளவிலான நிதியைப் பெறுவதற்கும் அயராது செயலாற்றி வருகிறோம்.
ஆனால், தவிசாளரும் அவர் சார்ந்த உறுப்பினர்களும் தமது தூர நோக்கற்ற குறுகிய அரசியல் நோக்கங்களை நகராட்சி மன்றத்தினூடாக நிறைவேற்றுவதற்கே முயற்சித்துக்கொண்டிருப்பது அவர்களின் செயற்பாட்டினுடாகத் தெரிகிறது. நாம் தீருவில் பூங்காவை இந்த நாட்டிலேயே ஒரு சிறந்த பூங்கா என்று சொல்லும் அளவிற்கு முன்னேற்றும் நோக்குடன் ஒரு கட்டடக் கலை நிபுணரின் சேவையைப் பெற்று முழுமையான ஒரு திட்டத்தைத் தயாரித்திருந்தோம். இப்பிரதேச மக்கள் பலரும் பங்குபற்றிய ஒரு தெளிவுபடுத்தும் பொது கலந்துரையாடலையும் நடாத்தி இருந்தோம்.
இம்முயற்சி நடந்து கொண்டிருந்த அதே சமயம் நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தவிசாளரும் செயலாளரும் ஒப்பமிட்டு, பூங்காவிற்குத் தயார் செய்து கொண்டிருக்கப்படும் முழுமையான வரைபடத்தின் அடிப்படையில் அல்லாது ஒரு தேவையற்ற நடைபாதையை 46 லட்சம் ரூபா செலவில் அமைப்பதற்கு முதலமைச்சர் காரியாலயத்திற்கு தரவுகள் அனுப்பியிருந்தார்கள். முதலமைச்சர் காரியாலயத்தால் இது கேள்வி கோரலுக்கும் விடப்பட்ட பின்பு தான் இவ்விடயம் எமக்குத் தெரியவந்தது.
உடனடியாகவே நாங்கள் 10 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இப்பிழையான திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுத்தோம். முதலமைச்சரின் செயலாளரையும் உள்ளுராட்சி ஆணையாளரையும் நேரில் சந்தித்து நிலமையை விளக்கினோம்.
கேள்வி கோரல் அடிப்படையில் ஒப்பந்தகாரர் ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட்டு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்ததால் ஒப்பந்தம் செய்வதை தடுத்து நிறுத்த முடியாது போய்விட்டது. இருந்த போதும் பிழையான நடைபாதை அமைக்காமல் எமது கட்டடக்கலை நிபுணர் வரைந்த வரை படத்தின் அடிப்படையில் நடைபாதை அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதில் எமது முயற்சி வெற்றிகண்டுள்ளது.
பழையான தரவுகளை முதலமைச்சர் காரியாலயத்திற்கு அனுப்பிய கடிதப்பிரதியை இவ்விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடமிருந்து நாம் பெற்றிருந்தோம். இதை அறிந்த தவிசாளர் தனது அனுமதியின்றி எவருக்கும் ஆவணப் பிரதிகள் வழங்கக்கூடாது என்றும், சகல அலுவலர்களுக்கும் இவ்விடயம் தெரியப்படுத்தவேண்டும் என்றும் செயலாளருக்கு 08.06.2018 திகதியிட்ட கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார்.
தவிசாளரின் இச்செயல் உறுப்பினர்களின் உரிமையை மறுக்கும் ஒரு பாரிய பிழையான நடவடிக்கையாகும். இவரின் இந்த பிழையான செயற்பாட்டால் உறுப்பினர்களாகிய நாம் மக்கள் சார்பில் நகராட்சி மன்றில் செயற்படுவதற்குத் தடங்கல் ஏற்படுத்தப்பட்டிருப்பது மாத்திரமன்றி கௌரவக்குறைவுக்கும் நாம் முகம் கொடுக்கவேண்டிய நிலமையை ஏற்படுத்தியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.