தமிழகத் திருக்கோவில்கள் வரிசை திருவெண்பாக்கம் பூண்டி (நீர்த்தேக்கம்) - வல்வையூர் அப்பாண்ணா-
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2016 (வெள்ளிக்கிழமை)
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் 47 கி.மீ பயணித்து திருவள்ளுர் நகரத்தை அடைய வேண்டும். திருவள்ளுரின் பிரதான சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, 4 கி.மீ தூரம் (மிக மோசமான பாதையினூடாக ) பூண்டி நீர்த்தேக்கத்து அணைக்கட்டு அருகாகவே சென்றால் திருவெண்பாக்கம் திருக்கோவிலை அடையலாம்.
திருவள்ளுரிலிருந்து குறித்த நேரங்களில் திருவெண்பாக்கத்திற்குப் பேருந்துச் சேவை உண்டு. அந்த வீதி ஓரத்திலேயே கோயிலின் சிறிய தெற்கு வாசல் காணப்படுகிறது. கோவிலின் கிழக்கு வாசற்கதவின் சட்டம் போட்ட இரும்புக்கதவுகள் பெரும்பாலும் பூட்டப்பட்டிருப்பதற்கான அடையாளம் தெரிகிறது.நாம் கோவிலைச் சென்றடைந்த நேரம் காலை 8 மணி. எனினும் வாசற்கதவுகள் பூட்டப்பட்டே இருந்தன.
சற்று தள்ளி இருந்த ஒரு சிறிய தேனீர்க்கடையில் கோயிற் குருக்களின் கைத்தொலைபேசி இலக்கம் பெற்று, பெருமுயற்சி செய்து அவரை வரவழைத்து, தெற்கு வாசற் கதவைத் திறந்து உள்ளே போகிறோம். நுழைந்த உடனேயே நமது இடது கைப்புறமாக சிறு சந்நிதியில் அமர்ந்துள்ள “ வலம்புரி விநாயகர் ” நம்மை வரவேற்று உள்ளே அனுமதிக்கிறார்.
“ நேரே தெற்குப் பார்த்தபடி தெரிவது அம்பாள் வாசல் ” எனக் குருக்கள் கூறியதால், நாம் எதிர்வளமாக புற்தரைமீது கால் வைத்து மண்டப முகப்பிற்கு வருகிறோம். அந்த சொற்ப தூரம் நடந்து வருவதற்குள்ளாகவே புல்லும், புல்லுடன் கூடவே தாரளமாக வளர்ந்துள்ள முட்செடிகளும் காலைப் பதம் பார்க்கின்றன. முன்னரே நான் குறிப்பிட்ட, பூட்டப்பட்டிருக்கும் கிழக்கு வாசற் கதவுக்கும் முன் மண்டபத்திற்கும் இடை நடுவே உயரமான தம்பம் ஒன்று புதிதாக வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
உண்மையில் பழைய திருவெண்பாக்கம் திருக்கோவில் தற்போதைய பூண்டி நீர்த்தேக்கத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது.
இக்கோவில் அமைந்திருந்த இடம் “ திருவிளம்பூதூர் ” எனும் கிராமம்.
திருவிளம்பூதூர் என்பது அடர்ந்த இலந்தை மரக்காடு சூழப்பட்டதாக “ குசஸ்தலையாற்றின் ” கரையில் இருந்திருக்கிறது. சென்னை மாநாகர குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குசஸ்தலையாற்றின் பெரும்பகுதியும் அதைச் சூழவுள்ள பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் கொண்ட பகுதி முழுவதையும் உள்ளடக்கியதாகப் “பூண்டி நீர்த்தேக்கம் ” அமைக்கத் திட்டமிட்ட வேளையில் திருவிளம்பூதூர் கிராமம் முழுவதும் , அதன் நடுவே இருந்த திருவெண்பாக்கம் கோவிலும் 1942 இல் இந்திய மத்திய அரசினால் கையகப்படுத்தப்பட்டது.
அதற்கான திட்ட வேலைகள் ஆரம்பமான வேளையில் திருவெண்பாக்கம் கோவிலும் திருவிளம்பூதூரிலிருந்து இடம் பெயர்ந்தது. ஒரு கும்பாஷேகத்திற்காக பாலஸ்தாபனம் செய்யும் கைங்கரியம் போன்று சகல விக்கிரகங்களுடன், கோயிற் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் பலவும் சேர்த்து எடுக்கப்பட்டு, பூண்டி நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கருகிலேயே புதிய கோயில் கட்டப்பட்டு 05.07.1968 இல் “ முதற்கும்பாபிஷேகம் ” நடைபெற்றுள்ளது. இந்தச் செய்தி அம்பாள் சந்நிதி வாசலில் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.பூண்டி நீர்த்தேக்க அணைக்கட்டின் முடிவுப் பகுதியினை தற்போது, ஒரு மக்கள் சுற்றுலா இடமாக – சகல வசதிகளுடனும் அமைந்துள்ளார்கள்.
இன்று அழகான பூங்காவாக அவ்விடம் காணப்படுகிறது.“ முதற் கும்பாபிஷேகம் ” என்று சொன்னேன் அல்லவா! ஒரு கருவறை, ஒரு முன் மண்டபம், மண்டபத்தின் ஒரு பகுதியில் தெற்கு பார்த்த அம்பாள் சந்நிதி, இதனை உள்ளடக்கிய சிறிய உட்பிரகாரத்தில் சில முக்கிய மூர்த்தங்கள், புல்லும் புதருமாக உள்ள ஒரு வெளிப்பிரகாரம். இதுவே திருவெண்பாக்கம் கோவில். முதற்கும்பாபிஷேகத்தின் பின்னர் எவ்வித திருத்த வேலைப்பாடுகளும் செய்யப்படாமல், பல நூற்றாண்டு காலத்திற்கு முற்பட்ட ஒரு கோயில் போன்று பொலிவிழந்து, வெண்மையிழந்து, மண்ட விதானத்தின் மேற்பகுதியில் சிறு மரங்கள் வளர்ந்து, மனதுக்கு மிகச் சங்கடமான நிலையில் இன்று உள்ளது.
மிகப் பிரபலமான திருவேற்காடு கருமாரி அம்மன் தேவஸ்தானத்தின் பராமரிப்பில் இக்கோவில் இருந்தபோதும் திருவெண்பாக்கம் ஈசனுக்கு இக்கதி. இத்தனைக்கும் இக்கோவில், சுந்தரருக்கு இறைவன் ஊன்றுகோல் கொடுத்த வரலாற்றோடு கலந்த – முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயிலாகும். திருவொற்றியூரில் சுந்தரா் – சங்கிலியர் திருமணம் இனிதே நிறைவு பெறுகிறது.
“ திருவொற்றியூர் எல்லையைத் தாண்டமாட்டேன் ” எனத் திருமணத்திற்கு முன்னரே சங்கிலியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்த சுந்தரா், நாளாக, நாளாக திருவாரூர் தியாகேசரைத் தரிசிக்கும் எண்ணம் மேலோங்க, திருவொற்றியூர் எல்லையைத் தாண்டி வர முற்பட கண்கள் இரண்டும் ஒளியிழந்து பார்வை பறிபோய்விடுகிறது. வரும் வழியில் திருமுல்லை வாசல் ஈசனிடம், “ சங்கிலியாருக்காக எனது கண் ஒளியைப் பறித்தாயா?” எனக் கேட்டு ஒருவாறாக “ திருவெண்பாக்கம் ” வந்து சேர்கிறார்.
அடியார்கள் புடைசூழத் திருக்கோவிலை வலம் வந்து, இறைவனே நீர் கோயிலில் உள்ளீரா?” எனக் கேட்க “ இறைவன் சுந்தரருக்கு ஊன்றுகோல் ஒன்றினைக் கொடுத்து “ உளோம் போகிர் ” என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்தச் சூழ்நிலையில் திருவெண்பாக்கம் ஈசன்மீது சுந்தரரர் பாடிய பதிகம் இது.பதினொரு பாடல் கொண்ட இப்பதிகம் 7ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
மான்திகழும் சங்கிலியைத் தந்தவரு பயன்களெல்லாம்
தோன்ற அருள் செய்து ரைத்தாய் என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோல் அருளி “ உளோம் போகீர் ” என்றானே.
சுந்தரா் தேவாரம். ஏழாம் திருமுறை.பாடல் இல 911. பாடலைப் பதம்பிரித்து பொருள் புரிந்து படிப்பவர்களுக்கு பதிகம் முழுவதிலும் உள்ள பொருட்சுவையும், சுந்தரின் “கெஞ்சுதலும் ” – இறைவனின் மிஞ்சுதலும் ” புரியும். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் போய் வாருங்கள் ” என்று ஒரு வேற்று மனிதன் கூறுவதைப் போன்று இறைவனின் கூற்று இருந்ததாக “ பெரியபுராணம் கூறுகிறது.
குணங்கள் ஏத்தியே பரவிஅஞ் சலியாற் குவித்த கைதலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர்மகிழ் கோயிலு ளீரே என்ற வன்றொண்டர்க் கூன்றுகோல் அருளி
இணங்கி லாமொழி யால்உளோம் போகீர் என்றி யம்பினார் ஏதிலார் போல்
ஏதிலார் – அயலார்பெரியபுராணம் பாடல் இல:3433
சுந்தரருக்குக் கைத்தடி வழங்கும்வரை இறைவனைத் “ திருவெண்பாக்க நாதர் ” என்றும், அம்பிகை “ கனிவாய் மொழி ” என்றும் வழங்கப்பட்டு வந்ததாக 7அம் திருமுறை சுந்தரர் தேவாரம் பதிகவிளக்கம் கூறி நிற்கிறது. தற்போதைய பெயர்கள் பின்னர் வரும்.
திருவெண்பாக்கம் கோயில் வாசல் தாண்டி உள்ளே போகிறோம். நமது இடது பக்கம் சூரியன், அக்கினி மூலையில் (தென்கிழக்கு) நவக்கிரகம்.உட்பிரகார வலத்தின் தென்மேற்கு மூலையில் மகா கணபதி. வடபிரகார நடுப்பகுதியில் (கருவறைக்கு நேர் பிற்பக்கம் )வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர், வடமேற்கு மூலையில் மகாலெட்சுமி. கோஷ்ட மூர்த்தங்களாக நிருத்த கணபதி, தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அமர்ந்துள்ளனா். மிகச்சிறிய சந்நிதியில் சண்டிகேஸ்வரா் அமர்ந்துள்ளார். உட்பிரகார ஈசான மூலைக்கு வந்துவிட்டோம். எட்டுக் கைகளுடன் உள்ள அஷ்டபுஜ வைரவர், நால்வர், அருணகிரிநாதர் மூர்த்தங்கள் மேற்குப் பார்த்தபடி உள்ளன.
இந்த வரிசையிலே இரண்டு அறைகள் மூர்த்தங்கள் எதுவுமில்லாமல் பூட்டப்பட்டிருந்தது. உற்சவ மூர்த்தங்களாவன பிரதோச நாயகர், சுப்பிரமணியர் –வள்ளி தெய்வானையுடன், சோமஸ்கந்தர், அம்பலக்கூத்தர், சிவகாமி அம்மை, அருணகிரிநாதர் ஆகியோர் அமர்ந்திருந்த இரு அறைகளுமே பூட்டப்பட்டிருந்த அறைகளாகும். இந்தப் பூட்டிய அறைகள் பற்றிய விபரத்தை குருக்களிடமே கேட்டேன்.
“ எனது காலத்தில்கூட இக்கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம், கார்த்திகை, ஆர்த்திரா தரிசனம் எனப் பல விழாக்கள் இங்கு நடைபெற்று வந்தன. ஆனால், கோவில்களின் சிலைத் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்புக் கருதி, திருவேற்காடு கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் உலோக விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விழாக்கள் அனைத்தும் நின்றுபோய்விட்டன. ஆனாலும் பிரதோஷ நாளில் திருவேற்காட்டிலிருந்து பிரதோஷ நாயகரின் ஐம்பொன் விக்கிரகம் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, குறித்த நேரத்தினுள் பிரதோஷம் முடிந்ததும் மீண்டும் திருவேற்காடு கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஒருவிழா மட்டுமே மனதுக்கு சற்றே நிறைவைத் தருகிறது ” என்றார் கோவிற் குருக்கள்.
“ சரி முன்பக்கம் ஒரு தம்பம் புதிதாக இருக்கிறதே. மகோற்சவம் நடைபெறுமா ” என மீண்டும் கேட்டேன். “ அதை ஏன் கேட்கிறீர்கள். தம்பம் நாட்டப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் மகோற்சவம் நடாத்துவதற்கான எந்த முஸ்தீபுகளும் இங்கில்லை. தம்பம் நாட்டிய தேதியும் – நாட்டியவர்களின் பெயர்ப்பட்டியலும் அதோ! அந்த சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது ” என ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டினார்.
மண்டபத்தின் மையத்தில் உள்ள நந்தி, பலிபீடம், தாண்டி கருவறையின் வாசலின் இருமருங்கும் வீற்றிருக்கும் துவார கணபதியையும், சுப்பிரமணியரையும் வணங்கிக்கொண்டு மூலவரை நோக்குகிறோம். அழகிய லிங்கத்திருமேனி. ஆவுடையார் பகுதி சற்றே பதிவாகக் காணப்படுவதால் லிங்கபாணம் உயர்ந்ததாகத் தெரிகிறது. மூலவர் ஊன்றீஸ்வரருக்கு ஆதாரதண்டேஸ்வரா் எனும் திருநாமமும் உண்டு. சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்ததால் “ ஊன்றீஸ்வரா் ” என்றும் நடப்பதற்கு ஆதரமாகத் தண்டம் கொடுத்ததால் “ ஆதாரதண்டேஸ்வரா் ” என்றும் இன்றைய திருநாமங்கள்.
சுந்தரருக்கு கைத்தடி வழங்க முன்னர் இறைவன் “திருவெண்பாக்கநாதர்” என்றும், அம்பிகை “கனிவாய் மொழியம்மை ” எனவும் வழங்கப்பட்டு வந்ததாக முன்னரே கூறினேன். அளவான அலங்காரத்துடன் உள்ள மூலவரைக் கரங்கூப்பித் தொழுது பணிகிறோம். இந்தத் தெய்வத்தை நோக்கியேதான் சுந்தரா் “ நீர் இங்கு உள்ளீரோ ” என உரிமையோடு கேட்டார்.
கருவறையின் மிக அருகிலேயே தெற்குப் பார்த்தபடி தனிச் சந்நிதியில் அம்பாள் வீற்றிருக்கிறாள்.
“ மின்னொளியம்மை ” என்பது அம்பாளின் திருப்பெயர். கண் இழந்த சுந்தரா் திருமுல்லைவாசலிருந்து தட்டுத்தடுமாறி வந்தபோது மின்னல்போன்று ஒளிக்கீற்றினைக் காண்பித்து திருவெண்பாக்கம் அழைத்து வந்ததால் அம்பிகைக்கு “ மின்னொளியம்மை ” எனும் திருநாமம் வந்தது. நின்ற திருக்கோலம் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள் உயர்நத அழகிய தோற்றம் சந்நிதிக்கு வெளியே சிறியதாக சிம்மமும் - பலிபீடமும்.
இப்பொழுது நாம் மூலவரின் முன்புறம் உள்ள சிறிய நந்தியின் அருகே வந்து நிற்கிறோம். நந்தியின் வலது கொம்பு ஒடிந்துள்ளது. சுந்தரா் பார்வையிழந்து நிலையில் “ இங்கே நீர் இருக்கிறீரோ ” என இறைவனைக் கேட்க,எம்பெருமான் அவருக்கு ஊன்றுகோல் ஒன்றினைக் கொடுத்துப் “ போய்வாரும் ” என்று சொன்னாரல்லவா! “ கண்கேட்கக் கைத் தடியா தருகிறாய் ” எனச் சுந்தரா் கோபித்து அந்தக் கைத்தடியை விட்டெறிய சிவனேயென முன்னே படுத்திருந்த நந்தியின் வலது கொம்பினை உடைத்துக்கொண்டு கைத்தடி அப்பாற் போய் விழுகிறது.
கொம்பொடிந்த நந்திபற்றி நாம் ஏற்கனவே அறிந்திருந்த செய்தியினை அப்படியே அட்சரம் பிசகாமல் அச்சொட்டாக கோவிற் குருக்கள் கூறியதும் நாம் அசந்துபோய்விட்டோம். பூட்டனார், பேரனார், தகப்பனார் இவ்வாறு வழிவழியாக இந்த வரலாற்றினைத் தாங்கள் தெரிந்து கொண்டதாகக் கூறியதுடன் உடைந்திருந்த கொம்புப் பகுதியையும் தொட்டுக் காண்பிக்கிறார். எட்டித்தொடும் தூரத்தில் நின்றிருந்த நாமும் குனிந்து உடைந்திருந்த கொம்புப் பகுதியினை உன்னிப்பாகப் பார்க்கிறோம்.
திருவெண்பாக்கத்தில் சுந்தரா் கைத்தடி பெற்றார் என்பது “ பெரியயுராணம் ” தரும் ஆதாரம்.பாடல் இல 3433, 3434. ஆனோல் நந்தியின் கொம்பு ஒடிந்த கதை பெரியபுராணத்தில் காணப்படவில்லை. நாயன்மார்களின் சரிதத்திற்கும் – வரலாற்றுக்குமென நமக்குரிய வேதநூல் பெரியபுராணமே நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு அதுவே மந்திரம். ஆகவே கொம்பொடிந்த வரலாறு ஒரு செவிவழிக்கதை எனக் கொள்ளுதலே பொருத்தம்.
கண் பார்வை இழந்த சுந்தரா் கைத்தடியை ஊன்றியபடி உள்ள திருவுருவம் (2’ உயரம்) நந்திக்கு மிக அருகிலேயே வலது பக்கமாக உள்ளது. கைத்தடியுடன் காணப்படும் சுந்தரரின் திருவுருவத்தினை “ திருவெண்பாக்கம் ” தவிர வேறு எங்கும் காணமுடியாது. சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்த திருவெண்பாக்க நாதரையும் - நாயகியையும் கண்குளிரக் கண்டு தரிசிக்க வேண்டும், கொம்பொடிந்த நந்தியினைக் பார்க்க வேண்டும். எனும் ஆவல் நீண்ட நாட்களுக்கு முன்னரே ஏற்பட்டதாயினும் 17.04.2013 இல் அந்த எண்ணத்தை நிறைவேற்றித்தந்த ஈசனை கருணையை வியந்து போற்றி விடைபெறுகிறோம்.
அடுத்வெள்ளி – “ சிக்கல் ” “ சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஷாரம் ” என்பது முதுமொழி. சிக்கலில் வேல் வாங்கி விரைந்து செல்லும் முருகப்பெருமானின் கன்னங்களில் வியர்வைத் துளிகள் வழிந்தோடும் அதிசயம் இன்றும் நிகழும் முருக ஸ்தலம் “சிக்கல்”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.