மனப்பட மனிதர்கள் : திரைப்பட நேசர் ம. தில்லைநடராசா பாகம் 10 - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
வல்வையின் வரலாற்றை பேசும்போது அன்னபூரணி கண்ட சிகரங்களுக்கு நமது மனம் போவது இயல்பு.. ஆனால் அன்னபூரணியை மட்டுமல்ல கொழும்பு துறைமுகத்தையும் வல்வையின் கடலோடிகள் தமது ஆளுமையில் வைத்திருந்தார்கள் என்பதை இதுவரை நாம் படம் பிடிக்கத்தவறிவிட்டோம்.
கொழும்பு கார்பரில் ( துறைமுகத்தில்) டக்மாஸ்டர்களாக அம்பலம் மாஸ்டர், ஈஸ்வரலிங்கம் மாஸ்டர் தொடங்கி சுங்க இலாகா கலக்டர் வல்லிபுரம் வரை உயர் பதவிகளில் சாதனை படைத்தவர்கள் பலர்.. அப்பெருமக்கள் வரலாறு தனி வரலாறு.. பிறிதொரு தளத்தில் எழுதப்பட வேண்டியது..
அதேவேளை சாதாரண தொழிலாளர்களாக வல்வையில் இருந்து கொழும்பு - திருமலை துறைமுகங்களுக்கு போனவர்கள் படைத்த பெருமை இன்னொரு அத்தியாயமாகும், அறுபதுகளில் கொழும்பு கார்பரில் பணியாற்றிய எல்லா வல்வையர்களையும் எனக்கு தெரியும், எனது தந்தையுடன் அடிக்கடி கார்பருக்கு போவதால் அனைவரையும் அறிவேன்..
அந்த வகையில் வல்வையில் இருந்து பல நாடுகளுக்கும் கடலோடியாக கப்பலில் சென்று சாதனை படைத்து, பர்மா முதல் பாண்டிச்சேரிவரை பல பெண்களை மணம் முடித்த புதுச்சேரி மயிலர் என்று அழைக்கப்பட்ட மயில்வாகனத்தின் ஒரேயொரு மகனே இந்தக்கதையில் வரும் திரைப்பட நேசர் ம.தில்லைநடராசா.
தனது தந்தையாரின் வேண்டுதலுக்கு அமைய அரக்கன், பர்மா உட்பட பல நாடுகளுக்கு மாலுமியாக சென்று, பின் அந்தத் திறமையை வைத்து கொழும்பு காபருக்கு பணியாற்ற சென்றதே இவருடைய கதைக்கான பின்புலமாகும்.
கடலோடிகளாக சென்ற அக்கால வல்வை மாலுமிகளில் சிலர் எந்தெந்த நாடுகளில் திருமணம் செய்தார்கள், அந்தந்த நாடுகளில் அவர்களுடைய பிள்ளைகள் இப்போது என்ன செய்கிறார்கள்.. என்று அரை நூற்றாண்டின் முன் இவர் தந்த பட்டியல் இப்போதும் என் மனதில் உள்ளது, சொல்ல நாணம் காரணமாக ஓர் ஐம்பது வருடங்கள் தாமதித்துள்ளேன்.. இன்றும் எழுதத் தயக்கமாகவே இருக்கிறது.
இனி இவர் கதைக்கு வருகிறேன்...
தில்லைநடராசாவின் மனைவி காலஞ்சென்ற மகமாசி அம்மாவின் வீடு வல்வை உலகுடைய பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இருக்கிறது..
உலகத்தை உடமையாகக் கொண்ட பிள்ளையார் என்ற பெயரில் ஒரு பிள்ளையார் உலகுடைய பிள்ளையார் என்று வல்வையில் இருந்து அருள்பாலிக்கிறாரே.. இந்த உலகில் எங்காவது இப்படியொரு உலகம் தழுவிய பெயரில் பிள்ளையார் உண்டா.. அந்தப் பிள்ளையார் கோயிலை இன்றும் அதிசயத்துடன் பார்க்கிறேன்..
" உலகெலாம் உணர்ந்தோதற்கு அரியவன் .." என்று சேக்கிழார் சிந்தித்த உலகளாவிய சிந்தனை நினைவுக்கு வருகிறது.
இனி இவருடைய உருவ வர்ணனை..
அளவான உருவம், வெள்ளையான தோற்றம், கம்பிபோல தலைமுடி, கூசிப்பார்க்கும் கண்கள், வேஷ்டி - ஷேட் முன்வாயில் கட்டுப்பற்கள்.. வஞ்சகம், சூது தெரியாத யாரையும் நம்பிவிடும் வெள்ளை மனம்.. தாய்ப்பாசத்தின் சிகரம் இவர்தான் தில்லைநடராசா.. இவருடைய பைபிள் சினிமா..
இவரை ஏன் நாம் அறிய வேண்டும்.. இவர் ஒரு சாதாரண மனிதர்தான், ஆனால் நாம் அதிசயிக்க வேண்டிய பல வாழ்வியல் உட்கூறுகள் இவரிடம் உள்ளன..
அதில் ஒன்றுதான் சினிமா மீது அவர் கொண்ட நேசம், அதைவிட முக்கியம் சினிமா படம் போலவே தனது வாழ்வையும் வாழ்ந்து முடித்ததுதான் இவருடைய வாழ்வின் இன்னொரு பரிமாணம்.
ஈழத் தமிழினத்தின் சமூகவியல் வாழ்வின் எண்ணங்களை கட்டியமைத்ததில் பெரும் பங்கு வகிப்பது தமிழ் சினிமாதான்..
இறந்துபோன பலருடைய வாழ்வை எடுத்து பரிசோதனை செய்து பாருங்கள் தமிழ் சினிமாவின் கதைக்கருத்தியலே அவர்களை செதுக்கியிருக்கக் காண்பீர்கள்.
ஒரு நாள்.. " ஏன் நாம் ஈழத்தமிழருக்கு உதவ வேண்டும்,..?" தமிழக சினிமாக்காரர் சென்னையில் வைத்து என்னிடம் கேட்டார்கள்..
பதில் " தங்கைக்காக வாழும் பாசமலர் அண்ணன்களை உருவாக்கியது தமிழ் சினிமாதான்.. அண்ணனுக்காக உயிரும் கொடுக்கப்போகும் தம்பிகளை தந்ததும் தமிழ் சினிமாதான்.. தமிழ் சினிமாவின் சிந்தனைகள் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட கடல்கடந்து ஈழத்தில் ஏற்படுத்திய பாதிப்பே அதிகம் ஆகவேதான் உங்களுக்கு ஈழத் தமிழருக்கு உதவ வேண்டிய கடமை இருக்கிறது.." என்று கூறினேன்.
அந்தப் பதிலுக்கான காரணங்களில் பல இந்தக்கதையில் வரும் தில்லைநடராசாவிடமிருந்து அவதானித்ததாகும்.
சின்னவயதிலேயே சிறிது சிறிதாக பணத்தைச் சேர்த்து, ஒரு வெற்று தீப்பெட்டிக்குள் வைத்து இறப்பில் செருகி வைப்பது இவருடைய வேலை.. பணம் சேர்ந்ததும் யாழ்ப்பாணம் படம் பார்க்க புறப்பட்டுவிடுவார்.. எப்படி..
பேருந்திலா.. இல்லை மிதிவண்டியிலா.. எதிலுமே இல்லை கால் நடையாக புறப்பட்டுவிடுவார்... எந்தத் திரைப்படம் வந்தாலும் முதல் நாள் பார்த்துவிட பொழுது விடிந்தும் விடியாமலிருக்கவே கால் நடையாக யாழ்ப்பாணம் புறப்பட்டுவிடுவார்.
இன்று மோட்டார் சைக்கிள் இல்லாவிட்டால் வீட்டைவிட்டு இறங்க மறுக்கும் யாழ்ப்பாணத்து இளைஞர்களின் முன்னால் இவர் எவ்வளவு பெரிய சாதனையாளர்.. எண்ணிப்பார்க்க வேண்டும்.
அக்காலத்தே நெடியகாட்டு குளத்திற்கு முன்னால் இருந்த காலஞ்சென்ற பொன்னுக்கண்டு அம்மா வல்வையில் இருந்து கதிர்காமத்திற்கு கால் நடையாக போய் சாதனை படைத்திருக்கிறார் அவரோடு ஒப்பிட்டால் யாழ்ப்பாணம் ஒரு தொலைவா என்று கேட்பார்.
" அது சரி உங்கள் முன்வாய் பற்கள் எப்படி உடைந்தன..? "
" கடலை வடை சாப்பிடும் போது பட்டென தெறித்துவிட்டது.. "
எப்படி..?
தன்னை மறந்து படத்தைப் பார்த்தபடியே காய்ந்து போன கடலை வடையை மடக்கென கடித்துள்ளார்.. வடை காய்ந்திருப்பதை திரையரங்க இருட்டில் கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டது..
இப்படி பல்லுப்பறப்பது தெரியாமல் சினிமா பார்க்கும் ரசிகன் ஒருவன் இன்று எங்காவது இருப்பானா.. உங்களால் ஒருவனைக் காட்டமுடியுமா...?
அவ்வளவுதானா.. இல்லை... வல்வையில் இருந்து திரைப்படக் கதைகளை பல நூறு பக்கங்களில் எழுதி, அக்கால இந்தியாவின் ஜிப்பிட்டர் ஸ்ரூடியோ முதல் மார்டன் ஸ்ருடியோ வரை அனைத்து திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
நாம் எழுதி அனுப்பும் கதைகளை அவர்கள் ஒரு காலமும் திரைப்படமாக எடுக்கமாட்டார்கள் என்பது தெரியாமலே தனது கதைகளை எழுதி அனுப்பியிருக்கிறார்.
பத்திரிகைகளுக்கோ, சஞ்சிகைகளுக்கோ எழுதாமல் நேரடியாக சினிமாவுக்கே கதைகளை எழுதினார், இவருடைய கதைகள் எதுவுமே படமாகவில்லை.. ஆனாலும் களைப்பின்றி எழுதினார்.
இந்த சினிமா கனவுகள் முடிவடைய கொழும்பு புறப்படுகிறார்.. அங்கே இவருக்கு குத்துமாடு என்று அழைக்கப்படும் கப்பல்களில் வேலை..
கேர்குலீஸ், சுருளிமலை என்று இரண்டு குத்துமாடுகள் அப்போது கொழும்பு கார்பரில் புகழ் பெற்றிருந்தன.. அவற்றின் வேலை கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும் பிரமாண்டமான சரக்குக் கப்பல்களை இடித்து தள்ளி திருப்புவது, இவற்றின் முன் அணியத்தில் மிகப்பெரிய பென்ரன் எனப்படும் கயிற்றினால் பின்னப்பட்ட பாதுகாப்பு தலையணை இருக்கும், எயார்பாக் போல.. மிகமிக கடினமான இரும்பும், கயிறும் கலந்து பின்னும் பென்ரனை உருவாக்கும் பென்ரகாங் பிரிவுத் தலைவராக இருந்தவரே எனது தந்தை.. இதனால் கார்பருக்கு அடிக்கடி போவேன்.
துறைமுகத்திற்கு வேலைக்காக அதிகாலை எழு மணிக்கு டிக்கட் அடித்து உள் நுழைய வேண்டும்.. மத்தியானம் 12.00 மணிக்கு மில்சாட் அரிசியில் சாதம், சூரை மீன் குழம்பு, கோவாச்சுண்டல், ஒரு பொரியலுடன் இலவசமான சாப்பாடு வரும்.
சாப்பிட்டு விட்டு ஊர்க்கதை, சினிமா படங்கள் பற்றிய தகவல்களை பரிமாற நாலு மணியாகிவிடும், அதற்கு சில நிமிடங்கள் முன்னதாக வாளிக்கிணறு எனப்படும் தண்ணீர் தொட்டியில் குளித்துவிட்டு உடை மாற்ற நாலரை மணி சங்கு ஊதும்.. தொழிலாளர்களை கொழும்பு நகரம் இரு கரங்களையும் அகல விரித்து வரவேற்கும்..
குளிரூட்டப்பட்ட நியூ ஒலம்பியா, றீகல், சவோய் என்பன ஆங்கிலப்படங்களுக்கு, கெப்பிட்டல், பிளாசா, சென்ட்ரல், ஜிந்துப்பிட்டி முருகன், மைலன், ஈரோஸ் பாமன்கடை, கிங்ஸ்லி, நவா, பின்னாளில் ஜாபீர் ஏ காதரின் ஜெஸீமா, எல்பின்ஸ்டன், கெயிட்டி, செல்லமஹால் போன்ற திரையரங்குகள் மாலை நேரம் டிக்கட் எடுக்க முடியாமல் நிறைந்து கிடக்கும்.
கொழும்பில் திரும்பின பக்கமெல்லாம் தமிழ் திரைப்பட போஸ்டல்கள் நிறைந்து கிடக்கும்.. ஆடிவேல் வந்தால் பார்க்கவும் வேண்டுமோ செட்டியார் தெருவை..
எங்கு புதிய திரைப்படங்கள் வந்தாலும் அங்கு முதலாவது காட்சிக்கு ஒருவர் வரிசையில் நிற்பார் அவர்தான் தில்லைநடராசா.. முதலாவது காட்சியில் படத்தைப் பார்த்து மற்றவர்களுக்கு கதை சொல்வது இவருடைய பொழுது போக்கு..
முதல் நாள் மட்டுமா.. இல்லை மறு நாள் மீண்டும் பார்ப்பார்.. அவர் பார்க்காத திரைப்படங்களே கிடையாது.. வாழ்வின் ஒரேயொரு பொழுது போக்கு திரைப்படங்கள்தான்.
திரைப்படத்தை கதையாக சொல்லும் கலைஞர்களில் இவருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.. படம் பார்த்ததைவிட இவருடைய கதை விபரிப்பு அபாரமாக இருக்கும்.
திரைப்படங்களை பார்ப்பது மட்டுமா.. அதில் வரும் வாழ்க்கை முறையை சிறைப்பிடித்து அதுபோல தனது வாழ்வின் கோட்பாடுகளையும் வகுத்துக்கொண்டார்..அதுதான் இங்கு மிக முக்கியம்.
அந்தக்காலத்தில் காதலையும் திருமணத்தையும் பெற்றோருக்கு தெரிவிக்க அஞ்சி ஒரு கடிதத்தில் எழுதிவிட்டு காணாமல் போவது திரைப்பட கதையாக இருக்கும், பல திரைப்படங்களில் இந்தக் காட்சி திரும்பத் திரும்ப வரும்.
ஒரு நாள் இவருடைய தாயார் ஆச்சிமுத்துவுக்கு ஒரு கடிதம் வருகிறது.. தான் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகவும் அவளையே மணம் முடிக்கப்போவதாகவும் எழுதியிருந்தார்.
வீடு போனால் தாயார் கோபம் கொண்டு அடிக்க வருவார் என்பது இவருக்குத் தெரியும்.. எனவே திரைப்படத்தில் வருவது போல ஒரு நாள் மணவாளக் கோலத்தில் இருப்பதாக தாய்க்கு செய்தி வருகிறது.. கல்யாணம் முடிந்துவிட்டது.
தனது சகோதரிக்கும் திரைப்படங்களில் வருவது போலவே தனது நண்பனை அழைத்து வந்து ஒரு நாள் மணமுடித்துக் கொடுக்கிறார்..
அந்தக்காலத்து தியாகபூமி, பராசக்தி, கூண்டுக்கிளி, பாசமலர், சிந்தாமணி, தாயின் மடியில் போன்ற படங்களில் இருந்த சமூக சீர்திருத்த வாழ்வு இவருடைய நடத்தைகளில் பிரதிபலிப்பதை பல தடவைகள் அவதானித்துள்ளேன்.
திரைப்படங்களில் வரும் கதாநாயகன் கெட்ட வார்த்தைகளை பேசமாட்டான், இவர் வாழ்வில் தூஷண வார்த்தையை என்றுமே பேசியது கிடையாது, தமிழை மரியாதைக்குரிய திரை மொழியாக பயன்படுத்தினார்.
அதுபோல மிகப்பெரியளவில் தாய்ப்பாசம் கொண்டவராக இருந்துள்ளார்.. தனது தந்தையாரின் ஆட்டத்திவசத்திற்கு சிறிது தாமதமாக வந்தமைக்காக இவருடைய தாயார் கொட்டும் மழையில் குடையால் இவருக்கு அடிக்க மழை வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்து, அம்மா அம்மா என்று அலறியபடி அடி வாங்கினார்... கல்யாணம் முடித்து குடும்பஸ்தனாகிய பிறகும் அவர் வெள்ளத்தில் கிடந்து அடி வாங்கியதை பார்க்க எனக்கு சங்கடமாக இருக்கிறது.
அந்த நேரம் அவரால் வயதான தாயை தடுத்திருக்க முடியும், ஆனால் சிவாஜி, எம்.ஜி.ஆர் போல தாய் அடித்தால் தடுக்காது அடி வாங்கும் நாயகர்கள் போல அடி வாங்கிக் கொண்டு அழுதார், சினிமா வழிகாட்டியது.
பின்னர் தாயார் கோபம் ஆறி சாப்பாடு கொடுக்க கண்ணீரைத் துடைத்துவிட்டு சாப்பாட்டை சாப்பிட்டதை அருகில் பார்த்துக் கொண்டிருந்தேன்.. மாலை தாயும் மகனும் அன்னியோன்னியமாக கதைப்பதையும் பார்த்தேன்..
ஒரு நாள் வெயில் படத்தில் வருவதைப் போல 30 ரூபாவை சுவரில் தொங்கிய படத்தின் பின்னால் இவருடைய தாய் வைத்துவிட்டு இவரையே படம் பார்க்க பணத்தைத் திருடியதாக திட்டுகிறார்.. பின் அடிக்கிறார்.. அடி வாங்குகிறார்.
" அன்பில் மலரும் அற்புதம் எல்லாம்
அன்னையின் விளையாட்டு..
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு.. "
பின் சொற்ப நேரத்தில் தாயார் மறந்து போய்விட்டேன் என்று பணத்தை படத்தின் பின்னால் இருந்து எடுக்கிறார்.. அப்போது தாயின் தவறை இவர் சுட்டிக்காட்டுவார் என்று பார்க்கிறேன்.. பேசாமலே இருக்கிறார்.. சரி தாயாவது தன் தவறுக்காக மகனிடம் மன்னிப்புக் கேட்பாரா.. இல்லை அவரும் பேசாமல் இருக்கிறார்.. வசனமே இல்லை பாசக்கடல் வார்த்தை இல்லாது கிடக்கிறது.. பின் தாயின் தேநீரை வாங்கிக் குடிக்கிறார்..
இன்றைய இளைஞனால் இந்தச் சிகரத்தை தொட முடியுமென நான் நம்பவில்லை..
இவரைப் போல தாயை நேசித்த ஒருவரை நான் வாழ்வில் கண்டதே இல்லை.. அதுபோல "மணமுடித்தாலும் முடிக்காவிட்டாலும் நீ என்றுமே என் குழந்தையென.." நாற்பது வயதிலும் தடியால் மகனை அடித்த தாயையும் கண்டதில்லை..
மது போதையில் தாய்க்கு அடிக்கும் எத்தனையோ மகன்களை பார்த்துள்ளேன்.. அவர்களின் முன் இவர்கள் இருவரதும் பாசம் சிகரத்தைத் தொட்டது..
ஏன்..
"அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ..?" திரைப்படங்களே இவரை ஒரு பாசமலராக்கியது, அது மட்டுமா இறுதிவரை தனது குடும்பத்திற்காக உத்தமமான குடும்பத்தலைவனாக வாழ்ந்தே தனது வாழ்வையும் நிறைவு செய்தார்.
ஏராளம் திரைப்படங்களுக்கு என்னை அழைத்துச் சென்றவர்.. நான் எழுதிய ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல்; என்ற புத்தகத்தில் இவருடைய பெயரை போட்டு மரியாதை செலுத்தியுள்ளேன்.
இவர் வேறு யாருமில்லை என் தாய் மாமன்தான்..
கொழும்பில் இவரோடு நான் பார்த்த படங்கள் பல அதில் ஒன்று எம்.ஜி.ஆர் நடித்த அன்னை பிலிம்ஸ் தாயின் மடியில்..
"தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.. " படம் முடிய கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஏற்றிவிடுகிறார்.. ஆண்டு 1964
கடகடவென ஓடுகிறது ரெயில்வண்டி.. கொடிகாமம் வரை அந்தப் பாடல் கேட்கிறது..
" எத்தனை செல்வங்கள் வந்தாலுமே..
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே..
அத்தனையும் ஒரு தாயாகுமா..
அம்மா.. அம்மா எனக்கது நீயாகுமா..? "
கீழே உள்ள பாடலை தவறாது கேளுங்கள் திரைப்பட நேசர் ம.தில்லைநடராசா தன் தாய் ஆச்சிமுத்துவை எப்படி நேசித்தார் என்பதை அறிவீர்கள்..
திரைப்படம்தான் எத்தனை சக்தி மிக்க சாதனம்.. இன்றய ஒவ்வொரு இளைஞனும் அறிய வேண்டிய கதை இது..
இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல இதயவானில் என்றும் வாடாத இனிய ரோஜாக்கள்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: June 02, 2016 at 01:28
அடுத்த வாரம் நான் கண்ட சாக்கிரட்டீஸ் சாந்தமூர்த்தி மாஸ்டர் என்ற ஆக்கத்தை எழுத தூண்டுதல் தந்த அன்பு ரமேசிற்கு நன்றிகள்..
வட்டன்துரை என்ற ஆக்கம் 100:100 வீதம் சரியான பதிவு என்று தொலைபேசி மூலமாக வாழ்த்திய இங்கிலாந்து வாழ் குட்டியண்ணா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இந்த ஆக்கம் வெளியான பின்னர் பல நாடுகளிலும் வல்வை உறவுகள் வரும்படி அழைப்புவிடுகிறார்கள்.. போக நேரமின்றி தவிக்கிறேன்..
Ramesh Manivasagam (Danmark)
Posted Date: June 01, 2016 at 12:07
இருள் விலகி உதயசூரியன் ஒளித்தடம் புரிவது பூமியில் - எனது குருநாதர் ஐயா கே. எஸ் . துரை அவர்கள் உள்ளத்தில் இருளே இல்லை . அவர்கள் தமிழ் உலகுக்கு ஒளிபாய்ச்சும் உன்னத மகா மனிதர் - நாலு சில்லறை மடிக்கு வந்ததும் நான் முன்பு அரச வாழ்க்கை வாழ்ந்தேன் என்று புளுகும் பொய்யான மனிதர்கள் மத்தியிலே , இத்தனை சிறப்புகள் விருதுகள் சாதனைகள் செய்தும் தனது ஏழ்மையான பழங்காலத்து வாழ்வை மறைக்காது எல்லோருக்கும் தெரியப்படுத்தும் உண்மையின் ஒளி ஐயாவின் நெஞ்சம். அவர்போல் உண்மையாளர்களை கண்டுபிடிப்பது குதிரைக்கொம்பாகும் . தனது ஊரின் அத்தனை விடையங்களையும் ஆவணப்படுத்தும் ஐயாவின் முயற்சியை அனைவரும் பாராட்டுதல் வேண்டும். தமது ஊரின் பெருமைகளை ஐயாவின் ஆவணங்களில் கண்டுகொண்டு வருங்காலத்து வல்வை வாலிபர்கள் ஐயாவின் சேவையை போற்றிக்கொண்டாடுவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை - வாழ்க வல்வை வாழ்க தமிழ் வாழ்க கே.எஸ். துரை ஐயா .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.