தைப்பொங்கல் முதல் மகா கும்பாபிஷேகம் வரை ... பரபரப்பான ஒரு வார நிகழ்வின் தொகுப்பு – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2019 (சனிக்கிழமை)
15-01-2019 செவ்வாய் : உழவர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் காலை உதயம். யந்திர பூசையின் இறுதிநாளான இன்று மகா கும்பாபிஷேகத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகரின் தலைமையில் பல அந்தணர்களின் திருமந்திர உச்சாடனங்களுடன் மதியம் 1 மணிக்கு நிறைவுக்கு வந்தது. இந்த யந்திரத் தகடுகள் பிம்பஸ்தானம் (அம்பாளின் இருப்பிடத்தில் வைத்தல்) செய்யப்படும் வரை நித்திய பூசையில் வைக்கப்பட்டிருக்கும்.
16-01-2019 புதன்கிழமை : அம்மன் முன் வீதி சுற்றாடல் முழுவதும் தாறுமாறாக சிதறிக்கிடந்த பல்வேறு பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வீதிச் சுத்திகரிப்பு வேலையும், கோபுர வாசல் முன்பாக தரைப்பகுதியில் மேடையமைத்து – யாகசாலையமைத்து எட்டுத் திசைகளிலும் நவகுண்டங்கள் அமைக்கும் பணிகளும் புதனன்று நடைபெற்றது.
17-01-2019 வியாழன் : அதிகாலை முதலே பெண்கள் பலபேரும் புறவீதி முழுவதையும் கூட்டிச் சுத்தம் செய்து – நீர் தெளித்து புனிதப்படுத்தினர். அத்துடன் யாகசாலை இறுதிக் கட்ட வேலைகளும் நடைபெற்றன.
18-01-2019 வெள்ளி : மதியம் வரை வெளியே யாக சாலையின் வாழை – தோரண அலங்காரங்கள் நடைபெற்ற அதேவேளையில், கோவிலின் உள்புறம் பிம்பஸ்தானம் செய்வதற்கான ஆயத்தங்களும், மறுநாள் சனியன்று ஆரம்பமாக வேண்டிய எண்ணெய்க்காப்பு சாத்தும் வேலைகளுக்கான ஆயத்தங்களும் நடைபெற்றன. 50ற்கும் அதிகமான இளைஞர்கள் மேற்குறித்த வேலைகளில் உற்சாகமாக – முழுமையாக ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
மதிய வேளைக்கு முன்னதாக யாகசாலையின் அனைத்து வேலைகளும் நிறைவுபெற்று, பகல் 1.45ற்கு யாக பூசைகள் ஆரம்பமாயின. நமது குருக்கள் மைய ஓமகுண்டத்திலும், ஏனைய குருக்கள்மார் எட்டு யாக குண்டத்திலுமாக நவகுண்டங்களிலும் யாகம் வளர்க்கப்பட்டது. இந்த யாக பூசையானது நள்ளிரவு வரை நீடித்ததும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளி இரவு 12.30 -1.30 வரையிலான சுபமுகூர்த்த வேளையில், பிம்பஸ்தானம் செய்யப்பட்டது. அதாவது அம்பிகையையும் – ஏனைய பரிவார மூர்த்தங்களையும் பழைய இடங்களில் (சந்நிதிகளில்) நிலை கொள்ள வைக்கும் முக்கிய கிரியை நடைபெற்று விக்கிரகங்களுக்கு மருந்து சாத்தும் பணி நடந்தேறியது.
19-01-2019 சனி : காலை 7 மணிக்கு ஆரம்பமான எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வானது இரவு 9 மணிவரை நடைபெற்றது. எண்ணைக் காப்பு சாத்துவதற்காக பெருந்திரளாக வந்திருந்த அம்பாள் அடியார்கள் கொதிக்கும் வெயிலில் 2, 2 ½ மணி நேரம் காத்திருந்து உள் நுழைந்து மீண்டும் வரிசைகளில் 2 மணிநேர காத்திருப்பின் பின் தெற்கு வாசலினூடாக உள்ளே சென்று, பிள்ளையார் – அம்பாள் – முருகன் – தம்பத்துப்பிள்ளையார் – நந்தி பலிபீடம் – காத்தலிங்கம் – சண்டேஸ்வரி எனும் ஒழுங்கில் எண்ணைக் காப்பு சாத்தும் புனித கைங்கரியத்தை நிறைவேற்றிய மகிழ்வோடு வீடு திரும்பினர்.
பல வருடம் ஊரையே எட்டிப் பார்க்காமல் இருந்த பலபேருடன், லண்டன் –கனடா – அவுஸ்ரேலியா முதலான வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பலரும் வாழ்நாளில் கிடைத்தற்கரிய இந்த சந்தர்ப்பத்தை நிறைவு செய்த திருத்தியுடன், உறவுகளுடன் பேசிச் சிரித்து உறவாடி மகிழ்ந்திருந்த காட்சிகள் பலவற்றையும் காணமுடிந்தது.
எண்ணைக் காப்பு சாத்தும் காரியம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளை காலையிலிருந்து நள்ளிரவு வரை நவகுண்ட யாகம் நடைபெறும் இடத்தில் மந்திர உச்சாடனங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
2௦-01-2019 ஞாயிறு : காலை 7 மணிக்கு ஆரம்பமான எண்ணைக்காப்பு சாத்தும் முக்கிய நிகழ்வானது மாலை 3 மணிவரை தொடர்ந்தது. முதல் நாளைய அனுபவத்தைக் கண்ணுற்ற இளைஞர்கள் ஞாயிறன்று எவரும் வெளியே வெயிலில் வேகாவண்ணம் உள் வீதியிலேயே வரிசைகளை ஒழுங்குபடுத்தி உதவி புரிந்தனர்.
தெற்கு வாசலருகே காத்திருக்கும் இளைஞர்கள் – கைக்குழந்தையோடு வந்தவர்கள் – குழந்தைகளை அழைந்து வந்தவர்கள் – முதியவர்கள் ஆகியோரைத் தனித்தனியே கைப்பிடித்து அழைத்துச் சென்று சந்நிதிகளில் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு உதவியமையும், ஒவ்வொரு சந்நிதானத்திலும் ஏற இறங்க சிரமப்பட்ட அனைவரையும் கைத்தாங்கலாக ஏற்றி இறக்கி அனுப்பியமையும் போன்று இரு நாளும் அவர்கள் ஆற்றிய பணிகளைப் பாரட்டதவர்களே இல்லை. நாமும் அத்தனை இளைஞர்களையும் மனந்திறந்து பாராட்டுகிறோம்.
21-01-2019 திங்கள் :- திங்கட்கிழமையுடன் கூடிய தைப்பூச நன்னாளின் காலைபொழுதினில், புத்தம் புதிய வர்ணத்தில் மிளிர்ந்த ராஜ கோபுரத்தின் மீது கதிரவனின் ஒளிக் கதிர்கள் பட்டுத் தெறித்தன. நவபூரண கும்பங்களும் – அழகிய பட்டுக்குடைகள் நிழல் கொடுக்க – யாக குண்டத்தினைச் சுற்றி வெளி வீதிக்கு வந்தன. மெதுவான – மிக மெதுவான நடையில் கும்பங்கள் வீதியை முழுமையாக வலம் வர ஒரு மணி நேரம் எடுத்தது. மேற்கு வீதியில் கத்தோக்கடி தாண்டி கும்பங்கள் வந்த வேளையிலும், வாசலை அண்மித்த வேளையிலும் இரு தடவைகளில் வானத்தில் வட்டமிட்ட கருடனின் பிரசன்னம் கண்டு அம்பாள் அடியார்கள் தாயே !....தாயே !... எனக் குரலெடுத்துக் குதூகலித்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது . இந்தக் கருட பிரசன்னம் மகாவிஷ்ணுவின் அனுக்கிரகமும் ஆசீர்வாதமுமேயாகும் என குருக்கள் ஜயா பிறிதொரு சந்தர்ப்பத்தில் கூறினார்.
சரியாக 9.1௦ க்கு வாசலுக்கு வந்து சேர்ந்த நவகும்பங்களும், சந்நிதியின் கருவறைகளிலும் – சந்நிதிகளின் தூபியின் கவசத்திற்கும் குருமார்கள் கும்பங்களைக் கைகளில் ஏந்தியபடி சுமுகூர்த்தற்காகக் காத்திருந்தனர். அம்பாள் கருவறையில் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. தண்டபாணிக தேசிகரும், ராஜகோபுரத்தின் மையக் கலசத்தில் தேசிகரின் மருமகன் சிவஸ்ரீ மு. தயாபாரக் குருக்களும், ஏனைய நான்கு கலசங்களிலும் வேறு நான்கு குருமாரும் தாயார் நிலையில் இருந்தனர்.
நேரம் சரியாக 9.36 அம்பாள் கோவிலின் பாலஸ்தானம் செய்யப்பட்ட நாளிலிருந்து மௌனித்திருந்த கண்டாமணி டாண்... டாண்... என பேரொலிகேட்டு அம்பாள் அடியார்கள் புளகாங்கிலும் அடைந்தனர். ஒரே வேளையில் எல்லாச் சந்நிதிகளிலும்கும்பம் சரிக்கப்பட்டதால் அம்பாள் அடியார்கள் இங்குமங்குமாக ஓடியோடிக் கண்டு மகிழ்ந்தனர். அந்தந்த சந்நிதி அருகே வைக்கப்பட்ட கும்பங்களின் அபிஷேகம் நடைபெற்றதும் மூர்த்தங்களுக்குத் தீப ஆராதனை நடைபெற்றன.
சுமங்கலிப் பூசை நிறைவெய்திய பின்னர் அந்தந்த சந்நிதி அருகே வைக்கப்பட்டிருந்த கும்பங்கள் சந்நிதியின் புறப் பக்கச் சுற்றில் வார்க்கப்பட்டன. மகா மண்டபத்தின் நடுப்பகுதியில் வைக்கபப்ட்டிருந்த கண்ணாடியில் அம்பாளின் பிம்ம தரிசனம் காண்பதற்காக மக்கள் முண்டியடித்து முன்னேறினர்.
தொடர்ந்து உள் வீதியின் மைய மண்டபத்தில் வாழ்த்துரைகள் நடைபெற்றன. நல்லை ஆதீனம் சிவஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியர் சுவாமி சிதாஹானந்த அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து அம்பாள் திருக்கோவில் பிரதம குருவும் – இன்றைய மகா கும்பாபிஷேகத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ சோ.தண்டபாணிக தேசிகர் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
75 வயது நிரம்பிய நமது குருக்கள் சோ.தண்டபாணிக தேசிகர் அவர்கள் 15-06-1962 இல் அம்பாள் கோவிலின் பிரதமகுருவாகப் பொறுப்பெற்று இவ்வருட ஜூன் மாதத்துடன் 57 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 57 வருடங்கள் என்பது ஒரு மனிதனின் வாழ் நாளில் மிக நீண்ட காலமாகும். அம்பாள் திருமேனி தீண்டி அபிஷேகித்து பூச்சொரித்து ஆராதித்து வந்ததன் பலன் இது. இது அம்பாள் கொடுத்த வரம். குருக்கள் ஜயா நோய் நொடியில்வாமல் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து அம்பாள் பணி ஆற்றிட அனைத்து அடியார்கள் சார்பிலும் பிராத்திக்கின்றோம்.
குருக்கள் ஜயாவின் சகோதரரான திரு சோ இராமகிருஷ்ணன் ஜயர் (குட்டி ஜயா), கோவிலின் மடப்பள்ளியின் பொறுப்புக்களை ஏற்ற 1967 முதல் இற்றைவரை தம் பணியினை நிறைவாகச் செய்து வருவதும் அம்பாள் அனுக்கிரகமே.
குருக்கள் 2002, 2019 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அம்பாள் கும்பாபிஷேகத்துடன் மொத்தம் 50 கோவில்கள் மகா கும்பாபிஷேகங்களை நடாத்தி வைத்திருக்கிறார். 3௦ ற்கும் அதிகமானோருக்கும் குருப்பட்டம் வழங்கும் நிகழ்வினையும் நிறைவு செய்துள்ளார். குருக்கள் ஜயாவின் மூத்த மகன் நடைபெற்று முடிந்த மகா கும்பாபிஷேகத்திற்காக பெருந்தொகை பண உதவி புரிந்தமையும் இங்கே குறிப்பிட வேண்டியது.
உரை நிகழ்வுகள் நிறைவு பெற்ற பின்னர், மகா அபிஷேகம் ஆரம்பமாயிற்று. அம்பிகைக்கும் ஏனைய பாரிவார மூர்த்தங்களுக்கும் அபிஷேகம் நடைபெறுவது மகா அபிஷேகம் எனப்படுகின்ற மண்டாலபிஷேகம் ஆகும். இதன் படி மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளிலிருந்து 45 நாட்கள் மண்டாலபிஷேகம் நடைபெற்று 06-03-2019 புதன்கிழமை மண்டாலபிஷேக பூர்த்தியுடன் நிறைவுக்கு வரும். இந்த நாட்களுக்கிடையே 04-02-2019 வருகின்ற மகோதய தீர்த்தம், அன்று மாலையில் வருகின்ற அபிராமிபட்டர் விழா, ஏனைய வெள்ளிக்கிழமை திருவிழா நாட்கள் ஆகியவற்றில் அம்பிகையின் உலா இடம்பெறாது.
அனைவரும் ஆவலோடு பல மாதங்களாக எதிர்பார்த்திருந்த மகா கும்பாபிஷேகம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்து நமது எதிர்பார்ப்பு திருவிழா பற்றியது. அதற்காக மண்டலாபிஷேக பூர்த்தியின் பின்னரும் சரியாக ஒரு மாதம் நாம் காத்திருக்க வேண்டும். பூரண அலங்கார பூஜிதையாக அம்பாள் திருவதனம் கண்டு நம் பேறடையும் நாள் 05-04-2019 வெள்ளியன்று வரும் கொடியேற்ற நாளாகும். காத்திருப்போம்.........
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.