இவை பழங்கதைகள் சில்லறைக் (காசுக்) கதைகள் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2016 (வியாழக்கிழமை)
இவைபழங்கதைகள்சில்லறைக் (காசுக்) கதைகள்
வல்வையூர்அப்பாண்ணா
1. ஊரிக்காடு – தொண்டமானாறு 5 சதம்:
வல்வைச் சந்தியிலிருந்து செல்வச்சந்நிதி போவதாயின் பஸ்சிற்கு 10 சதம். ஆனால், நெற்கொழு சந்தியிலிருந்து பஸ் எடுத்தால் 5 சதம். கடற்கரை வீதியில் 752 யாழ், 763 கீரிமலை, 766 மானிப்பாய், இவற்றைவிட அச்சுவேலி Short Service எனப் பல பேருந்துகள் சேவையில் இருந்ததனால், பலரும் நடந்து நெற்கொழு சந்திவரை வந்து, 5 சதம் கொடுத்து பஸ் ஏறிச் சந்நிதி சென்று ஏதாவது ஒரு மடத்தில் வயிறு புடைக்கச் சாப்பிட்டு மீண்டும் 5 சதம் கொடுத்து பஸ் ஏறி நெற்கொழு சந்தியில் இறங்குவதே வழமையானது. திரும்பி வரும்போது நெற்கொழு சந்தி தாண்டி மற்றவர்களோடு சேர்ந்து ஆலடியிலோ, சந்தியிலோ இறங்கிக் கொள்வதும் ஒரு சாகசமான சங்கதி.
2. பம்பாய்முட்டாய் – 5,10 சதம் :
சற்று கட்டையான கறுத்த உருவம். அவரை விட உயரமான – காய்ந்து போன தடி. காலம் கடந்து வரும்போது சிலரது தோற்றத்தில் வயதுக்கேற்ற முதுமை தெரியுமே தவிர, முகத் தோற்றத்தில் உடலமைப்பில் பெரிய மாற்றத்தைக் காண முடியாது. எமது சிறு பாராயம் முதல் நடுத்தர வயது வரை நாம் பார்த்த “ பம்பாய்முட்டாய்அப்பாவும் ”மாற்றமில்லாத தோற்றத்துடனேயே வாழ்ந்து வந்த ஒருவர். இவர் திக்கத்தை அண்மித்த பகுதியிலிருந்து புறப்பட்டு பொலிகண்டி, நெடியகாடு வழியாக தினமும் வருவார். நமது ஊர்மனைதான் அவரது வியாபார இலக்கு. அம்பாள் திருவிழாக் காலமானால் அவர்பாடு கொண்டாட்டம்தான்.
5 சதம், 10 சதத்தைக் கையில் வைத்திருக்கும் சிறுவர்கள் அவரது வருகைக்காகக் காத்திருப்பர். 5 சதத்தை நீட்டினால் தடியில் சுற்றப்பட்டிருக்கும் றோஸ் நிறமான மிட்டாயை இழுத்து நீட்டி மெல்லியதாக்கி லாவகமாக அதனை முறித்து மடக்கிக் கொடுப்பார். அதுவே 10 சதமாக இருந்து விட்டால், ஒரு முழநீளத்துக்கு முட்டாயை இழுத்து, வாய்க்குள் கொள்ளாத அளவுக்குத் தருவார். ஆனந்தமாக நீண்ட நேரம் சுவைத்துச் சாப்பிடலாம். சிவப்பு நிறமாயிருக்கும் வாய் பம்பாய் முட்டாய் சாப்பிட்டதைக் காட்டிக் கொடுத்துவிடும்.
முட்டாயை இழுத்து இழுத்து பிசு பிசுத்து ஒட்டிக் கொண்டிருக்கும் கையை இடுப்பின் ஒரு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு சேலைத் துண்டில் துடைத்துக் கொள்வார். இடுப்பின் மறு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தண்ணீரே கண்டறியாத அந்த வல்லவத்தினுள் (காசு போடுவதற்காக துணியில் தைக்கப்படுவது) போட்டுக் கொள்ளுவார்.
பின்னாளில், சுவையான அந்த பம்பாய் முட்டாய்த் தடிக்கு மேலாக நீண்ட பொலித்தீன் பையினால் மூடியபடியே விற்பனை நடந்ததுவும் எமக்கு தெரியும்.
3. கால்இறாத்தால்பாண் + 2 வாழைப்பழம் = 10 சதம் :
சிதம்பரா வாசலின் நேராக – வீதியின் மறுபுறம் அந்நாளைய கைப்பந்தாட்ட தைமானம். மைதானத்துக்குக் கிழக்காக இருந்தது சிற்றம்பலம் அண்ணையின் தேனீர் கடை. இந்த நாள் போன்றில்லாமல், அன்று காலை – மாலை என இரு நேர பாடசாலையாகவே பாடசாலைகள் இயங்கி வந்தன. மதியம் ஒரு மணிநேர இடைவெளிவிட்டு மாலை நேரம் பாடசாலை ஆரம்பமாகும். சைக்கிள் வைத்திருந்த மாணவர்களும், கிட்டிய தூரத்திலுள்ளவர்களும் வீட்டுக்குப் போய் உணவருந்தி வருவா். சிலர் காலையில் வரும்போது மதிய உணவைக் கொண்டு வந்து சாப்பிடுவா். மிச்சம் மீதியாக உள்ளோர் சிற்றம்பலம் கடையிலேயே சாப்பாட்டை முடித்துக் கொள்வர்.
அந்த நாளில் “ பாண் ” என்பது (பேச்சு வழக்கில்) றோஸ் பாண், கறிப்பாண் என இரண்டு விதமாகச் சொல்லப்பட்டது. இந்தக் கறிப்பாண் 1/4 இறாத்தால் அளவு கொண்ட சிறியதாகவே பெருமளவில் தயாரிக்கப்பட்டன. சிற்றம்பலம் கடையில் 10 சதம் கொடுத்தால், 1/4 (கால்) இறாத்தல் பாணும், ஒரு தட்டில் சாம்பாரும் ஊற்றித் தருவார்கள். அல்லது 1/4 (கால்) பாணும், இரண்டு வாழைப்பழங்களும் தருவார். சாம்பாரில் உப்பு – புளி ஒழுங்காக இருக்கும் ஆனால் எப்படிச் சுழி ஓடினாலும் ஒரு வெங்காயத் துண்டு, அல்லது ஒரு மிளகாய் துண்டு, அல்லது ஒரு காய்கறித் துண்டையோ கண்டுபிடிக்க முடியாது. அப்படிக் கிடைத்துவிட்டால் அது நமது அதிஷ்டமே. சாப்பாடு முடிந்து மிகுதியுள்ள நேரம் முழுவதம் மைதானத்தில் நடு வெய்யிலில் ஓடி விளையாடுவதே நமது வழமை.சிற்றம்பலம் கடையின் கடலை வடை மிகப் பிரபல்யம்.
4. முட்டாசிஅம்மா – சீனிப்பாணி 3 சதம் :
2சதம்+1 சதம் சிதம்பரா வாசலின் எதிர்ப்புறத்தில் அந்நாளில் இருந்த பனைமர நிழலில் மதிய நேர இடைவேளையின் போது இரண்டு வயோதிபப் பெண்கள் கடகம் – தட்டுப்பெட்டியுடன் வந்து கடலை, கச்சான், முட்டாசி வகைகள் விற்பனை செய்வா். இவர்களில் ஒருவர் “ முட்டாசிஅம்மா ”சீனியைக் காய்ச்சிப் பாணியாக்கிப் பதமாக இறக்கித் தட்டில் ஊற்றிக்கொண்டு வரும் முட்டாசி அம்மாவின் சீனிப்பாணி தனிச் சுவையானது. இதுவே அவரது பிரதான வியாபாரப் பொருளாகும். சிற்றம்பலம் கடை பாணும் வாழைப்பழமும் சாப்பிட்ட பின் 3 சதம் கொடுத்து சீனிப் பாணி வாங்கி மென்று சாப்பிட்டால் மதிய போசனம் பூரண திருப்தியைக் கொடுக்கும். நாளடைவில் இளகிய பாணி சுற்று இறுக்கமாகி 3” நீளமாக ஈக்கில் சேவல் முட்டாசி, மீன் முட்டாசி எனப் பல பெயர் பெற்று உருமாறி 5 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டமையும் பார்த்திருக்கிறோம்.
5. அளவுச்சாப்பாடு 25 சதம்:
மறைந்த ஆசிரியர் சத்தியமூர்த்தி அவர்கள் அதிபராக சிதம்பராவில் கடமையாற்றிய காலம் அது. அவரது சிந்தனையில் தோற்றம் பெற்று உருவாகியதே “ சிதம்பரா கூட்டுறவுச் சங்கம் ”கூட்டுறவுச் சங்கம் ஆரம்பமான காலத்தில் கல்லூரியில் படித்த மாணவர்கள் அத்தனை பேருமே கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள். ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தெரிவு செய்யப்படும் வகுப்புப் பிரதிநிதிகள் கொண்டது “ கூட்டுறவுச் சங்க நிர்வாக சபை.”
பேனை – பென்சில் – கொப்பி வகைகள் போன்ற எழுதுகருவிகள் விற்பனை நிலையம் ஒன்றும், சிற்றூண்டிச்சாலையும் இந்த சங்கத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பாடசாலையின் பிரதான மாடிக்கட்டிடத்திற்குச் செல்லும் படிக்கட்டுக்குக் கீழே இருந்த ஒரு மிகச்சிறிய ஒடுக்கமான இடத்தில் இந்த எழுது கருவிகள் விற்பனை நிலையம் செயற்பட்டு வந்தது.
மாணவ பிரதிநிதிகள் 15 நிமிட சிறிய இடைவேளையின் போது, அளவுச் சாப்பாட்டுக்காக 25 சதம் கொடுத்து பதிவு செய்யும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலையும் பணத்தையும் காலஞ் சென்ற முருகுப்பிள்ளை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். மதிய நேர இடைவெளியில் அந்தந்த வகுப்பு மாணவ பிரதிநிதி தலைமையில் சென்று, அதிபர் அறையின் பின்புறம் உள்ள சிற்றுண்டிச்சாலையில் அளவுச் சாப்பாட்டுத் தட்டத்தை எடுத்து வர வேண்டும். சிற்றுண்டிச்சாலையில் சுறுசுறுப்பான இளைஞனான சிங்கராசா என்பவரும் – அவருக்கு உதவியாக இன்னொருவரும் சமையற் பொறுப்புகளைக் கவனித்து வந்தனா்.
அளவான சோறு, இரண்டு கறி வகைகள், ஏதாவது ஒரு கீரை, சொதி அல்லது சாம்பார் கொண்ட அளவுச் சாப்பாடு எமது மதிய நேர பசிக்குப் போதுமானதாகவே இருந்தது.சிதம்பராவின் வளர்ச்சிக்காக மறைந்த அதிபர் சத்தியமூர்த்தி ஆற்றிய பல்வேறு நற்பணிகளில் தலையாயது இந்த 25 சத அளவுச் சாப்பாடும் கூட்டுறவுச் சங்க நடைமுறையும் ஆகும்.
6. கலரிரிக்கற் 55 சதம்:
அம்பாள் கோவில் 11ம், 12ம் திருவிழாக்கள் மற்றும் கந்தவனம், நெற்கொழு கோவிலில் விடிய விடிய நடைபெறும் திருவிழாக்கள் என்றால் எங்களுக்குப் பரம சந்தோசம். தியேட்டரில் இரவு இரண்டாம் காட்சி பார்க்க இதைவிட அருமையான வேறு சந்தர்ப்பம் கிட்டாது. கலரி ரிக்கற்றுக்காக 55 சதம் சேர்ப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. அதனால் பல நாட்களுக்கு முன்பிருந்தே சிறிது சிறிதாகச் சேர்த்து 55 சதத்தைப் பத்திரப்படுத்திக் கொள்வோம். ஒரு தேனீர் குடிப்பதற்கே மேலதிகமாகக் காசு இருக்காது.
குறித்த நாளில் மாலையிலேயே சைக்கிளுக்குக் காற்றடித்து, அதனை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி வைத்து, ஒரு சேர்ட்டையும் சைக்கிளிலேயே வைத்துவிட்டால் தயார்படுத்தல் வேலைகள் பரம ரகசியமாக நிறைவுக்கு வரும். 9.30 மணிக்கு காட்சி ஆரம்பமானாலும், 8.00 மணிக்கே இங்கிருந்து புறப்பட்டு, மிதி மிதி எனச் சைக்கிளை உளக்கி விரட்டி, எள்ளங்குளம் சுடலையில் பயந்து தேவாரம் பாடிப் பதுங்கிப் பதுங்கி ஒருவாறு நெல்லியடி போய்ச் சேர படம் ஆரம்பமாகும் நேரம் சரியாக வரும் மகாத்மா தியேட்டர் (தற்போது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக) அல்லது லக்சுமி தியேட்டர் (தற்போது இலங்கை வங்கி அமைந்துள்ள இடம் ) ஏதாவது ஒன்றில் கியூ வரிசையில் நின்று முண்டியடுத்து முன்னேறி, 55 சதம் கொடுத்து கலரி ரிக்கற் வாங்கி, உட்புகுந்து உடைந்து போன வாங்குகளில் அமர்ந்து, மூட்டைப்பூச்சி தொடையைத் தின்ன, வாள் சண்டை போடும் எம்.ஜீ.ஆரைப் பார்த்து விசிலடித்து, அல்லது தொடர் வசனம் பேசும் சிவாஜியைப் பார்த்துக் கைதட்டி ஆர்ப்பரிப்பதில் இருந்த இன்பம் சொல்லி மாளாது. 2வது முறையாக வரும் படங்களுக்கு லக்சுமி தியேட்டரில் கலரிக்கு 35 சதம் மட்டுமே.
படம் முடிந்து திரும்பி ஊருக்கு வர, மேடையில் சின்ன மேளம் அமர்க்களப்படும். நல்ல பிள்ளைகளாக ஒரு ஓரத்தில் பக்குவமாக அமர்ந்திருந்து சின்ன மேளம், புலி விளையாட்டு, வாண வேடிக்கை பார்த்து ரசித்த இளம் வயதுக் காலம் மறக்க முடியாது.
7. நெற்கொழுகோவிற்தளிசை 25 சதம்
சனி – ஞாயிறு – விடுமுறை நாட்களில் நெற்கொழு கோவிலுக்குப் போய் மதிய வேளையைக் கழித்து வருவது சிதம்பரா மேல் வகுப்புகளில் கற்று வந்த அநேகரின் வழக்கமாக இருந்தது. நெற்கொழு கோவிலுக்கு முன்பாக உள்ள காளி கோவில் தளிசையும் (வெண்புக்கை) சொதியும் மிகப் பிரபல்யமானது. தளிசை ஒன்று 25 சதம். ஆளுக்கு ஒரு ரூபா வீதம் சேர்த்து (எந்த வீரனும் 4 தளிசைக்கு மேல் சாப்பிடவே முடியாது), சேர்ந்த காசை காலையில் கொண்டுபோய் காளிகோவில் ஆச்சியிடம் கொடுத்து முன்பதிவு செய்துவிட்டு வந்து – மீண்டும் மதியத்தை நெருங்கும் நேரம் சைக்கிளிலிலோ அல்லது நடந்தோ போக வேண்டும்.
சிவன் கோவில் தென்மேற்கு மூலையில் இருந்த ஆறுமுகம் ஐயா வீட்டுக் கடப்பினுள் கால் வைத்து உள்ளே இறங்கி காய்கறித் தோட்டங்களை ஊடறுத்து வழியில் கண்ணுக்குத் தென்படும் மிளகாய், கத்தரிக்காய், தக்காளி, பயத்தங்காய், மரவெள்ளிக் கிழங்கு போன்றவற்றினை தேவைக்கு ஏற்றபடி பிடுங்கி எடுத்துக் கொண்டு நடந்து நெற்கொழுபோய்ச் சேருவதே அநேகரின் வழமை. சில வேளைகளில் ஏறுக்குமாறாக தோட்டக்காரரிடம் மாட்டிக் கொண்ட சம்பவங்களும் உண்டு.
அப்படியே இந்தக் காய்கறியை காளிகோவில் ஆச்சியிடம் கொடுத்துவிட்டால் வழமையான சொதியுடன், ஒரு இறுக்கமான கூட்டுக்கறியும் கிடைக்கும்.நேர்மையாக பணம் கொடுத்து சந்தையில் காய்கறி வாங்கிப் போகிறவர்களும் உண்டு. காளிகோயில் மடைப்பள்ளியை அண்டி நிற்கும் முதிர்ந்த மாமரத்தில் எந்த நேரமும் முற்றிய மாங்காய்கள் இருக்கும்.
தளிசைக்காக நேரம் பிந்தி பதிவு செய்பவர்களுக்காக அடுப்பில் உள்ள சொதிப் பானையினுள், அம்மியில் வைத்து கொஞ்சம் வெங்காயம் – மிளகாய் –மாங்காய் இவற்றினை நசுக்கிய கலவைக்கு உப்பிட்டு நீருற்றி விட்டால் தேவையான அளவு சொதி பெருகிக் கொண்டே இருக்கும். எப்படியாயினும் நெற்கொழு சொதியின் ருசி தனியானதுதான்.
எந்த வெய்யில் வேளையிலும் ஜில்லெனக் குளிர்ந்தபடி இருக்கும் நெற்கொழு கிணற்றில் குளித்து வைரவரையும் – காளியையும் வணங்கிய பின், காளிகோவில் ஆச்சி தரும் தளிசையும் சொதி கறியும் அமிர்தமாக உள் இறங்கும்.உண்ட களை மாற மடத்தில் சற்று நேரம் தூங்கி எழுந்து வீடு திரும்பவதே வழமையானது. இந்த மாலைநேர பொழுது போக்கில் மடத்துடன் நெருக்கமாக உள்ள செடி கொடிகளை வெட்டி ஆலமர சருகுகளைக் கூட்டிக் கொழுத்தும் நல்ல பணியும் சில சந்தர்ப்பங்களில் நடைபெறுவதுண்டு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: July 01, 2016 at 02:02
மிகவும் மகிழ்வு தருகிறது..
இந்த ஆக்கங்கள் தனித்தனியாக பதியப்பட வேண்டியவை..இவற்றை எடுத்துரைத்து பிள்ளைகளை வளர்த்தால் பிற்காலத்தில் வல்வை முன்னேற்றங்களுக்கு தடைகள் ஏற்படாது.
வல்வை பற்றி சிந்திக்கும்போது இவைகள் அனைத்தையும் தழுவி சிந்திக்க வேண்டும்.
அப்பண்ணாவுக்கு பாராட்டுக்கள்..
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
valvai mani (Swiss)
Posted Date: June 30, 2016 at 19:26
உண்மையில் இன்றும் இந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்த்ததுண்டு ,இவை யாவற்றையும் சிதம்பராவில் படித்த காலத்தில் நானும் அனுபவித்தவன் ஒருவன் ,அப்பண்ணா இன்னும் ஒன்றை மறந்துவிட்டீர்கள் ,சிற்றம்பலம் கடைக்கு பக்கத்தில்(கவிஞனின் பேத்தியார்)ஒரு கடையில் 12 சதம் கொடுத்து இரண்டு தழிசை கறிவாங்கி சாப்பிட்ட அனுபவமும் உண்டு,மதிய உணவின் பின் பணங்கூடளுக்குள் நின்று சிறிது நேரம் விளையாடி ,,,, இன்றும் நிணைக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான்,,,,இப்பழைய நினைவுகளை மீண்டும் தந்ததிற்கு அப்பண்ணாவிற்க்கு நன்றிகள்,,,,,,,,,,,,,,,,
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.