தமிழக திருக் கோயில்கள் வரிசை- திருநல்லூா்ப்பெருமணம் – ஆச்சாள்புரம் - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2015 (வெள்ளிக்கிழமை)
சிதம்பரம் – சீர்காழிப்பாதையில் கொள்ளிடம் ஊரிலிருந்து இடதுபுறம் 8 கி.மீதூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் தற்போது“ ஆச்சாள்புரம் ” எனவழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் திருமணக்கோலத்துடன் ஜோதியினுள் கலந்த ஸ்தலமாகையால்“ முத்தித்தலம் “ எனப்படுகிறது.
சாதாராணமான ஒரு சிறிய கோயில்.
இறைவன்: சிவலோகதியாகேசா்,
இறைவி: வெண்ணீற்றுஉமைமங்கை.
புல்லும் புதரும் நிரம்பிய திறந்த ஒரு பிரகாரம். ஒரு முன்மண்டபம். கருவறை. பிரகாரத்தில்பிள்ளையார், முருகன் அம்பாளுக்குத் தனிச்சந்நிதிகள் மண்டபத்தின் இடதுபக்கம் திருஞானசம்பந்தர் – தோத்திர பூரணாம்பிகையுடன் உள்ள மூலத்திருமேனி காணப்படுகிறது. கருவறையில் சிவலோகதியாகேசா் இலிங்கவடிவில் உள்ளார்.
(பெரியபுராணப் பாடல் இல 3134 – 3154 ) வரையிலான ஞானசம்பந்தா் வரலாற்றின் இறுதிப்பகுதியின் பொழிப்புரையை, இந்தக்கோயிலின் முக்கியத்துவம் கருதி அப்படியே இங்கே தந்துள்ளேன்)
“ …………… திருஞானசம்பந்தா் நல்லதவத்தையுடைய கன்னிகையின் கையைத் தம்செம்கையாற் பிடிப்பதற்கு உரிய வேளை வந்து சேரவே, கன்னிகையைப் பெற்ற தாய்தந்தையாரும் உடன்பிறந்த சகோதரரும் மணப்பெண்ணைமுன், அழைத்து வந்து வலது புறம் அமரச்செய்தனா்………”
நன்கு அழகுபடுத்தப்பட்ட பந்தலின் நடுவில் திருநீலநக்கநாயனார் ஆசாரியராக இருந்து சடங்குகளை முறைப்படி செய்து, நெற்பொரியைக் கையிலெடுத்து வேள்வித்தீயில் ஆகுதிசெய்து, மணமக்கள் அக்கினியை வலம் வரும் வேளை, “ இந்த அக்கினி இடபக்கொடியினை உயா்த்திய சிவபெருமானே ” எனஞானசம்பந்தா் தெளிந்து, உலகப்பற்று நம்மைச் சாராது நீங்க இறைவனுடன் சேர விரும்பியவராய்த் திருப்பெருமணம் கோயிலினுள்ளே போய்க், “ கல்லூா்ப்பெருமணம் ” என்று தொடங்கும் பதிகத்தை, அத்திருமணத்தைக் காண வந்தோரின் பிறவிப் பிணி நீங்குமாறு பாடியருளினார்.
தேவாதி தேவனான சிவபெருமானும் திருவருள் செய்து, “ நீயும் நின்மனைவியும், இங்கு உன்புண்ணிய திருமணத்திற்கு வந்த எல்லோரும் இந்த ஜோதியினுள் வந்து அடையுங்கள்” எனத் திருவாய் மலா்ந்தருளியதும், சோதிலிங்கமாய்ப் பரந்து நிமிர்ந்து எழுந்து, ஜோதிக்கு ஒரு வாயிலையும் அமைத்துக்காட்டவே, சீர்காழித்தலைவர் ஜோதியை வணங்கித் துதித்து , “ காதலாகித் கசிந்து…….. ” என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாடி “ இந்தத் திருமணத்திற்கு வந்த அனைவரும் இழிவான பிறவி நீங்க இவ்வொளியிற் புகுக ” என ஆணையிட, வந்திருந்த அனைவரும் நிலையான அந்தப் பேரொளியிற் புகுந்தார்கள்.
திருநீலநக்கநாயனார், திருமுருகநாயனார் முதலிய தொண்டா்களும், சிவபாதவிருதயர், நம்பியாண்டார்நம்பி, திருநீலகண்ட யாழ்ப்பாணா் மற்றும் அங்கு வந்திருந்த அனைவரும் தத்தம் மனைவியருடன் ஜோதியினுள்ளே புகுந்தனா்.
அனைவரும் உடன் புகுந்து ஜோதியினுள் ஒடுங்கியபின், ஞானசம்பந்தர் பூரணாம்பிகையின் கையைப்பற்றியவாறே அதனுள்ளே புகுந்து, சிவானந்தத்தின் நிறைவான வீட்டுப்பேற்றினை அடைந்தார். அதன் பின்னா், இறைவனும், ஜோதியையும் அதன் வாயிலையும் மறையுமாறு செய்தருளவும் சிவலோகத்தியாகேசரின் பழைய பெருமணக்கோயில் மீண்டும் தோன்றியது………….. ”
பி.கு: திருஞானசம்பந்தா் திருமண வேளையில் ஜோதியினுள் கலந்த இடம்.
ஒவ்வொரு வைகாசி மூலநாளில் இங்கு ஞானசம்பந்தர் திருமணவிழாவும் – ஜோதியினுள்ளே கலந்த விழாவும் பெருவிழாவாக நடைபெறுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.