இறைவன் நிகழ்த்திய வீரச்செயல்கள் எட்டும் நிகழ்ந்தஸ்தலங்கள்“ வீரட்டானம் ” எனப்படுகிறது. குறித்த வீரட்டானத்தலங்களையும் நிகழ்ந்த வீரச்செயல்களையும் குறிக்கும் தனிப்பாடல் இது:
பூமன்சிரம் கண்டி; அந்தகன் கோவல்; புரம் அதிகை;
மாமன்பறியல்; சலந்திரன் விற்குடி; மாவழுவூர்;
காமன்குறுக்கை; இயமன்கடவூர்; இக்காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே.
பிரமன் தலையைக் கண்டியூரிலும், அந்தகனைக் கோவலூரிலும், முப்புராதிகளைத் திருஅதிகையிலும், தக்கனைத் திருப்பறியலிலும், சலந்தரனை விற்குடியிலும், யானையை வழுவூரிலும், காமனைக் குறுக்கையிலும், இயமனைக் கடவூரிலும் இறைவன் சம்ஹாரம் செய்தார் என மேற் குறித்த பாடல் கூறுகிறது. அப்பர் சுவாமிகள் இந்த வீரட்டானங்களை இவ்வாறு கூறியருளுகின்றார்.
காவிரியின் கரைக் கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம் காமருசீர் அதிகை
மேவிய வீரட்டானம்வழுவை வீரட்டம்
வியன் பறியல் வீரட்டம் விடையூர்திக்குஇடமாம்
கோவல் நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டான மிவைகூறி
நாவில் நவின்றுரைப் பார்க்குந ணுகச்சென்றால்
நமன்தமரும் சிவன் தமரென்று அகல்வர் நன்கே.
உமாதேவியை மகளாகப் பெற்று, சிவபெருமானுக்கு மணஞ்செய்து கொடுத்து, அப்பெருமானை மருமகனாகப் பெற்றான் தக்கன். சிவபெருமானைப் புறக்கணித்து அவியை விஷ்ணுவுக்குத் தந்து ஒரு பெரு வேள்வியை நடாத்த எண்ணினான் தக்கன். காவேரியின் தென் கரை வேதங்கள் தோன்றிய பூமியாதலாலும், வேத மந்திரங்களை நன்கு கற்றுணர்ந்த பிராமணர்கள் இருக்குமிடமாகிய“ தட்சணநெய் மிசாரண்யம் ” எனப் பெயர் பெற்ற இடமாகையினாலும்- நாரத முனிவரோடு கலந்து ஆலோசித்து – திருப்பறியலூரில் யாகசாலை அமைத்து வேள்வியைத் தொடங்கினான் தக்கன். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சந்திரன், சூரியன் உட்பட அனைத்துத்தேவர்களும் வேள்விக்கு வந்திருந்தனர். யாகசாலைக்கு வந்த உமையம்மை தக்கன் கூறிய சிவநிந்தனையைக் கேட்டு வருந்தினாள். அவமானப்பட்டாள். வேள்வியும் – வேள்வி செய்யும் தக்கனும் அழியுமாறு சாபமிட்டுக் கையிலை திரும்பினாள்.
எம்பெருமான் வீரபத்திரக் கடவுளை ஏவி வேள்வியை அழித்து விடுமாறு பணித்தார். வேள்வியில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவருக்கும் தண்டனையளித்ததுடன் தக்கனையும் அழித்தார். தக்கனின் மனைவி வேதவல்லி இறைவனை வேண்டுதல் செய்ய, தக்கனின் தலையில்லா உடலுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தி எழச் செய்தார் இறைவன். ஏனைய தேவர்களும் தண்டனையிலிருந்து மீண்டனர். தேவர்களின் வேண்டுதலின் படி பெருமான் இலிங்கத் திருமேனியாடு இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
சாட எடுத்தது தக்கன் தன்வேள்வியில் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொண்டதே.
என்ற தக்கன் வேள்வியைத் தகர்த்த இறைவனது வீரச்செயலை அப்பரடிகள் அருளியுள்ளார்.
திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் பாடியுள்ளர். சேக்கிழார் ஞானசம்பந்தர் புராணத்தில்“ பறியலூர் மேவும் தோடுலா மலர் இதழியும் தும்பையும் கடம்பும் காடுகொண்ட செஞ்சடைக் கடவுளர் கருது நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர் ” என்று அருளிச் செய்கிறார். கந்தபுராணத்தில், “ தண்ணியல் மஞ்ஞையாடும் தண்டுறைப் பறியலூர் ” எனவும், திருவிளையாடற்புராணத்தில் “மேழகச் சென்னி தன்னை மங்கல மாமற் கீந்த மருமகனார் இருக்கை ”எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழநாட்டின் தென் கரைத்தலம்“ திருப்பறியலூர் ” சாதாரணமாக “ கீழ்ப்பரசலூர் ” என்று வழங்கப்பட்டாலும், “ வீரட்டேஸ்வரர் கோவில் ” என்று கேட்டால் மட்டுமே மக்கள் இலகுவாக வழிகாட்டுகின்றனர். இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழி சற்றே சிரமமானது. (1) மயிலாடுதுறை – ..தரங்கம்பாடிபாதையில் (2) செம்பொன்னார்கோவிலைஅடைந்து (3) பிரதானசாலையில் “ நல்லாடை ” என்றுள்ள கைகாட்டிப் பாதையில் வலது புறமாகச் சிறிது தூரம் சென்று 2KM தூரம் சென்றால் இத்திருக்கோவிலை அடையலாம்.
தக்கன் யாகம் செய்த ஸ்தலமாகையால்“ தட்சபுரம் ” என்றும், “ பறியலூர் ” என்றும் பெயர்களுண்டு. சிறிய கிராமம். மேற்கு நோக்கிய சிறிய கோவில். கோவில் எதிரில் சாலையின் மறுபக்கத்தில் விநாயகர் கோவில் உள்ளது. சிறிய கொடி மரம் – நந்தி -பலி பீடம்- உண்டு. இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சந்நிதி தெரிகிறது. உட்பிரகாரத்தினுள் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. நர்த்தன விநாயகர், தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கைகோஷ்ட மூர்த்தங்களாக உள்ளனர்.சண்டிகேஸ்வர்ர் சந்நிதி தனியாக உண்டு. கருவறையின் தென்பக்கச்சுவரில் உள்ள ஒரு கல்லில் தக்கன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது.
பிரகார மூர்த்தங்களையும் கோஷ்ட மூர்த்தங்களையும் வணங்கிக் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தினுள் நுழைந்தால் நமக்கு இடது பக்கமாக உள்ள“ தசஷசம் ஹாரமூர்த்தியைத் ”தரிசிக்கலாம். சூலம், தண்டு, வாள், மணி, கபாலம், உடுக்கு முதலிய ஏந்திய ஆறு திருக்கரங்களுடன் இம் மூர்த்தி (உற்சவத் திருமேனி )காட்சி தருகிறார். சம்ஹார மூர்த்தியின் கீழ்ப் புறமான பீடத்தில் இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப் போன்று சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இதனை, தக்கன் யாகம் செய்வது போன்று வடிவமைத்துள்ள ஒரு செப்புத் தகட்டினால் மூடி வைத்துள்ளனர். சிவாச்சாரியார் மூலம் இத்த கட்டினை நீக்கிப் பார்த்தால் – அவர் காட்டும் தீப ஒளியில் – பீடத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் துலாம் பரமாகத் தெரிகிறது.
சம்ஹார மூர்த்திக்குப் பக்கத்தில் நடராஜர் சபையுள்ளது. மூலவர் பெரியதிருமேனி- சுயம்பு சதுர ஆவுடையார். அளவான அலங்காரத்துடன் அருள்பாலிக்கிறார்.“ வீரட்டேஸ்வரர் ” “ தசஷபுரீஸ்வரர் ”என்பது மூலவரின் இன்னொரு திருநாமம். வழமை போலன்றி கோமுகம் எதிர்த் திசையில் உள்ளது. மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் உள்ளன. சோமஸ்கந்தர், விநாயகர், பிரதோஷ நாயகர் என உள்ள உற்சவ மூர்த்தங்களில் மயில் மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன் சிலை அற்புதமானது.
வெளி முன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கிய படி உள்ளது. அம்பிகை“ இளம் கொம்பனையாள் ” நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. சூரியன் மட்டுமே உண்டு. இங்கு வைரவருக்கு நடைபெறும் அர்த்த சாம வழிபாடு விசேடமானது. விரட்டேஸ்வரரின் நிறைவான தரிசனம் கண்ட மனநிறைவோடு திருப்பறியலூரை விட்டு வெளியே வருகிறோம்.
“விளங்கொள் மலர்மேல் அயன்ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழலாய் நின்றான்
இளங்கொ ம்பனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப்பறியல் வீரட்டத்தானே ”
-சம்பந்தர்–
நன்றி:ஞானச்சுடர்.சித்திரை 2016
அடுத்த வாரம்:“ திருவாவடுதுறை ”
உமாதேவியார் பசுவடிவில் இறைவனை வழிபட்ட திருத்தலம்“ திருவாவடுதுறை ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.