பல்கலை மாணவர் கொலையைக் கண்டித்து வடக்கில் நாளை பூரண ஹர்த்தால்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
கடந்த 21ஆம் திகதி யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் யாழ்.பல்லைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று மாலை 3.30 மணிக்கு தமிழ்தேசியகூட்டமைப்பின் 4 அங்கத்துவ கட்சிகளும் மேலும்2 கட்சிகளும் இணைந்து அவசரகலந்துரையாடல் ஒன்றை மாலை 5.30 மணி வரையில் நடத்தியிருந்தன.
மேற்படி கலந்துரையாடலின் நிறைவில் சகல கட்சிகளினதும் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்படி ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் 1958ஆம் ஆண்டு தொட க்கம் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் இந்த அரச பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதற்கு தயாராக இல்லை.
கடந்த 21ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரசபயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்பதை சர்வதேசத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தெளிவாக எடுத்து கூறவேண்டும். என்பதற்காகவே இந்த ஹர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது. வடமாகாணத்தில் வர்த்தக அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமது ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றார்கள்.
இதேபோல் அரசியல்கட்சிகளும் தங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இதற்காக சகல அரச நிறுவனங்களும், பாடசாலைகளும் முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுமுழுமையான எதிர்ப்பினை காட்டுவதற்கு தமிழ்மக்கள் ஒன்றிணைய வேண்டும். என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த ஹர்த்தால் அறிவிப்பில் இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ, மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகியன கலந்துகொண்டிருந்தன.
மேற்கண்டவாறு இன்றைய இணையதளப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.