தமிழகத் திருக்கோயில் வரிசை - திருநாகேஸ்வரம் (இராகு ஸ்தலம்) - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2016 (வெள்ளிக்கிழமை)
மனிதன் மன அமைதி பெற்று மேன்மையுற ஆன்றோர் அமைத்த அருள்நிலையங்களே ஆலயங்களாகும். தாம் வாழும் வீட்டைச் சிறுகக்கட்டிப் பெருமாழ்வு வாழ்ந்ததம் முன்னோர், அளப்பரிய பெருங்கோயில்களை நிறுவி ஆண்டவனை வணங்கினர். ஆங்காங்கே இவ்வாறுள்ள பல ஸ்தலங்களிலும், பரம்பொருள், உருவத் திருமேனிதாங்கி வேண்டுவார் வேண்டுவனவெல்லாம் அளித்துவருகிறான்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு கிழக்கே 6 கி.மீதூரத்தில் திருநாகேஸ்வரம் அமைந்துள்ளதால், கும்பகோணத்திலிருந்து நினைத்த நேரமெல்லாம் பேருந்து வசதியுண்டு.
நாக அரசனாகிய இராகு பூசித்தமையால் இத்தலத்திற்கு நாகேஸ்வரம் எனப்பெயர் வந்தது. திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியபடி ராகுபகவான் எழுந்தருளியுள்ளார்.
இங்கே ராகுபகவான் ஸ்ரீநாதநாதசுவாமியை வழிபட்டதோடு, தன்னை நாடிவந்து வழிபடும் அன்பர்களுக்கு பலநலன்களையும் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாகவும் திகழ்கிறார். இராமேஸ்வரம் காளகஸ்பதி போன்ற இடங்களிலும் இராகுபகவான் பெருவணக்கத்திற்குரியராக இருந்தபோதும், திருநாகேஸ்வரத்தில் மட்டுமே தனிக்கோயில் தம்தேவியா் இருவருடனும் அருள்பாலிப்பதை நாம் காண்கிறோம்.
கண்டராதித்த சோழனால் கருவறைக் கோயில் கட்டப்பெற்று, பின்னர் சேக்கிழார் பெருமனால் உள்மண்டப கட்டுமாணப்பணிகள் நிறைவுபெற்று, பின்னரும் காலத்துக்குக் காலம் திருப்பணிகளும் – கும்பாபிஷேகங்களும் நடந்தேறியுள்ளன.
சுற்றிலும் சோலைகள் சூழ கிழக்கு நோக்கி அமைந்த இத்திருக்கோயில் நாற்புறமும் கோபுரங்களும் இரண்டு பிரகாரங்களும் – தேரோடும் வீதிகளுமாக விளங்குகிறது. ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரவாசலினூடாக உள்ளேநுழைந்தால் நேராகக் கொடிமரத்து விநாயகரைத் தரிசிக்கிறோம். அப்படியே நின்றபடி நமதுவலதுகைப்புறம் திரும்பினால் நேரே (கோயில் வளாகத்து வடகிழக்கு மூலையில்) கிரிகுஜாம்பிகை அம்பாள் திருக்கோயில் தெரிகிறது. (விபரம் பின்னர் வரும்). நமது இடதுகைப் பக்கம் திரும்பினால் (தென்கிழக்குமூலையில்) சூரிய தீர்த்தக்குளம் திருத்தியமைக்கப்பட்ட நேர்த்தியான படிக்கட்டுக்களுடன் காணப்படுகிறது இத்திருக்குளம்.
குளத்துக்கும் கொடிமரத்து விநாயகருக்கும் சரிநடுவே மழுப்பொறுத்த விநாயா்சந்நிதியும் மறுபுறமாக கொடிமரத்து விநாயகருக்கும் அம்பாள்சந்நிதிக்கும் நடுவே நூற்றுக்கால் மண்டபமும்காணப்படுகிறது. இந்த நூற்றுக்கால் மண்டபம் தேர்போன்ற வடிவில் அமைக்கப்பட்டு கல்சக்கரங்களுடன் காணப்படுகிறது. அடிவரிசையில் பரதநாட்டிய சிலைவடிவங்கள் காணப்படுகின்றன.
கொடிமரத்து விநாயகரை அடுத்து கொடிமரத்தையும் நந்தியையும் பார்க்கிறோம். இந்தநந்தி – கொடிமரத்துக்கு நேராக குளத்தருகேயும் அம்பாள் திருக்கோயில் அருகேயுமாக சற்றுத்தள்ளி தென்கோபுரமும், வடக்குக் கோபுரமும்தெரிகிறது. இந்த தென் கோபுரத்து உட்புறமாக உள்ள நீண்ட பெரு வீதிதான் கோயிலுக்கு வரும் வாகனங்களின் தரிப்பிடமுமாகும்.
உட்கோபுரவாசல் தாண்டி உள்ளே நுழைந்தால் இதுவே திறந்தபடியான வெளிப்பிரகாரம். இந்தவெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையிலேயே இந்த ஸ்தலத்தின் சக்திமிக்க ராகுபகவான் சந்நிதிகாணப்படுகிறது. (விபரம்கீழே) இந்த பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளியும் வடகிழக்கு மூலையில் கோயில் நிர்வாக அலுவலகமும் கண்ணெதிரே தெரிகிறது.
இரண்டு மூன்று படிக்கட்டுக்கள் மேலேறிநடந்தால் இடதுகைப்புறமாக வருவது ராகுபகவானின் பாலாபிஷேகத்திற்கான பற்றுச்சீட்டுபெறுமிடம். வலதுகைப்புறமாக பிரகாரமதிற் சுவரோடு தெற்குப்பார்த்தபடி தெரிவதுதான் அலங்காரமண்டபம் நமதுவழக்கப்படி இதுவே“ வசந்தமண்டபம் ”.
மீண்டும் இரண்டு அடுக்குக் கொண்ட கோபுரவாசல் தாண்டி உள்ளே சென்றால் இதுவே மூடிய உட்பிரகாரம். நமது இடதுகைப்புறம் (தென்கிழக்கு மூலையில்) அதிகாரநந்தியும் அருகே சேக்கிழார் சந்நிதியும் (சேக்கிழார்விபரம்பின்னர்) வலதுகைப்புறம் (வடகிழக்குமூலையில்) பள்ளியறையும் அருகே நடராஜர் சந்நிதியும் காணப்படுகிறது.
ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைந்தது முதல் இதுவரை நேராக நடந்த வந்த நாம் இப்போது கருவறையின் முன்மண்டபத்தை அடைந்துவிட்டோம். இந்தமுன்மண்டபமானது, கீழ்ப்பகுதி சிங்கமும் மேற்பகுதி தூண்வடிவிலுமாக அமைந்துள்ள, அழகிய சிற்பவேலைப்பாடுள்ள பலதூண்கள் கொண்டதாகக்காணப்படுகிறது.
சில தூண்களில் குதிரை வடிவச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதுவே சேக்கிழார் பெருமனால் கட்டப்பட்ட மண்டபமாகும். மூலவா் நாகநாதசுவாமி அழகிய அலங்காரத்துடன் அருள்பாலிக்கிறார். சுவாமி கருவறையை நெருங்கியபடி சுற்றிவர ஐந்து தனிச்சந்நிதிகள்காணப்படுகின்றன. தட்சணாமூர்த்தி, ஆதிவிநாயகர், சோமஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் ,பிறையணி அம்மன் சந்நிதிகளே அவை.
கருவறையைச் சுற்றி கோஷ்டமாக இல்லாமல் தனிச் சந்நிதிகளாக இருப்பது ஒரு வித்தியாசமான அம்சமாகும். மேற்குப் பிரகாரத்தில் சுப்பிரமணியர், இலக்குமி, சரஸ்வதி, பஞ்சலிங்கம் எனவரிசையாக சந்நிதிகள் உண்டு. வடபிரகாரத்தில் தெற்குப்பார்த்தபடி 63 நாயன்மார்களும் ஒரேவரிசையில் அமர்ந்துள்ளனா். அப்படியே நடந்துவர, நடராஜா்சபையும் வடக்கு மூலையில் பள்ளியறையும் வருகிறது.
திருநாகேஸ்வரமும்சேக்கிழாரும்:
திருநாகேஸ்வரம் திருக்கோயிலுக்கும் சேக்கிழார் பெருமானுக்கும் மிகநெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. சேக்கிழார் பெருமான்“ ஞானம் பெற்றஸ் தலம் ” இதுவே என்கின்றனா் விபரம் தெரிந்தவர்கள். கோயிலில்மொத்தம் 16 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
கோயிற் திருப்பணி ஆற்றியோரின் வரிசையில் கண்டராதித்த சோழன், சேக்கிழார், மெய்ப்பொருள்நாயனார் எனப் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தபோதும், கருவறைக்கு முன்பாக உள்ளசிங்க முகத்தூண்கள் கொண்ட முன்மண்டபத்தை சேக்கிழாரே கட்டுவித்ததாகக் கல்வெட்டுக்கள் சில சிறப்பித்துக்கூறுகின்றன.
இதைவிட, சேக்கிழார், தனது பிறந்த இடமான குன்றத்தூரில் ஒரு கோயிலை ஸ்தாபித்து, அதற்கு“ நாகேஸ்வரம் ” எனப் பெயரிடப்பட்டிருப்பது நாகநாதசுவாமி மீது இவா் கொண்டிருந்த அளவு கடந்த பக்தியினைக் காட்டிநிற்கிறது. (மேற்காணும்தகவல்கள்கோயிற்குறிப்பினில்தெளிவாகக்கூறப்பட்டுள்ளது)
இவை அனைத்திற்கும் சாட்சியாக இங்கேசேக்கிழார் சந்நிதியில், சேக்கிழார் திருவுருவுடன் அவரது தயார் திருவுருவும் உடன்பிறந்தவரான பாலறாவாயர் திருவுருவமும் சேர்ந்தே காணப்படுவது இங்கு மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும்.
அன்னைகிரிகுஜாம்பிகைசந்நிதி :
அம்பிகை சந்நிதிதனிக் கோயிலாக தெற்கு நோக்கியதாக உள்ளது. சந்நிதியின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் காணப்படுகின்ற பலசமணமுனிவர்களின்சிலைகள், இத்திருத்தலம்ஒருகாலத்தில்சமணர்செல்வாக்குப்பெற்றிருந்தமையைக்காட்டுகிறது. கிரிகுஜாம்பிகை அம்பாள் பக்கத்தில் கலைமகளும் திருமகளும் அமர்ந்திருக்க, அனைத்து மக்களுக்கும் குலதெய்வமாக சர்வசக்தியுடன் அம்பிகை அருள்பாலிக்கிறாள்.
இராகுசந்நிதி:
இராகுவானவா் யோகத்திற்கு அதிபதி. எனவே, ஒருவர் ஜாதகத்தில் இராகு நல்லநிலையில் இருந்தால் விளையும் பலன்கள் மிகஅதிகமாக இருக்கும். திருநாகேஸ்வரத்தில் வெளிப்பிரகாரத்துத் தென்மேற்கு மூலையில் இராகுபகவான் சந்நிதி தனிக் கோயிலாக சந்நிதியும் சந்நதியுடன் கூடிய நீண்ட முன்மண்டபமும் கொண்டதாக உள்ளது. மண்டபத்தின் இடப்பாதி உட்காரும் இடமாகவும், வலதுபாதி – மூன்று நீள்வரிசைகள் கொண்ட பகுதியாகவும் உள்ளது. (அந்நாளில் யாழ் – வெலிங்டன் தியேட்டரில் கலரிரிக் கற்வாங்கிய கியூவரிசையை ஞாபகத்திற்கொள்ளவும்) ராகுகால ஒன்றரை மணிநேரத்தில் 3 முறைக்கான பாலாபிஷேக சீட்டுக்கள் விற்பனையாகிறது.
ராகுகாலவேளை ஆரம்பிக்க பதினைந்து நிமிடங்கள் முன்னதாக வெளிப்புறக் கதவுதிறந்துகொள்ள, நாம் ஏற்கனவே பெற்றிருந்த சீட்டினைக் கொடுத்து வரிசையினுள் நுழைகிறோம். வெளிவாசற்கதவு பூட்டப்படுகிறது. நெற்கம்பிபோட்ட வரிசைக்கூட்டினுள் உட்காரமுடியாமல் நிற்கிறோம்.
இப்போது சந்நிதிக்கு அண்மையில் உள்ள உட்புறக் கதவு திறந்துகொள்ள, உள்நுழைந்து அடித்துப்பிடித்து இடம்தேடி சம்மணம்கொட்டி உட்கார்ந்துவிடுகிறோம். ராகுகாலவேளை ஆரம்பாகிறது. இளம்பூசகர் ஒருவர்கையில் ஒலிவாங்கியுடன் தனது குட்டிச் சொற்பொழிவினை ஆரம்பிக்கிறார். ராகுகாலம் – ராகுகாலநிவிர்த்தி – இதற்காகக் கோயில் நிர்வாகம் செய்துள்ள ஒழுங்குகள் – பலன்கள் என்பன போன்ற பயனுள்ள பலவிடயங்களையும் உரக்கச்சொல்கிறார்.
அதேவேளை சந்நிதியுள்ளே பாலாபிஷேகம் ஆரம்பாகி நடைபெறுகிறது.சந்நிதிக்கு சரிநேராகமிக அண்மையில் தெளிவான பார்வைக்குரிய இடத்தில் யான் அமர்ந்திருந்து கண்வெட்டாமல் பார்த்தபடி இருந்தேன். பாலாபிஷேகவேளையின் போதுராகுபகவான் (கற்சிலை) உருவம் நீலநிறமாகமாறுகிறது என்று ஆண்டாண்டு காலமாக அனைவராலும் நம்பப்பட்டுவருகிறது.
கூட்டல் கழித்தல் எதுவுமின்றி எனதுபார்வையிற்ப ட்டதைஅப்படியே தருகிறேன். எல்லாக்கோயில்களிலும் அபிஷேகம் நடைபெறும் வேளைகளில் சற்றுத்தூரமாகநி ன்றுபார்த்திருப்பீர்கள். (அல்லது) பிரதோஷ வேளைகளில் நந்திக்கு நடைபெறும் அபிஷேகத்தினை மிக நெருக்கமாக நின்றபடி அவதானித்திருப்பீர்கள். குடம்குடமாக ஊற்றப்படும் பாலின் வெண்மை நிறமும், விக்கிரகத்தின் இயல்பான கருமைநிறமும் சேர்ந்து (விக்கிரகத்தின் மீதான இடைவெளிகளில்) கருநீலநிறம் போன்ற தோற்றம் பெறுவதினை அடியேனால் அவதானிக்க முடிந்தது.
அபிஷேகம்முடிவுற்றதும், அலங்காரம் – தீபாரதனை என அனைத்துமே மிக வேகமாக நடைபெற்றுமுடிகிறது. உள்ளே அமர்ந்திருப்பவர்களைவிட, மண்டபத்தின் வெளிப்புறங்களில் நின்றபடியே ராகுபகவானைத் தரிசிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் நடைபெறுகின்ற அபிஷேக ஆராதனைகளைப் பார்த்துப் பரவசமடைகின்றனா்.
மறுபக்கக் கதவு திறந்து கொள்ள உள்ளே அமர்ந்திருந்தவர்கள் இப்போது வெளியே வர விபூதி – பிரசாதம் உள்ளடங்கிய பையினைக் கைகளில் தந்து நம்மை ஆசிர்வதித்து வெளியே அனுப்புகிறார்கள். இரண்டாவது சுற்றுக்கான அடுத்த 200 பேர் உள்ளே வர ,மீண்டும் பாலாபிஷேகம் ஆரம்பாகிறது.
ராகு பகவானையும் நாகநாத சுவாமியும் மீண்டும் ஒரு முறை கைதொழுது நிரம்பிய மனத்தினராய் வெளியே வருகிறோம்.
-மீண்டும் சந்திப்போமா !-
“பொன்னோ் தரு மேனியனே புரியும்
மின்னோ் சடையாய் விரை காவரியின்
நன்னீர் வயல் நாகேச்சர நகரின்
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே ”
(சம்பந்தர்)
“ நல்லா் நல்லதோர் நாகங்கொண்டு ஆட்டுவர்
வல்லவர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே”
(அப்பா்)
“ பாலினது ஆருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்தாக்கியது என்னை கொலாம்
கோலமலர்க் குவளை கழுநீர் வயல்சூழ் கிடங்கில்
சேலொடு வாளைகள் பாய் திருநாகேச் சரத்தரனே ”
(சுந்தரா்)
அடுத்த வாரம் : “ ஏழூா்ப் பெருவிழா ” “ ஒரு கல்யாணத் திருவிழாவின் கதை கேட்கவாரீர். ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.