நம்மவளின் பூர்வீகம் பற்றிய விபரம் வேண்டி 18 வருடங்களுக்கு முன்பு கோடிக்கரை சென்று வந்த அனுபவக் குறிப்பு இது.
நம்மவளின் சொந்த இடம் – கோடிக்கரை. விரும்பி வந்தமர்ந்த இடம் – நம்மூர் தாசிந்தாமணல் பகுதி . (1846 பெப் 1 ல் பதியப்பட்டுள்ள மகமை உறுதியில் "இராசிந்தான் மணல்" என்று உள்ளது. நாம் மகமாயித் தாயின் சொந்த இடம் (கோடிக்கரை) தேடிப்போனோம். பூட்டிய சிறிய கோபுர வாசல் .பூசகர் விரும்பிய வேளையில் ஒரு வேளையுடன் நிறைவுறும் பூசைகள். பெருத்த சிரமத்துடன் பூசகரைத்தேடிப்பிடித்து, கோபுர வாசல் திறந்து உள்ளே போனோம். புட்டணி பிள்ளையார் கோவிலின் பழைய மண்டப அமைப்பைக் கொண்ட ஒரு மண்டபம். தொடர்ந்து சிறிய மகா மண்டபம். நேராக கருவறை – கிரீச் என்ற சத்தத்துடன் திறந்து கொண்ட கருவறைக் கதவுகள் சற்று பழையன. உள்ளே இருள் மயம். ஒன்றும் தெரியவில்லை. அர்ச்சகர் ஏற்றிய ஒற்றை விளக்கொளியில் மூத்தவலின் தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தது. அப்படியே அச்சொட்டாக அவள் நம்மவளே தான்.
சிறிய நடு மண்டபத்தின் இடது புறம் ஒரு சிறிய திண்ணை. அங்கே எழுந்தருளும் மூத்தவளின் திருவுருவம் பஞ்சலோகத்தில். அப்படியே ஆடிப்போனோம். எட்டித் தொடக்கூடிய தூரத்தில் மூத்த முத்துமாரி திருவுருவம் தரிசித்ததில் உடம்பு நடுங்கியது. கண், காது, மூக்கு, மார்பகங்கள், நான்கு திருக்கரங்கள், வலது பக்கம் உடுக்கும் வாளும், இடது பிக்கம் அன்ன பாத்திரமும் சூலமும், தலையில் பின் புறம் ஜொலிக்கும் சுடர் கற்றை, வலது காலை நீட்டி – இடது காலை மடித்து அமர்ந்துள்ள பக்குவம். அவள் நம்மவளேதான். நம் தாயே தான். நம் தேவியே தான். (இதற்கு மேலாக வார்த்தைகளில் வர்ணிக்கத் தெரியவில்லை). ஒரே ஒரு வித்தியாசம் மூலமூர்த்தியும் சரி எழுந்தருளும் விக்கிரகமும் சரி இளையவள் எம் தாயைவிட, மூத்தவள் சற்று பருத்த உருவமைப்பு.
ஒரு பூக்கள் கூட இல்லாமல் ஒரு தீபத்துடன் அர்ச்சகர் அர்ச்சனையை நிறைவு செய்ய, அவரோடு பேச்சுக் கொடுத்தோம். மறைந்த எம்.ஜி.ஆர் முதலமைச்சாராக இருந்த காலத்தில் அற நிலையத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இந்த சிறிய கோபுரமும் சுற்றுச் சுவரும் புதுப்பித்து வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாக விபரம் சொன்னார்.
நாம் எதிர்பார்த்த வரலாறு எதுவும் அவருக்கு தெரியவில்லை. கோபுர வாசலைப் பூட்டி பூசகர் புறப்பட்டுவிட்டார். எதுவும் தெரிந்து கொள்ள முடியாத வருத்தத்துடன் வெளியே நடக்கின்றோம்.
வாசலுக்கு அண்மையில் ஓரமாக குடிசை வாசலில் இருந்த முதியவருடன் பேசினேன். தெளிவாக பேசினார். அவரது வார்த்தைகள் அவரது தமிழிலேயே "எங்கள் பாட்டன் எங்க அப்பன் சொல்லியிருக்கான் உள்ளே இருந்தவள் எப்பவோ எங்கேயோ போயிட்டாள். ரொம்ப காலமாபூசை புனக்காரம் எதுவுமே இல்லாமல் பூட்டியே கிடத்திச்சு. இப்ப கிட்டகைக்குதான் கதவு திறந்து ஒரு வேளை பூசை செய்யறாங்க. உந்த பள்ளியும் வீதியும் இப்ப வந்தது. இப்ப கொஞ்சம் திருத்தம்". எனக்கு உடம்பு நடுங்கியது. அவள் எங்கும் போகவில்லை நம்மிடம் தேடி வள்ளத்தில் (வள்ளக்காரனுக்கு அவள் சொன்ன பெயர் கயிலை மலை மாதரசி ) வந்துவிட்டாள்.
நல்ல செய்தி கிடைத்தது. உச்சி குளிர்ந்தது மனம் நிறைந்ததும் மீண்டு கோபுர வாசலைப் பார்த்தேன். "அம்மா மூத்தவளே! முத்துமாரி! உன் தங்கை அங்கே எப்படி இருக்கிறாள் தெரியுமா? மாடமாளிகை (ஊரில் இரண்டாவது பெரிய வீடு) நகை நட்டு (சொந்தமாகவே விதம்விதமாக தங்க நகைகள்), வண்டி வாகனம் (திருவிழா போக இரண்டு சகடைகள், வேளைக்கு ஒரு வாகனம் (வெள்ளிச் சிங்கம் உட்பட) , ஆடை அணிகலம் (வேளைக்கு ஒரு சேலை ஒரு முறை அணிந்த சேலை மறுதடவை தொடுவதில்லை.). சொந்த பந்தம் (அப்பப்பா, சொல்லிமாளாது இன்றைய உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் உள்ள அனைவருமே அவளுக்கு உறவுகளே . பணமும் வசதியும் (அடி ஆத்தா ஊரிலேயே பெரிய பணக்காரி அவளே). ஆனால் நீ மட்டும் ... அம்மா இங்கே (கோடிக்கரையில் ) இப்படி என கனத்த மனத்துடன் திரும்பிய எனக்கு மூத்தவளின் வார்த்தைகள் மானசீகமாக காற்றோடு கலந்து வருகிறது. அவள் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும் நிறைந்த மனதோடு பிரியா மனமின்றி பிரிந்து வருகின்றேன்.
(பிற்குறிப்பு)
முன்னைய காலங்களைவிட கடந்த பல ஆண்டுகளாக நாம் ஊரவர்கள் பலரும் கோடிக்கரை அம்பாளை தரிச்சிச் சென்று வருகிறார்கள்.
குறிப்பாக அம்பாளும் திருவிழா காலத்தில் பலரும் ஒன்று சேர்ந்து வாகனங்களில் கோடிக்கரை சென்று அம்பாளுக்கு பொங்கல் வைத்து – பூசை வழிபாடுகள் செய்து வழிபட்டு வருவதை வழ்க்கமாக்கி கொண்டுள்ளனர்.
அந்நாளில் இருந்த மாதிரியே இப்போதும் ஒரு நேரப் பூசை – அதுவும் மாலை வேளைகளில் மட்டும் நடைபெற்று வருவதாயினும், நம் ஊறவர்களின் வருகை பற்றி தொலைபேசி மூலம் கோவில் குருக்களுக்கு அறியத்தந்ததும், குருக்கள் சகல ஆயத்தங்களுடனும் இவர்களது வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பார்.
கோவில் ஏற்கனவே இருந்த அன்ன வாகனம் பழுதடைந்த நிலையில் பாவனைக்கு எடுபடாமல் உள்ளது. இதனை அவதானித்த நம் ஊரவர்கள் செய்து கொடுத்த சிங்க வானகம், ரிஷப வாகனம் இரண்டும் இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ளது.
கடந்த வருடத்தில் அம்பாள் அமர்ந்துள்ள மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் அனைத்தும் இடிக்கப்பட்டு புனர் நிர்மாணத்திற்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்று வருகின்றன.
வாகனங்கள் செய்வித்து கொடுத்தமை போன்று இந்தப் புனர் நிர்மாண வேலைகளுக்கு பங்களிப்பு செய்ய விரும்பும் நம்மவர்கள் திருச்சியிலுள்ள தியாகராஜா ராஜ்குமார் என்பவருடன் தொடர்பு கொண்டால் அவர் உங்களுக்கு விபரம் தருவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.