என்னையும் என் நெடுநாளைய - நெருங்கிய நண்பன் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகத்தையும் 53 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நுகத்தடியில் பிணைத்தவை அரசியலும் பொதுசேவையும் தான்.
நண்பன் "குலம்' தங்கை 'ஜோதி' தம்பதிகளின் திருமகள் அனைய தனிமகள் சுமங்களா. அவள், 19 -07 -2017 அன்று சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்கிறாள் என்ற செய்தி எனக்கு பெருமிதத்தையும் பெருமகிழ்வையும் தருகின்றது.
07 -09 -1976 அன்று சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்த நான் அதே தினத்தில், அதற்கு முன்னர், கொள்ளுப்பிட்டியில் ALFRED HOUSE GARDENS வீதியில் அப்போது குடியிருந்த சட்டமாமேதை S.J.V.செல்வநாயகம், Q.C அவர்களிடம் சென்றிருந்தேன், ஆசீர்வாதம் பெறுவதற் காக நடுங்காத கொள்கைகள் கொண்ட அப் பேரறிஞர் நடுநடுங்கும் தனது இடது கையால் என் கறுப்பு அங்கியை இறுகப் பற்றிப்பிடித்தார். தனது வலதுகையை எனது இடது தோள்மேல் வைத்தார். பின்னர், தனது பொக்குவாய் திறந்து அந்த மூதறிஞர் எனக்கு செய்த போதனை.......
இந்த கறுப்பு "கோற்" ஐப் போட்டுக்கொண்டு நிறைய உழைக்கலாம் எண்டுதான் பலபேர் நினைக்கினம். நிறைய உழைக்கலாம்; நிறைய சேவையும் செய்யலாம்; நீங்கள் இரண்டையும் செய்யுங்கோ.
என் பாச, நேசத்திற்குரிய எங்கள் பிள்ளைச் செல்வமே சுமங்களா ! அந்த மூதறிஞர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். நீ இரண்டையும் செய். அர்ப்பணிப்போடு பொதுப் பணிகளை மட்டும் செய்கின்ற உன் அப்பா செய்யும் தப்பை நீ செய்துவிடாதே.
அமரர் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் வைபவத்தில் பங்கெடுப்பதற்காகவும். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்கள் என்ற மகுடத்தில் மறைந்த மகத்தான தலைவர்கள் பற்றி நான் எழுதிக்கொண்டிருக்கின்ற பனுவலை வெளியிடுவதற்காகவும் 17 -08 அன்று இலங்கைக்கு வருவேன். மீளவும் எனது வாழ்த்தை என் பிரிய மருகி உனக்கு நேரில் சேர்ப்பேன்.
இன்றைய நிலையில் இலங்கையில் திறமையும் நேர்மையும் கொண்ட சட்டத்தரணி களின் தேவைகளும் சேவைகளும் காலத்தின் கட்டாய தேவைப்பாடுகள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.