ஈழத்தின் வடக்காம் வல்வையின் குச்சம் ஒழுங்கையில் பிறந்து வாழ்ந்தவர் ஆனந்தி அப்பா. இவரை ‘உடுக்கு ஆனந்தி அப்பா’ என்றுதான் செல்லமாக அழைத்தார்கள். அமரர்கள் கணபதிப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தவர். தந்தையார் கணபதிப்பிள்ளை அவர்கள் கப்பலோட்டிய தமிழர்களில் ஒருவரே. இந்தியாவின் புராதன பல துறைமுகங்களுக்கும், ரங்கூனுக்கும் பல தடவை சென்றுவந்துள்ளார்.
தனது பரந்த நெற்றியிலே சிவ சின்னங்களில் ஒன்றான விபூதியை முக்குறியிட்டு, மெலிதாக வெற்றிலையை போட்டபடி, பொதுவாக வெட்டியுடன் காணப்படுவார் ஆனந்தி அப்பா.
சிறுவயதில் கிட்டிப்புல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, புல் பட்டு தனது ஒரு கண் பார்வையை பாதியாக இழந்தார். இதனைத் தொடர்ந்து பார்வை கோளாறு அதிகமாகி இரண்டு கண்களிலும் பார்வை தாக்கம் ஏற்பட்டு, மாலையின் பின்னர் முற்று முழுதான பார்வையையும் இழந்து, பகலில் மிக மங்கலான பார்வையை மட்டும் வாழ்வின் பெரும் பகுதியில் பெற்றிருந்தார்.
பார்வையை இழந்திருந்தாலும் தனது இளமையில் கற்ற உடுக்கு கலையை இவர் கை விடவில்லை. உடுக்கு அடிப்புடன் மட்டுமின்றி தனது கம்பீரக் குரலில் பாடும் வல்லமையையும் பெற்றிருந்தார்.
அமரர் கலாபூஷணம் சித்தரவேல் (அண்ணாவியார்), அமரர் சாமிக்கண்டு (மேத்திரியார்), அமரர் கலாபூஷணம் சிவலிங்கம் (கடற்புலிகளின் தளபதி திரு.சூசையின் சகோதரர்), அமரர் ராசா, வல்லிபுர கோவில் பரந்தாமன் ஆச்சிரம நடாத்துனர் திரு.குட்டி போன்றோர்களைக் கொண்ட உடுக்கு அணியின் பிதாமகன் இவரே என்றால் மிகையாகாது.
தற்பொழுது ஊரிலும் சரி, புலம் பெயர் நாடுகளிலும் சரி உடுக்கு வாத்தியக் கலைஞர்களாக உள்ள பலரின் குருமார்களில் பிரதானமானவர் இவரே.
வல்வையின் தற்கால உடுக்கு வாத்தியக் கலைஞர்கள் சிலர்
அன்னாரின் பெறாமக்களான அமரர் காத்தாமுத்துவின் பிள்ளைகள் ஞானவேல், ராசவேல், வெற்றிவேல் ஆகியோர் அன்னாரின் வழியைப் பின்பற்றி இன்று உடுக்கு வாத்தியத்தை ஊரிலும், புலம் பெயர் தேசங்களிலும் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்தி அப்பா அம்பாளை நினைத்து அம்மன் அழைப்பு, பிள்ளையார் அழைப்பு, காப்பதம் பாடினால் அம்பாளே தொண்டர்கள் மூலம் கலையாடி, காட்சி கொடுக்கும் அளவுக்கு உடுக்கு வாத்தியத்தைக் உச்சிக்கு கொண்டு செல்லக்கூடியவராக விளங்கினார்.
அம்மன் கோவில் திருவிழாக்காலங்களிலும், கரக நாட்களிலும் மாலை வேளைகளில் ஆனந்தி அப்பாவின் இளையமகள் ரோகிணி, தந்தையாரை கையைப் பிடித்து செல்வதை பலரும் 90 க்கு முந்தய காலப் பகுதிகளில் பார்த்திருப்பீர்கள்.
தனக்கென்று தனித்துவமான மெட்டுக்கள் அமைத்து, பாட்டிலே, பாட்டின் அடியிலே அரவம் வைத்து, இழுக்க வேண்டிய இடத்தில் இழுத்து, அதற்கு ஏதுவாக உடுக்கை ஒரு விதமாக உருட்டி அடித்து, சக கலைஞர்களைக் காட்டிலும் மெருகூட்டி உடுக்கு இசை வழங்குவதில் கை தேர்ந்தவர்.
அவரின் கம்பீரக் குரலில் கரக மெட்டுடன் உடுக்கு அடித்துப் பாடினால் தூரத்தில் நிற்போரைக் கூட அவரின் உடுக்கு இசை சுண்டி இழுக்கும்.
கரகமான து நெடியாகாட்டு பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் கோவில் நோக்கி திரும்பி வரும்போது, எந்தெந்த இடங்களில் பறை ஓசை, எந்தெந்த இடங்களில் உடுக்கு ஓசை என்பதை தீர்மானிக்கும் உன்னத ஆற்றல் படைத்தவர்.
பிள்ளையார் பாட்டு, முருகன் பாட்டு, காளி பாட்டு, வைரவர் பாட்டு, முத்துமாரி பாட்டு, கும்மிப் பாட்டு, மாரியம்மாள் தாலாட்டு, அம்பாள் பூ எடுக்கும் பாட்டு, அம்பாள் சுபோகம், அம்பாள் அழைப்பு, காப்பு என்று முழுப் பாட்டு தொகுதிகளையும் மனப் பாடம் செய்து வைத்திருந்தார்.
உடுக்குக்கு அப்பால், களுத்திலே சுளுக்கு வந்தால் ஆனந்தி அப்பாவிடம் சென்றால் விபூதியை எடுத்து பத்திரிக்கையில் தடவி உடுக்கு எடுத்து அடித்து பக்தியோடு பாடினால் சுளுக்கு மறைந்துவிடும். மேலும் பூரான், தேள் கடிக்கும் இதுபோல் கடவுள் வைத்தியம் பார்த்துள்ளார். உண்மையோ பொய்யோ, இவ்வாறு அவரிடம் வைத்தியம் பெற்றவர்கள் பலர் இன்றும் உள்ளார்கள்.
கண்பார்வை கோளாறு வாழ்க்கைக்கு ஒரு தடையல்ல என்பதை உடுக்கு வாத்தியத்தில் மட்டுமின்றி, தனது மீன்பிடித் தொழிலும் நிரூபித்தவர். மரம் பிணைத்து மீன்பிடிக்க சென்றால், தனது பெண் பிள்ளைகள் கரையிலிருந்து கொடுக்கும் சத்தத்தை வைத்து கரை திரும்புவார்.
ஒரு கலைஞன் எம்மோடு இல்லாத போதுதான் அவர்களின் பெறுமதியை உணரக் கூடியதாகவுள்ளது.
உடுக்கு கலையாலும், ஊர்ப்பற்றாலும் சிறிது உந்தப்பட்ட நான், ஆனந்தி அப்பாவைப் பற்றி இன்று உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி எழுதுங்கள் என்று ஆதவன் அண்ணாவோடு கதைக்கும் பொழுது அண்மையில் கேட்டேன். அதற்கு அவர் என்னையே எழுதக்கூறி உற்சாகப்படுத்தினார்.
நான் பார்த்த கேள்வியுற்ற ஆனந்தி அப்பா பற்றிய சிறு குறிப்பை எனது கன்னி முயற்சியாக எழுதியதில் மகிழ்ச்சி. அதுவும் அம்பாளின் விழாக்காலத்தில் எழுதியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஆனாலும் இரண்டு சிறு வருத்தங்கள்
ஆனந்தி அப்பாவின் பிள்ளைகள் அனைவரும் பெண் பிள்ளைகள். இறுதி வரை வசதி இன்றி வாழ்ந்தவர். இந்த காரணத்தினாலோ என்னவோ தெரியவில்லை - இவர் ஒரு கலைஞர் என்று கெளரவிக்கப்படாதவர்களில் ஒருவர் ஆகி விட்டார் போலும்.
இந்தக் குறிப்புடன் ஆனந்தி அப்பாவின் ஒரு படத்தை பிரசுரிக்க பெரிதும் முயன்றேன். குடும்பத்தினரிடம் கூட ஒரு படம் கூட இல்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
சேசெதெய்வச்சந்நிரன் (இங்கிலாந்து)
Posted Date: April 13, 2022 at 14:00
ஆனந்தியப்பா நாடி பிடித்துப் பார்பதிலும் கைதேர்ந்தவர். ஒருவர ம்ணப்படுக்கையில் இருக்கும் போது கொழம்பு பிரதேசத்தில் இருப்பவர்கள் இவரின் நாடிக்கணிப்பால் பலரை உயிருடன் பார்த்த சம்பவங்களும் உண்டு.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.