தெட்சணாமூர்த்தி - சேமக்கலம் வழியான மரண செய்தி இவருடன் மறைவு - வல்வையில் மறக்கப்பட முடியாத ஒரு நபர்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2020 (வெள்ளிக்கிழமை)
மற்றையோரின் மரணங்களை மணி( சேமக்கலம்) அடித்து அறிவித்து அமைதியாக மரணித்த வல்வை மகன்
சுந்தரமூர்த்தி தெட்சணாமூர்த்தி
வல்வெட்டித்துறை
அன்னாரின் 90வது நாள் நினைவாக....
பிறப்பு - 15.05.1938 இறப்பு - 05.03.2020
.
எமது ஊரின் பாமரர், பொதுமக்கள்; படித்தவர்கள், பணக்காரர்கள், மற்றம் வெளிநாட்டில் வதிபவர்கள் என பலரினதும் மரணச்செய்தியை சேமக்கலம் எனும் மணி அடித்தல் மூலம் தெருத் தெருவாக திரிந்து மணி அடித்து செய்தியைப் பரப்பிய அந்த ஊடகத் தொடர்பாடலை இன்று காணவில்லை.
.
தமிழில் ஒரு முதுமொழி உண்டு. ' பரிசாரி பெண்சாதி புழுத்துச் செத்தாளாம்.' என்று. அதாவது ஊருக்கெல்லாம் வைத்தியம் செய்யும் பரிசாரியார் (வைத்தியர்) தனது சொந்த மனைவியின் நோயை கவனிக்காமலிருந்தமையால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தமையையே இது சுட்டி நிற்கின்றது.
நாங்கள் பலரது மரண அறிவித்தல்களை பத்திரிகைகள், இணையத்தளங்கள், அஞ்சலிப்பிரசுரங்கள் எனப் பல ஊடகங்கள் மூலம் அறியும் இந்த நவயுக காலத்தில் அமரர் சுந்தரமூர்த்தியின் (யப்பான் சுந்தரம்) மகன் தெட்சணாமூர்த்தியின் ( மூர்த்தி அப்பா) மரணம் பற்றி யாரும் அறியாமலேயே போய்விட்டது.
எனது வாழ்வில், பல பெரியார்களது சுயசரிதைகளைப் படித்து நானும் எனது கொள்கைகளை நெறிப்படுத்திய ஒருவன். அந்தவகையில் அமரர் மூர்த்தியப்பா மூலமும் நான் சில நல்ல கொள்கைகளை அறிந்துள்ளேன் பாடமும் படித்துள்ளேன்.
இவரைப்பற்றி நான் அறிந்த சில விடயங்களில் சிலவற்றை இங்கு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
(நான் அறிந்தது ஒரு சில விடயங்களே ஆனால் அறியாதன பல)
குடும்ப (விருட்சம்) விபரம்
1.தந்தையார்:-சரவணமுத்து சுந்தரமூர்த்தி
2.தாயார்:-நீலாராட்சி அம்மா
3.உடன் பிறந்தோர்:-10 சகோதரர்கள்
4.பிறந்த திகதி:-15.05.1938
5.இறந்த திகதி:-05.03.2020
உடன் பிறப்புக்கள்
ய.தெட்சணா மூர்த்தி (மூர்த்தி அப்பா)
டி.சூரியமூர்த்தி
உ.சிவமூர்த்தி
ன.ஞானமூர்த்தி
ந.நீலாயமூர்த்தி
க.பூலோகராசா (அமரருக்கு இறுதிக்கிரியைகள் செய்தவர்)
ப.தெய்வலோகம்மா(இவரது கணவர் அமரர் பற்குணம் தள்ளாத வயதினிலும் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி இறுதிவரை ஓட்டத்தை முடித்து சாதனை செய்தவர்.)
h.புனிதவதி அம்மா
i.கலைவாணி அம்மா
வள்ளிநாயகி அம்மா
மூர்த்தி அப்பாவின் இளமைக்கால தோற்றங்களில் சில....
திருமணவாழ்வு
இவர் கிழக்கு ஊரான ஆழியவளைப் பகுதியில் தங்கமலர் என்பவரை மணம் புரிந்ததாகவும் 3 பிள்ளைகள் பிறந்தும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் மூத்தமகன்; குமரவேல் மட்டுமே இருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது.
இவர்கள் குடும்பமக வாழ்ந்தமை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இவரது மகன் குமரவேல் ஏன்பவர் வந்து இறுதிக்கரியைகளில் கலந்து கொண்டதாக அறிகின்றேன்.
அமரர் மூர்திதியப்பா பற்றிய சில தகவல்கள்
இவரது தந்தையாரான சரவணமுத்து சுந்தரமூர்த்தி (யப்பான் சுந்தரம் என அறியப்பட்டவர்) இலங்கையில் பல இடங்களிலும் மரக்கூட்டுதாபனத்தில் வேலை செய்து இறுதியில் ஆலடியில் அமைந்திருந்த விறகு காலையிலும் பணியாற்றியுள்ளார்.
இந்த யப்பான் சுந்தரம், ஒரு சிறந்த பக்திமானாக இருந்துள்ளார். இதற்கு சான்றுகளாக
1.இவர் பல கோவில்களிலும் திருவம்பா ஓதுபவராக இருந்துள்ளார்.
2.வல்வெட்டித்துறை அம்மன் கோவில் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா அன்று முத்தூரியம்மன் ஊரணியில் தீர்தமாடி தனது இருப்பிடம் நோக்கி வரும் பொழுது அம்மனை வரவேற்கும் உடுக்கு முதலிய தாளங்களுடன் ஒரு பாட்டு இப்பொழுதும் பாடப்பட்டு வருகிறது.
இப்பாட்டை இயற்றியவர் இவரே என்றும் பிற்காலத்தில் அப்பாட்டை செம்மையாக்கி தகுந்த இராகத்துடன் படிக்க கூடியவராக இருந்த ஆதிகோவிலடியைச் சேர்ந்த அண்ணாவியார் அமரர் அ.சித்திரைவேலாயும் அவர்களிடம் தான் எழுதிய பாட்டினை ஒப்படைத்து இதனை மேலும் மெருகூட்டி வருடாந்தம் தீர்த்த திருவிழாவின் இறுதி நிகழ்வில் தவறாமல் இப்பாட்டினை குழுவாகச் சேர்ந்து பாடும் பொறுப்பினை தன்னிடம் ஒப்படைத்து நீதான் இதற்குரிய இராகம் மெட்டு என்பவற்றை கொண்ட ஆள் என்று கூறியதாக அமரர் அண்ணாவியார் சித்திரைவேலாயுதம் அவர்கள் எனக்கு கூறியிருந்தார்.
அதற்கிணங்வே தான் அப்பாட்டில் சிலமாற்றங்களை செய்து அதுவே பிரசுரமாகவும் வெளிவந்ததாக கூறியதுடன் தற்காலத்தில் இப்பாட்டினை அடியார்கள் மேலும் சில மாற்றங்களுடனும் தேவையான வரிகளைக் கூட்டியும் பாடி வருவதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புவதாகவும் எடுத்துரைத்தார்.
இது சம்மந்தமாக 'வாசலிது வாசலிது' எனும் இப்பாட்டை இயற்றியவர் திரு சித்திரைவேலாயுதம் அவர்கள் என சில வரலாற்றப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டு இருக்கின்ற போதும் இதனை இயற்றியவர் யப்பான் சுந்தரம் அவர்களே ஆகும் என நான் கருதுகின்றேன்
3.இதே வழியைப் பின்பற்றி அமரர் மூர்த்தியப்பா அவர்களும் பல நற்காரியங்களில் ஈடுபட்டு வந்ததை நான் அறிவேன். அவற்றுள் சில வருமாறு:
*கோவில்களில் திருவம்பாவை ஓதுதல்
*வல்வையைச் சேர்ந்த கோவில்கள் மட்டுமல்லாது பருத்தித்துறை போன்ற அயல் நகரங்களுக்கும் சென்று இத்தொண்டினை ஆற்றி வந்துள்ளார்.
*பருத்தித்துறை கோட்டடி அம்மன் கோவிலில் நடைபெறும் உற்சவ காலத்தில் 15 நாட்களும் அங்கு தங்கியிருந்து சங்கு ஊதும் தொண்டினை ஆற்றி வருவது அவரது வழக்கம்.
*எமது முத்துமாரியம்மன் கோவில் குளுர்த்தி திருவிழா அன்று அலகு நாடா குத்தி இரவுத் திருவிழாவான கற்பூரத்திருவிழாவன்று அங்கப்பிரதட்சணை செய்யும் ஒரே அடியார் இவரேயாவார்.
*இவருடைய குரல் வளம் மிகவும் ரசிக்கத்தக்கதும் பலரது பாரட்டுதலுக்குரியதுமாகும். இதனால் 1970, 1980 களில் கோவில்களில் திருவிழாக்காலங்களில் வெளிவீதியில் நடாத்தப்படும் இசை நிகழ்சிகளை (தற்பொழுது இதை கோஷ்டி என அழைப்பர்) நடாத்தி வந்த மிகவும் பிரசித்தி பெற்ற கண்ணன் இசைக்குழு போன்றவர்களுடன் இணைந்து அவரும் ஒரு அங்கத்தவராக சினிமாப் பாடல்களை பாடி பலரையும் மகிழ்வித்தமை எல்லோரம் அறிந்த விடயமே. இவர் விரும்பிப் பாடும் பாடல்கள் அனேகமாக கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்டு பிரசித்து பெற்ற தென்னிந்திய பாடகரான சௌந்தர்ராஜன் அவர்களால் பாடப்பட்ட பாடல்களே ஆகும். இனதால் இவர் அக்காலத்தில் ஈழத்து சௌந்தர்ராஜன் எனும் புனைபெயரால் அழைக்கப்பட்டார்.
* யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பாக பாடப்பட்ட பல உணர்வுபூர்வமான பாடல்களையும் மிக உரத்த குரலில் வீதிவீதியாக பாடித்திரிவது உண்டு.
இவரது சிறந்த பண்புகளென நானறிந்தவற்றையும் இங்கே குறிப்பிட விரம்புகின்றேன்.
•அமரர் தட்சணாமூர்த்தி வல்வெட்டித்துறைக்கு நிரந்தரமாக வருவதற்கு முன்பு மூதூர் விறகு காலையிலும் காவலாளியாக பணிபுரிந்தார் என இவருடைய இளைய சகோதரரான பூலோகராசா இவ்வாக்கத்தினை எழுதும் எனக்கு அறியத் தந்தார்.
•இவர் இக்கட்டான யுத்த காலகட்டங்களி;ல் கூட வல்வெட்டித்துறையிலுள்ள பல வீடுகளுக்கு காவலாளியாக இருந்து அவர்கள் கொடுக்கும் சிறிய தொகையை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
•கடைசிக் காலத்திலும் இவர் அறிந்தவர் தெரிந்தவர்களுடைய உதவியுடன் வாழ்ந்து வந்தார்.
மிகச்சிறப்பாக குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் தான் இறந்த பின்பு தன்னுடைய மரணச்செலவுகளையும் தொடர்ந்து வரும் அந்தியேட்டி, திவசம் போன்ற கிரியைகளையும் நடத்துவதற்கென உயிருடன் இருக்கும் போதே வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் சேமிப்பு கணக்கொன்றினை ஆரம்பித்து சிறுகச் சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார்.
இக்கணக்கிற்கு பின்னுரித்தாளியாக தனது சகோதரியை திருமதி புனிதவதியம்மாவை முதலில் நியமித்த போதும் பின்நாட்களில் அதனை மாற்றி தன்னுடைய கடைசி தம்பியான பூலோகராசாவை இணைத்து கூட்டுக்கணக்காக மாற்றிய பின்பே இவர் இயற்கை எய்தினார். இதனால் எவருக்கும் கடமைப்படாது அவரது ஆசைப்படியே வங்கியில் இருந்த பணத்தைப்பெற்று இறுதிக்கிரியைகளை தம்பியாரான பூலோகராசா நிகழ்த்தினார்.
இச் செயலானது தற்காலத்தில் மிகமிக அரிதாக காணப்படும் ஒரு அரும் பெரும் தனித்துவமான காரியமாகும். இப்படிப்பட்ட காரியங்களை தீர்க்க தரிசனத்துடன் பல அறிஞர்கள் செய்து வைத்தமையை மட்டுமே நான் அறிவேன்.
மரணம் பற்றி :- இவர் நோய்வாய்ப்பட்டு ஊறணி ஆஸ்பத்திரியில் இருந்து பின்னர் மந்திகை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். கடவுள் முருகுப்பிள்ளை அப்பாவின் ஞாபகார்த்தமாக செய்யப்பட்ட இறுதி ஊர்வல வண்டி பாதுகாக்கப்படும் நெடியகாட்டு சுடலையில் (புதைக்கப்படும்) தெருவோரத்தில் அமைந்துள்ள வாகனதரிப்பிடத்தின் முன்பாக ஒரு சிறிய பந்தல் போட்டு மக்கள் அஞ்சலிக்கென சிறிது நேரம் வைக்கப்பட்டு உடனடியாகவே எரியூட்டும் சுடலைக்கு இவரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Arumugam (Canada)
Posted Date: July 04, 2020 at 03:59
மரணச் செய்தியை
மணி அடித்து
மக்களுக்குச் சொன்ன
மனித நேயம் ஒன்று,
மண் நீங்கிய செய்தி மறைந்தது,
மனதை நெருடுகின்றது.
சேமக்கலம் அடித்து,
ஊருக்கு அறிவித்த,
உருவம் இப்போ
நினைவுகளில் வந்தாடுகின்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.