பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அம்பாளின் தீர்த்தோற்சவப் பெருவிழா 10-05-2017 அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது. மேற்கே ஊரிக்காட்டிலிருந்து கிழக்கே ஊறணிக் குடியேற்றம் வரையிலான வீதிகளின் இரு மரங்கும் வாழை, மூங்கில், சவுக்கு
முதலானவைகளால் அலங்கரிக்கப்பட்டு, பெரியதும் சிறியதுமாக லைற் அலங்கார கட் –அவுட்டுக்களும், வீதியை மூடிய மின் அலங்காரங்களும், தாக சாந்தி செய்யும் தரிப்பிடங்கள் பலவுமாக வெகு ஜோராக தீர்த்தோற்சவ விழா நடந்தேறியது.
தீர்த்தோற்சவத்தன்று இரவு அலங்காரங்க் காண குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிளிலுமிருந்தும் மக்கள் சாரி சாரியாக திரண்டு வந்திருந்தனர். கிழக்கே சுடலைக்கு அப்பாலும், மேற்கே சோடாக் கடைக்கு அப்பாலும், தெற்கே மருதடியிலும் வாகனகளுக்கு தடைகள் போடப் பட்டிருந்தமையால் சுமார் 3 கிலோமீட்டர் நீளமான இந்திரவிழா பகுதியினை மக்கள் நடந்து சென்றே பார்த்தனர். ஒரு கட்டத்தில் தீருவில் விளையாட்டு மைதானம் பல்லாயிரம் மோட்டார் சைக்கிள்களால் நிரப்பப்பட்டு, இடவசதியன்றி தூபியடி மைதானம், முருகையன் வீதி மக்கள் நடமாட முடியாதபடி வாகனங்களால் நிரம்பி வழிந்தன.
இப்பெருவிழா ஆரம்ப காலங்களில் “வல்வைச் சரித்திரம் கண்டறியாத பெருவிழா’ என விளம்பரப்படுத்தப்பட்டு, படிப்படியாக “இந்திர விழாவாக’’ மாறிய வரலாற்றை சுருக்கமாக ஆராய்வதே இந்த இணையக் கட்டுரையின்நோக்கமாகும். இந்திரவிழாவிற்கு இந்த ஆண்டு 50 வருடங்களாகின்றது. பொன் விழாக் காணும் இந்த விழாவினை மிகச் சிறப்புற அமைய “ நெடியகாடு மோர்மட வரவேற்புக் குழுவினர்” விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்த ஏற்பாட்டில் கணபதி மின் அமைப்பாளர்களின் பல மாத கால உழைப்பும் கடுமையான முயற்சியும் தூக்கலாகத் தெரிந்தது. பெரியதும் சிறியதுமாக அவர்களிடமுள்ள 10 மின் பிறப்பாக்கிகளும் வேம்படியில்ருந்து ஊறணிக் குடியேற்றம் வரையிலான பகுதிகளை இரவைப் பகலாக்க – பார்த்து ரசித்த லட்சம் மக்களும் வியந்து நிற்க – அவர்களது கைவண்ணங்கள் ஜொலித்தன – பிரகாசித்தன – மயக்கின.
புதுப் பொலிவு பெற்ற தீர்த்தக் கடற்கரை
வல்வை சிவன் கோவில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக முன்னரே – நெடியகாடு இளைஞர்களால் ஊறணி தீர்த்தக் கடற்கரையின் சுத்திகரிப்பு வேலைகள் ஆரம்பமாகி விட்டன.
ஆரம்பத்தில் அந்தச் சிரமதானப் பணியில் ஒரு சிலரே ஈடுபட்டிருந்தபோதிலும், நாளாக நாளாக அந்தப் பணி வேகம் கொள்ள ஆரம்பித்து, கிழக்கே ஊறணி ஊற்றுச் சுவர் கட்டிலிருந்து – மேற்கே பெண்கள் ஆடை மாற்றும் மண்டபம் வரையிலான பகுதிகள் முழுமையாக சுத்தமாக்கப்பட்டன. கடலில் அம்பாள் தீர்த்தமாடும் இடத்திலுள்ள
கற்பகுதிகள் அனைத்தும் அள்ளப்பட்டு – மேலே மணற்பரப்பு சமப்படுத்தப்பட்டுதுடன், தீர்த்த மடத்தையண்டிய பகுதிகளிலும் கற்கள் அகற்றப்பட்டு வெண்மனல்
பரப்பி – தீர்த்த மடத்தடி முழுமையாக புதுமெருகு கண்டது.
இந்திரவிழாவிற்கான முன்னோட்டம்
அம்பாள் 8 ஆம் திருவிழாவன்று வேட்டைக்காக நெடியகாடு சென்றபோதே, அங்கிருந்த பல்வேறு மின் அலங்காரங்கள் இந்திரவிழாவிற்கான முன்னோட்டமாக அமைந்ததால், பெரும் எதிர்ப்பார்ப்புடனேயே மக்கள் இந்திரவிழா காண வந்திருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு வீண்போகாமல் நிறைவாகவே கண்களுக்கு விருந்து கிடைத்தது.
வேம்படியிலிருந்து நெடியகாடு மோர்மடம் வரையில் வீதியின் இரு மரங்கிலும் வைக்கப்படிருந்த சுழலும் மின் அடுக்கும், மோர் மடத்திலுருந்து – அம்பாள் தரித்து நிற்கும் பந்தல் வரையிலான நீண்ட வீதியில் சம இடைவெளியில் 12 அடிவரை உயரமான சிறிய மின் பல்புகளினால் ஆக்கப்பட்ட குத்துவிளக்கு அமைப்பு – பக்கத்திற்கு எட்டாக மொத்தம் 16 விளக்குகள் ஒளிர்ந்தன.
இந்திரவிழாவிற்கு அகவை ஜம்பது
இப் பெருவிழா ஆரம்ப காலங்களில் “வல்வைச் சரித்திரம் கண்டறியாத பெரு விழா” என விளம்பரப்படுத்தப்பட்டு, படிப்படியாக “இந்திர விழாவாக” மாறிய வரலாறு பற்றிய சுருக்கமான ஆய்வு இது. இந்திர விழா தொடக்கி இன்று ஜம்பது வருடங்கள் கடந்திருக்கின்றது. பொன்விழாக் காணும் இந்த நிகழ்வினை இம்முறை சிறப்பாக செய்ய “ நெடியகாடு மோர்மட வரவேற்புக் குழுவினர்” விரிவான செயற்பாடுகள் செய்திருந்தனர். “இந்திர விழா” ஜம்பது ஆண்டுகள் கடந்து விட்டாலும் கடந்து வந்த காலப்பகுதியினை மூன்று கட்டங்களாக பிரித்து பார்க்க முடிகிறது.
இந்திர விழா ஆரம்ப காலம்
ஆரம்ப காலம் வாண வேடிக்கையோடு சம்பந்தப்படுகிறது. அந்நாளில் இந்திரவிழாவை பிரபல்யப்படுத்தியதே இந்த வாண வேடிக்கைதான். தெணிக் கிணற்று மூலையில் (ஒரு காலத்தில்) வாணக் கொட்டில்களில் சுயமாகத் தாயாராகும் விறிசு, வெள்ளி விறிசு வாணங்களுடன், வாணத் தயாரிப்பில் எப்பொழுதும் முதலிடம் வகிக்கும் அளவெட்டியிலிருந்தும், நம் ஊரவரான மகோற்கடம் அண்ணாவின் தாயரிப்பில் உருவாகும் ஆகாய வெடி, மூலை வெடி அவுட்டுகள் போன்றவையும் சேர்த்து வாண வேடிக்கை களை கட்டி நிற்கும். இதேவேளை புகைக்கூண்டுகளின் தயாரிப்பும் சிறுகற் சிறுக ஆரம்பமாகிறது.
இந்திர விழா இடைக் காலம்
இந்திர விழாவின் இடைக்காலம் வாணவேடிக்கைகளுடன் புகை கூண்டுகளின் தாயாரிப்பிலும் பெருமளவு இடம்பிடித்தன. பல நூறு சிறிய புகை குண்டுகளுடன் , 50 அடி – 60 அடி உயரம் வரையிலான பெரிய புகைக்கூண்டு வரை தாயாரிக்கப்பட்டு வானில் விடப்பட்டன. தெணிக் கிணற்று மூலையில் இருந்த வாணக் கொட்டகைகள் இரு முறை எரிந்ததும், புகை கூண்டுகள் தயாராகும் மடத்தின் முன் விறாந்தைப் பகுதி ஒரு தீர்த்த நாளில் தீப்பற்றியதும் (முன்னர் இது கிடுகுகளினால் வேயப்பட்டிருந்தது), வாண வேடிக்கைகளின் போது ஏற்பட்ட சிறு விபத்துக்களும், படிப்படியாக வாண வேடிக்கைகளும் குறைந்து நாளாவட்டத்தில் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் புகைக்கூண்டுகளின் தயாரிப்பும் – நிகழ்ச்சிகளின் தரமும் படிப்படியாக வளர்ந்தன. அத்துடன் மின் அலங்காரங்களில் கூடுதல் கவனமும் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளின் தரம் அதிகரிக்க இந்திரவிழாக் காணவரும் மக்கள் கூட்டமும் அதிகரித்தது.
இந்திரவிழாவின் ஆரம்ப காலத்தில் வெள்ளைக்குட்டி அண்ணா கடைவரை (இன்று குஞ்சன் கடையடி) இருந்த வாளை தோரண வளைவுகள் வேம்படிவரை சென்று, அடுத்தடுத்த வருடங்களில் சந்திவரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் காலக்கிராமத்தில் அம்பாள் வீதிவரை வீதி அலங்காரங்கள் தொடர்ந்தன. வீதிகளின் ஓரங்களிலும் வீதிகளை மூடியும் கட்டப்படும் கட் அவுட்டுக்களும் அதிகரித்தன.
பின்னர் தெற்கு வீதியில் (இப்போதும் உள்ள கிணற்றுக்கு கிழக்காக) பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்களாக இருந்த சோமசுந்தரக்குருக்களின் (சோமையா) இல்லம் அகற்றப்பட்டு வீதி அகலமாக்கப்பட்டது. பழைய மோர் மடம் இடிக்கப்பட்டு புதிய அழகான – வசதிகளுடன் கூடிய – எண்கோண வடிவம் கொண்ட மோர் மடம் 1978 இல் அமரர் தியாகராசா தேவசிகாமணி அவர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டது. பிள்ளையார் தெற்கு வீதியின் அகலிப்பும் – புதிய மோர் மட கட்டுமானமும் இந்திரவிழாற்கு மேலும் வேகம் கொடுத்தது.
வட பகுதியிலிருந்து வந்த இசைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல், தலை நகரிலிருந்து வந்திருந்த பிரபலமான இசைக் கோஷ்டிகள் இந்திரவிழா மேடையினை அலங்கரித்தனர். கணபதி மின் அமைபாளர்களது நிலையான வளர்ச்சி மின் அலங்காரத்தில் பல புதுமைகள் கண்டன. புதிய பல நுணுக்கங்கள் புகுத்தப்பட்டன.
இந்திரவிழாவின் பிற்காலம்
இவ் வருடத்தைய (2017) இந்திரவிழாவின் ஏற்பாடுகள் “”இந்திரவிழாவின் பிற்காலத்தினை துல்லியமாக பிரதிபலிப்பதனால், இந்திரவிழாவின் 50 ஆவது ஆண்டு நிகழ்வினை சற்று விரிவாகப் பார்ப்போம்.
திருவிழாவின் உச்சமான தீர்த்தோற்சவ நாளில், சித்திரா பெளர்ணமி தினத்தில் காலை 06.40 மணிக்கு அம்பாள் தீர்த்தக் கடற்கரை நோக்கிப் புறப்படுகின்றாள். அம்பாளை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக, நெடிய காட்டிலிருந்து வந்திருந்த 10 கூட்டு பறை மேளங்களின் முழக்கத்தால் ஊரெல்லாம் அதிர்ந்தது. அம்பாள் வாசலுக்கு பறை மேளங்கள் வந்துசேரவும், அம்பாள் தீர்த்தமாடப் புறப்படலும் சரியாக இருந்தது.
முன்னே பறை மேளங்கள் முழங்க, இடையே மங்கல இசை ஒலிக்க, ஆண்கள் முன்னேயும் பெண்கள் பின்னேயுமாக பெரும் கூட்டமாக நடந்து வர அம்பாள் தீர்த்தக் கடற்கரை நோக்கி நகருக்கின்றாள். சித்திரா பெளர்ணமி விரத நாளும் – தீர்த் தோற்சவமும் இணைந்து வந்ததால், அயலூர் மக்களும் அதிகமாகவே தீர்த்தக் கடற்கரைக்கு வந்திருந்தனர்.
தீர்த்தக் கடலும், தீர்த்த மடத்தின் முன்னுள்ள தரைப்பகுதியும் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு வெண்மணல் பரப்பட்டு இருந்த காரணத்தால் – பக்தர்கள் சிரமமின்றி கடலிலும் தரையிலும் நடமாட முடிந்தது.
பழைய அந்தியேட்டி மடத்தின் தரைப் பகுதிக்குத் தறுப்பாள் விரித்து – மேலே பந்தலிட்டு அதன் கீழ் அமர்ந்தபடி பறைமேளங்கள் முழங்கின. தீர்த்தக் கடற்கரையின் பல பக்கங்களிலிருந்தும் புகைகூண்டுகள் வானில் ஏவப்பட்டன. தீர்த்தக் கடற்கரையின் தென் புறமாக பக்தர்களுக்கு தாகசாந்திகளுக்கான பானங்கள் வழங்கப்பட்டன.
தீர்த்தமாடியக் கரையேறிய அம்பிகை – அர்ச்சனைகள் நிறைவுற்ற பின் சரியாக 11.30 மணிக்கு பிள்ளையார் கோவில் வந்து சேர்ந்தார். ஊரணித் தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடி பிள்ளையார் வாசலுக்கு வரும் ஏறக்குறைய 22 வரையிலான சுவாமிகளும் வரவேற்கும் திருவருள் நிறைந்த வாசலாக நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயம் விளங்குகிறது. இதில் சிவன், அம்மன், வேவில் பிள்ளையார், லெட்சுமி நாராயணர், ஆதிவைரவர், புட்டணி பிள்ளையார்,வன்னிச்சியம்மன், கப்பலுடையவர் ஆகியவை பிள்ளையார் கோவிலிலே தங்கி நின்று இரவு புறப்படும்.
இரவு நிறைந்த மின் அலங்காரங்களுடன் அழகு தேவதையாக – புன் சிரிப்புடனும் பூரித்த கன்னங்களுடனும் இந்திர விமானத்தில் அம்பாள் ஆரோகணித்து (இரவு 7.40) பந்தலுக்கு வருகிறாள். மோர்மட முன்பாக போடப்பட்டிருந்த மேடையில் மென்மையான நாதஸ்வர இசையுடன் விழா களை கட்ட ஆரம்பித்தது. கோபுரத்தின் தெற்கிலிருந்து குளத்தடி வரையுள்ள சுவர்களின் மாடங்களை அலங்கரித்துள்ள பால விநாயகர் , தருண விநாயகர், பக்தி வினயாகர், சக்தி விநாயகர், சித்தி விநாயகர் எனவுள்ள அனைத்து விநாயக ரூபங்களும் பச்சை சிவப்பு என பல வர்ண பல்புகளினால் அலங்காரம் பெற்றிருந்தன.
அம்பாள் தரித்து நின்ற பந்தல் அலங்காரமும் எதிரே நெடியகாடு மோர்மட நிறைவான ஒளி அலங்காரமும், மோர் மடத்தின் உச்சியில் இருந்து சுழலும் மின் அமைப்பும், அருகே அரசடி வைரவரின் மின் அலங்காரமும் அற்புதமாக இருந்தன. மோர் மட அருகே பெரு விருட்சமாக நீண்டு- நிமிர்ந்து- பரந்து – விரிந்துள்ள இலுப்பை மரத்தில் (நிட்சயமாக) 100ற்கு மேற்பட்ட தனிப்பச்சை நிற ரீயூப் லைற்றுக்கள் தொங்கிக் கொண்டிருந்தமை தூரத்து பார்வைக்குத் தனியழகு காண்பித்தது.
அண்மித்த பார்வையில் எப்படி இந்த ரீயூப் பல்புகளை மிகச்சிறிய கொப்புகளில் நிறுத்தினார்கள் என்பது வியப்பாக இருந்தது. இதே போன்று புதிய கணபதி பாலர் பாடசாலைக்கு முன்பாக உள்ள அரச மரத்தடியில் 50ற்கு குறையாமல் தனி சிவப்பு லைற்றுக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இப்பொழுது நாம் குளத்தடி அருகே வருகின்றோம் குளத்தின் நடுவே மிகப்பெரிய நாகம் சங்கு –சக்கரம் தெரியப் படத்தை விரித்தபடி – நாகத்தின் உடற்பகுதி ஒரு பகுதி நீருக்குள்ளும் – மறு பகுதிகள் நீர் மேலும் தெரியும்படியான அமைப்பு காணப்பட்டது.
சங்கு சக்கரம் உள்ளிட்ட நாகபடத்தின் நிழல் – அமைதியான குளத்து நீரில் பட்டுப் பிரதிபலித்து கொள்ளை அழகு காட்டியது. வாயைப் பிளந்தபடி ஒரு ஓரமாகப் படுத்திருந்த முதலை, ஆங்காங்கே நீரில் இரை தேடிக் கொண்டிருந்த கொக்குகள், நீரின் மேற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த அன்னப்பட்சிகள் – மேலிருந்து குளத்தினுள்ளே வீசப்பட்ட ஒளி வெள்ளத்தில் பிரமாதமாக இருந்தது. குளத்தடி அருகே நிற்கும் கத்தோக்கு மரத்திலிருந்து தொங்கிய சிறிய பல்புகளின் ஒளிர்வு பார்ப்போரை பரவசப்படுத்தியது. குளத்தடிப் பிள்ளையாரும் தன் பங்கிற்கு அலங்காரம் பெற்றிருந்தார்.
அருகே கணபதி படிப்பகமும் – மறுபுறம் புதிதாக கட்டப்பட்டுள்ள கணபதி பாலர் பாடசாலையின் மாடிக் கட்டமும் ஒளி பெற்று பிரகாசித்திருந்தன. இவற்றின் அருகே ஒற்றை வரி கொண்ட ஒரு லற் கட் அவுட் அழகாக இருந்தது. கணபதி படிப்பகம் அருகே உள்ள சுமைதாங்கியை அடுத்து – கிழக்கே கிணற்று அடி வரையிலான நான்கைந்து தென்னை மரங்களை சுற்றியிருந்த பகுதி யாரும் உட்பிரவேசிக்க முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தது.
உள்ளே பெரிய ரபர் மீன் தொட்டியில் சிறுமீன்கள், லவ் பேட்ஸ் பறவைகள் கொண்ட கூடு, கிளிகள் உள்ள கூடு, முயல்கள் உள்ள கூடு, ஒன்றிரண்டு ஆடுகள் என்பன கொண்டு சிறுவர்களைக் கவரக் கூடியதான ஒரு காட்சிக் கூடமாக்கி – அதற்கு மங்கலாக வெளிச்சம் இட்டிருந்தனர்.
நெடியகாடு பூங்காவன மண்டபம் திருவிழாக் கால அலங்காரத்தை ஒத்தான மின் அலங்காரம் (ஒவ்வொரு தூணும் தனித் தனியாக) செய்யப்படிருந்தது. பூங்காவன வட கிழக்கு மூலையில் ‘வல்வையின் 50 ஆவது இந்திர விழா”” என எழுதப்பட்ட வட்ட வடிவ அமைப்போடு இணைந்தபடி உயரமாக இருந்த – பல்வேறு நிறங்களில் அலங்கரிக்கப்பட்ட “”மின் மரங்கள்”” அனைவரையும் கவரந்திருந்தது. அழகாக – அற்புதமாக வடிவமைக்கப்பட்ட அலங்காரம் கண்டு வியக்காதவர்கள் இல்லை எனலாம்.
மகளிர் மைதானத்து அலங்காரம் மனதை அள்ளியது. ஏற்கனவே வேட்டைத் திருவிழாவிற்காக போடப் பட்டிருந்த சுழலும் ட்யூப் லற்றுக்கள், மைதானத்தின் மேடையருகே வளைவாக வைக்கப்பட்டிருந்த 7 குத்து விளக்குகளின் வரிசை மைதானம் முழுவதும் ஒளி வெள்ளமாகக் காட்சி தந்தது.
மைதானத்திற்கும் மகளிர் கல்லூரிக்கும் இடைப்பட்ட சுடலைப் பகுதியில் இரண்டு வாகை மரங்கள் பெரு விருட்சமாக வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த 2 வாகை மரங்களின் அடியிலிருந்தும் மேல் நோக்கிக் கொடுக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த போக்கஸ் லற்றுக்கள் மேலே உள்ள கொப்புக்கள் இலைகள் முழுவதையும் ஒளி பெறச் செய்து அழகூட்டின. அந்த 2 மரங்களிலும் 2 போக்கஸ் லற்றுக்கள் தவிர வேறு எதுவுமில்லை. இதனைச் சிந்தித்துச் செய்த மின்னியளானின் கற்பனைத் திறனுக்கு ஒரு “”சபாஸ்’ போடலாம். அத்தனை அழகினை அந்தப் பெரு மரங்கள் காட்டி நின்றன.
பழை மருந்துக் கடைக்கு மேற்கே – தற்போதைய ஆஸ்பத்திரி கூட்டுறவுச் சிற்றுண்டி சாலைக்கு எதிரே வீதி ஓரமாக கேட்பார் – பார்ப்பார் அற்று பத்தையும் பரட்டையுமான இடத்தில் வளர்ந்திருந்த எருக்கலை மரங்களின் அடியில் வைக்கப்படிருந்த 4 ட்யூப் லற்றுக்கள் - எருக்கலை மரங்களின் ஊடாக ஒளி பரப்பி தனி அழகைக் கொடுத்தன. இந்த இடத்திலும் மின்னியளானின் கற்பனைத் திறன் பளிச்சிட்டது.
மகளிர் மைதான மதவடியிலிருந்து கிழக்கே இந்து மயானம் வரையிலான – வீதியின் இரு மரங்கும் இரவைப் பகலாக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த பச்சையும் வெள்ளையுமான ட்யூப் லற்றுக்கள் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக நிறங்களை நினைவூட்டி நின்றன. மகளிர் மைதான முடிவில் (தெருவின் திருப்பத்தில்) வீதியை மூடிய ரன்னிங் லற் இருந்தது.
தீர்த்த மடத்திற்கு எதிரே – அம்பாள் தீர்த்தமாடிய இடத்தில் கடல் மேலாக அமைக்கப்பட்டிருந்த 30 x 20 அடி அளவு கொண்ட பெரிய மேடையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிந்தது. மேடையைச் சுற்றி சவுக்க மரங்கள் நாட்டப்பட்டு (கடலினுள்) லற்றுக்கள் போடப் பட்டிருந்தன. தரையில் வரிசையாக 8 குத்து விளக்கு மின் அலங்காரமும் 8 சுழல் விளக்கு மின் அலங்காரமும் அழகூட்டி நின்றன.
புதிய அந்தியேட்டி மடத்தின் மேல் மூலையில் இருந்த ட்யூப் லற்றுக்களின் அலங்காரக் கூடு சுழன்றபடி அழகு காட்டியது. மேற்குறித்த 30 x 20 அடி கொண்ட அகன்ற மேடை பகல் 12 மணிவரை பிள்ளையார் கோயில் வாசல் முன்பாக இருந்ததை நாம் பார்த்தோம். அதன் பின்னரே குறுகிய நேரத்தில் இந்த மேடை தீர்த்தக் கடலின் மேலாக போடப்பட்டு சுற்று அலங்காரமும் செய்யப்பட்டமை நமக்கு பெரு வியப்பைத் தந்தது.
நெடியகாடு மோர் மடம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இரவு 1 மணிக்கு அம்பாள் தமது இடம் நோக்கிப் புறப்படுகின்றாள். ஊரிக்கட்டிலிருந்து ஊரணி குடியேற்றம் வரையில் இந்திர லோகமாகக் காட்சி தந்த அழகினை கண்டு களித்த லட்சம் மக்களும் பூரண திருப்தியுடன் புறப்படுகின்றனர்.
“நெடியகாடு மோர் மட வரவேற்புக் குழுவினரின்” ஏற்பாட்டில் இடம்பெற்ற “இந்திரவிழாவின் 50 ஆவது வருட” நிகழ்வாக இது இருந்தபோதிலும், நெடியகாடு இளைஞர்கள் பொது மக்கள் அனைவரினதும் கூட்டு முயற்சி என்பதுவே உண்மையானதாகும்.
கணபதி மின் அமைப்பாளர்களின் மின் அலங்காரங்களுமே இந்திர விழாவினை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்பதுவே நிதர்சனமானதாகும். கணபதி மின் அமைப்பாளர்களே விழாவின் நாயகர்களாவர். இந்த இளைஞர்களின் பல மாத முயற்சியின் பலன், இதனைப் பார்த்து பரவசப்பட்ட மக்களின் முக மலர்ச்சியில் தெரிந்தது. இத்தகைய சாதனை புரிந்த இளைஞர்களை எத்துணை பாராட்டினாலும் தகும். இன்னும் ... இன்னும் பல சாதனைகளில் வெற்றிபெற நமது இதயபூர்வமான வாழ்த்துக்கள் .
சாதனைகளும் தொடரும் ..... இந்திர விழாவும் தொடரும் .......
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பார்த்தி (Srilanka)
Posted Date: May 15, 2017 at 18:09
நல்ல கட்டுரை . ஆனால் ஏனயை பிரதேச இளைஞர்களின் ஆக்கங்கள் முயற்சிகளையும் குறிப்பிட்டிருக்கலாம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.