வல்வை பிரதேச கடற்தொழிலாளர்களின் இழுவைப் படகு மீன்பிடி விவகாரத்தை தீர்க்க நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2020 (சனிக்கிழமை)
வடமராட்சி, வல்வெட்டித்துறை பிரதேச கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தத் தகுந்த சேற்றுப் படுகைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குறித்த ஆய்வு நடவடிக்கைகளை நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து றோலர் எனப்படும் இழுவைப் படகுகளை பயன்படுத்தக்கூடிய கடல் பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டதும் இதுவரை வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் மத்தியில் நிலவிய இழுவைப் படகு தொழில் தொடர்பான முரண்பாடுகள் முற்றுப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இழுவைப் படகு மீன்பிடி முறையினால் கடல் வளம் பாதிக்கப்பட்டுவதாக கண்டறியப்பட்டதன் காரணமாக 2017ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இழுவைப் படகு தடைச் சட்டத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்ட சேற்றுப் படுகைகள் நிறைந்த பிரதேசத்தில் மாத்திரமே இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படமுடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
எனினும், வல்வெட்டித்துறையில் இழுவைப் படகுகள் பயன்படுத்தக் கூடிய சேற்றுப்படுகைள் அடையாளப்படுத்தப்படாத நிலையில், குறித்த பிரதேசத்தில் தற்போது சுமார் 40 இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சுமார் 160இற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பயன்படுத்துவதனால் தமது கடல் வளம் பாதிக்கப்படுவதாக குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஏனைய கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலாளர் சங்கங்களும் குற்றஞ்சாட்டி வருவதுடன் எதிர்ப்பும் வெளியிட்டு வருகின்றன. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகளும் தோன்றியுள்ளன.
இதனையடுத்து குறித்த விவகாரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்துக் கலந்துரையாடிய அமைச்சர், சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட தொழில் முறையாக இருக்கும் இழுவைப் படகு மீன்பிடியை உடனடியாக நிறுத்துமாறும் குறுகிய காலப் பகுதிக்குள் நாரா நிறுவனத்தின் ஊடாக இழுவைப் படகு பயன்படுத்தக் கூடிய பிரதேசத்தினை அடையாளப்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.
இதனடிப்படையில், நேற்று முன்தினம் நாரா தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து இழுவைப் படகுகள் பயன்படுத்தக் கூடிய பிரதேசங்களை அடையாளப்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.