அடுத்த வருட இறுதிக்குள் ஆனந்தன் நீச்சல் தடாகம்? கூட்டத்தில் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)
கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நீச்சல் தடாகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வல்வை ரேவடிக் கடற்கரையில் அமைந்துள்ள தற்பொழுது சுங்க இலாகாவிற்குச் சொந்தமான காணியை மீண்டும் பார்வையிட்ட பின், வல்வை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் மகளீர் சிறுவர் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜியகலா மகேஸ்வரன், யாழ் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரதி சுங்கப் பணிப்பாளர் மற்றும் பருத்தித்துறை பிரதேசசபைத் தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் பிரகாரம் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாக வலயத்தில் நீச்சல் தடாகம், பார்வையாளர் அரங்கம், உடைமாற்றும் கூடங்கள், தங்குமிடம் போன்ற வசதிகள் கொண்டதாக அமையவுள்ளது. இதற்கான திட்ட வரைபிற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சிலுள்ள நிபுணர்கள் மற்றும் பொறியியலாளர்களின் உதவிகளைப் பெறுவது என்றும் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியையும் பெற்று இறுதி வடிவம் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வல்வெட்டித்துறை சுங்க இலக்கா பிரிவின் காணியை வல்வை நகரசபையிடம் கையளிப்பது என்றும், பதிலுக்கு வல்வை நகரசபை தன்னிடம் உள்ள காணியை வல்வெட்டித்துறை சுங்க இலக்காப்பிரிவினருக்கு கையளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த விடயங்களை 6 வாரங்களில் பூர்த்தியாக்குமாறும் அடுத்த வருடம் 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாக வலயத்தை திறந்து வைக்கக்கூடிய விதத்தில் வேலைகளை வேகமாக முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் மங்கள சமரவீர ஆனந்தனின் மனைவி திருமதி மனல் ஆனந்தனின் நெருங்கிய உறவினர் எனபது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.