2020ல் அம்பாளுக்கு மகோற்சவம் நடைபெறவில்லை. அன்றைய கால நிலைமைக்கு ஏற்றபடி அபிஷேகத்துடன் அனைத்துக் காரியங்களும் நடைபெற்று முடிந்தன.
2021 ல் மகோற்சவம் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்றபடி நேரக் கட்டுபாட்டுடன் எவ்வித குறையுமின்றி நிறைவேய்தியது . தேர்த்திருவிழா அதிகாலை 5 மணிக்கே நடைபெற்று முடிந்தமை மறக்க முடியாதது.
2022ல் அம்பாள் மகோற்சவம் நடைபெற திருவருள் கூடியுள்ளது. அதனால் வழமை போல் திருவிழா நடைபெறுவதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 02-04-2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் 16-04-2022 தீர்த்தோற்சவத்துடன் நிறைவுக்கு வருகிறது.
வானுயர நிமிர்ந்து நிற்கின்ற கோபுரத்தினைப் பார்த்தபடி வாசல் மண்டபத்தில் இருபக்கமும் கையில் கதாயுதங்களுடன் நிற்கின்ற சேடிப் பெண்களிடம் அனுமதிபெற்று கோபுர வாசல் கடந்து உள்ளே போகின்றோம் .
அலங்கார தூண்கள் நான்கு பக்கமும் வர்ணம் தீட்டப்பட்ட மேல் விதானம் தாமரை மொட்டு விரிந்தபடியுள்ள மேல் வீதான அலங்காரம் கொண்ட சங்காபிஷேக மண்டபம் ஆகிய இவை அனைத்தையும் தாண்டிச் சென்று மூல மூர்த்தியான அம்பாளைக் கண்குளிரத் தரிசிக்கின்றோம்.
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அழகே உருவானவள் எங்கள் மகமாரி. வேளைக்கு ஒரு பட்டுச்சேலை பொதுவாகக் கன்னக்குடுமி – அதைச்சுற்றி மல்லிகை மொட்டு மாலை; கன்னக்குடுமிக்கு மேலாக மூன்று திருகுபூ; அதன்கீழ் தங்கத்தில் கல் பதித்த பிறையும் – நட்சத்திரமும்; இடையிடையே ஒரு தங்கப்பட்டம்; தங்கப்பட்டத்தில் தொங்கும் 3 அங்குல நீளமான மெல்லிய சங்கிலி; பின்னற் சடையின் மேலாக தங்கத்திலான நாகசடை; நாக சடையின் இருமருங்கிலும் சடையாளவு நீளம் கொண்ட கனகாம்பர மாலைகள்; கருப்பு மை தீட்டிய காந்தக்கண்கள்; நெற்றியில் நிறைந்த குங்குமப்பொட்டு; விழா காணும் பூரிப்பினால் பருத்த கன்னங்கள்; வலது கன்னத்தில் மேலதிகமாக ஒரு கருப்புப் (திருஷ்டிப் பொட்டு; யாரையும் தன்பால் கவர்ந்திழுக்கும் வசீகரப்புன்னகை; கைகளில் அடுக்கடுக்காகப் பூட்டுக் காப்பு; வலது கையில் தொங்கிக் கொண்டிருக்கும் கைச் சங்கிலிகள்; விரல் நுனியில் முகையவிழ்த்த வெள்ளித் தாமரைப்பூ; மடித்த காலின் மீதுள்ள இடது கையின் மேற்புறத்தில் தகதகவென ஜொலித்துக்கொண்டிருக்கும் சோடிக்கிளிகள்; மார்பகங்கள் மீதும், அதன் இருமருங்கிலும் அடுக்கடுக்காக ஆரங்கள்; கழுத்திலிருந்து மடித்திருக்கும் கால்கள் வரை கணக்கற்ற தங்கப்பதங்கங்கள்; இடையிடையே காசு மாலைகள் இன்னும் .. இன்னும் எவ்வளவோ ... எல்லாவற்றிற்கும் கீழாக ஒற்றைப் பூமாலை இதுவே எம் தாயின் நித்திய விழாக்கால திரு அலங்காரம்.
இவ்விழாக் கால அலங்காரத்தில் நாளுக்கு நாள் வேறுபடும் வித்தியாசமான அம்சங்களை மட்டும் கீழே நோக்குவோம்.(அத்தம் – பாதம் என்பது கால் கைவைத்து அலங்கரிப்பது)
1 ஆம் திருவிழா
பகல் – கொடியேற்றம் அத்தம் பாதம் இல்லாமல் தனது இயல்பான தோற்றப் பொலிவுடன் அம்பாள் சூரிய பிரபையில் கொடியேற்றம் காணல்
இரவு - அம்பிக்கையுடன் குட்டிப்பிளையாரும் முருகனும் இணைந்த படியே ஆட்டுக்கடா வாகனத்தில் உலா வருதல்
3 ஆம் திருவிழா
பகல் – பூரண அலங்காரத்துடன் கப்பல் வாகனத்தில்
இரவு -வெள்ளிச் சிங்க வாகனத்தில் கையில் வெள்ளிச் சூலம் தாங்கி வரல், இன்று இரவு முதல் திருவிழா நிறைவு பெறும் வரை பிள்ளையார் முருகன் தனித்தனியாக வாகனங்களில் எழுந்தருளல்.
4 ஆம் திருவிழா
பகல் - பூச்சொரிதல் விழா. சர்வ அலங்காரம் அம்பிகையின் இரு புறமும் நின்றபடி அம்பிகையின் மீது சொரியப்படும் பூக்களால் நிறைந்துள்ள உட்பிரகாரத்திரு வீதியில் தாமரைப் பீடத்தில் அம்பிகை உலா வருதல் .
இரவு - அன்ன வாகனத்தில் எழுந்தருளும் அம்பிக்கையுடன் (இன்றுமுதல் -தேரன்று இடம்பெறும் காத்தலிங்க சுவாமி பூசைவரை)காத்தலிங்கமும் வெளி வீதி உலாவில் இணைந்து கொள்ளல்.
5 ஆம் திருவிழா
பகல் - அலங்கார பைரவியாக கையில் விசிறியுடன் இரத்தினாசனத்தில் எழுந்தருளால்.
இரவு - இரட்டை ரிஷபங்கள் விரட்டியபடி கையில் வெள்ளிப்பிரப்புடன் வீதி வலம் வருதல்
6 ஆம் திருவிழா
பகல் - புலி வாகனத்தில் வெள்ளி நாகம் படமெடுக்க, கையில் வெள்ளித் தாமரை மொட்டுடன் எழுந்தருளல்
இரவு - காராம்பசு வாகனத்தில் அம்பாள் பூரண அலங்காரத்துடன் புறப்படுதல் .
7 ஆம் திருவிழா
பகல் - கையில் விசிறியுடன் சிங்காசன பீடத்தில்
இரவு - சுடர்த் திருவாசி இரட்டைக் குதிரைகளை விரட்டும் சவுக்குடன் திருவீதி வலம் வருதல்
8 ஆம் திருவிழா
பகல் - எட்டுக்கால் கேடயம் திருவாசி இல்லாமல்
மாலை - வேட்டைத்திருவிழா -பெரிய சிவப்பு நிற ஒற்றைக் குதிரையில் கால்கள் இரண்டையும் ஒரே பக்கமாக வைத்தபடி இடது கையில் அம்பு, வில்லும் கடிவாளமும், வலது கையில் வெள்ளிச் சவுக்குடன் நெடியகாட்டுப் பதிக்கு எழுந்தருளி வேட்டையாடுதல். அன்றைய இரவுத் திருவிழாவில் அந்த நாளில் இரட்டைச் சிங்கம், இரட்டை ரிஷபம், இரட்டைக் குதிரை என மூன்று வாகனங்களிலும் வீதி உலா வரும் வழமையிருந்தது. பின்னாளில் இந்த வழமை மாறிவிட்டது.
இரவு – அஸ்தம் – பாதம் இல்லாமல் இயல்பான அழகு சொரூபியாக இரட்டைச் சிங்க வாகனத்தில் வீதி உலா வருதல்
9 ஆம் திருவிழா
பகல் – படம் எடுக்கும் மலர்ப் பாம்பு நிழலில் அம்பிகையின் வீதி உலா
இரவு – அடக்கமான முழுமையான அலங்காரத்துடன், திருவாசி இல்லாமல், சர்ப்ப வாகனத்தில் அலங்கார ரூபிணியாக எழுந்தருளல்.
10 ஆம் திருவிழா
பகல் – தண்டிகைத் தொட்டியில் வலதுகாலைப் பின் புறம் மடக்கி ஒருக்களித்த படி, இடது கையில் சிறிய மணியும், வலது கையில் பூவும் கொண்டு, லிங்கபூசை செய்யும் அற்புத அலங்காரம்
இரவு – பூந்தண்டிகையில் பூரண அலங்காரத்துடன் அம்பாள் அழகு தேவதையாக எழுந்தருளல்
11 ஆம் திருவிழா
பகல் – வசந்தோற்சவம், தலைசாய்ந்து ஒருக்களித்து, திருப்பாதங்களை நீட்டியபடி, ஒரு கையை தலைக்கு அணையாக, மறு கையால் விசிறியபடி சயனித்த சாத்துப்படி. நிறைய கனகாம்பர மாலைகளுடனான இரட்டை சடையானது பின்புறமுள்ள பெரிய தலையணை மீது தவழும்
இரவு – புன்னை மர நிழலில், கைலாச வாகனத்தில், கருப்புக் கரையுடனான வெள்ளைச் சேலையில் பூரண அலங்காரத்துடன் அம்பிகையின் திருவிழா
12 ஆம் திருவிழா
பகல் – நேர் கொண்டையில் ஐந்து அடுக்கு மல்லிகை மாலையுடன் கையில் வெளிச் சூலம் தாங்கி, சிங்க வாகனத்தில் பவனி.
இரவு – முழுமையான அலங்கார பூஜிதையாக படற் சாத்துப்படியுடன் பெரிய இடப வாகனத்தில் பவனி
13 ஆம் திருவிழா
பகல் – கையிலும் கழுத்திலும் உருத்திராக்க மாலையணிந்து விரித்த தலைமுடியுடன் தவக் கோலத்தில் திருவாசி இல்லாமல் (குறைந்த நகை அலங்காரத்துடன்) சர்ப்ப வாகனத்தில் அம்பிகையின் வீதி உலா.
இரவு – சப்பறம். சுடர் திருவாசி, அம்பாள் பூரண அலங்காரத்துடன் சப்பறத்தில் வீதி உலா வருதல்
14 ஆம் திருவிழா
பகல் – தேர்த் திருவிழா. அலங்கார பூஜிதையாக வலம் வரும் அம்பாள் தேர்ப் பவனி முடிந்ததும், பச்சை உடுத்தி அவரோகணிப்பார். திருத் தொங்கல் உட்பட அனைத்து அலங்காரமும் பச்சை நிறமாகி அம்பிகை வருவது பார்ப்பவர்களைப் பரவசப் படுத்தும்.
இரவு – அஸ்தம் - பாதம் இல்லாமல் அம்பிகை தனது இயற்கை அழகுடன் பூத வாகனத்தில் காட்சி தருதல்.
15 ஆம் திருவிழா
பகல் – தீர்த்ததிருவிழா இந்திர விமானத்தில் உச்சக்கட்ட அலங்காரத்துடன் ஊரணிக் கடற்கரைக்கு சென்று தீர்த்தமாடிய பின், நெடிக்காடு பிள்ளையார் கோவிலில் தங்கியிருந்து, மாலை 07.00 மணிக்கு தமது ஆலயம் நோக்கித் திரும்புவார்.
இரவு – கொடியிறக்கம் அஸ்தம் – பாதம் இல்லாமல் அடுக்கு அலங்காரங்கள் எதுவுமின்றி, இயல்பான ரூபத்துடன் கொடியிறக்கம் கண்டு வீதி உலா வருதல்.
குளிர்த்தி நாள்
பகல் - ஷ்னபன (பிராயச்சித்த) அபிஷேகம், பூசை.
இரவு – கிளி வாகனத்தில் ஏழு பட்டுடுத்தி அற்புத அலங்காரத்துடன் எழுந்தருளல்
இவ்வருடம் (2022) அம்பாள் மகோற்சவம் எவ்வித தடையுமின்றி சிறப்புறநடந்தேற அம்பிகையின் அருள் வேண்டி அனைவரும் கைகூப்பித் தொழுவோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.