ஆ + அடு துறை = பசுக்கள் நிறைந்துள்ள காவிரிக் கரையிலுள்ள ஊர். இது சோழ நாட்டின் தென் கரைத் தலம். மயிலாடுதுறை கும்பகோணம் சாலையிலுள்ள ஆதீன வளைவு உள்ள இடத்தினூடாக உள்ளே போனால் கோவிலை அடையலாம். வளைவுக்கு அண்மையில் “ நரசிங்கன் பேட்டை ” எனப்படும் புகையிரத நிலையம் உள்ளது. திருவாவடு துறை ஆதீனமும் – அதன் நிர்வாக அமைப்பும் மிகப் பரந்துபட்டன.
ஆதினமும் கோவிலும் அருகருகே உள்ள காரணத்தால் கோவில் நன்கு பராபரிக்கப்பட்டு சிறப்பாக உள்ளது. திருமாளிகைத் தேவர் வாழ்ந்த இடமே தற்போது திருவாவடு துறை நிர்வாகச் செயலகம் அமைந்துள்ள இடம் எனப் பரிபாலன சபையினர் கூறுகிறார்கள். இந்த வளாகத்தின் உள்ளேயே திருமாளிகைத் தேவர் ஆலயமும் உள்ளது. நரசிம்மன் எனும் அரசரின் படையெடுப்பு வேளையில், கோவில் திருமதில்களில் இருந்த நந்திகள் எல்லாவற்றையும் உயிர் பெற்றெழச் செய்து நரசிம்மனை விரட்டியமையால் ஆலயச் சுவர்களில் தற்போது நந்திகள் எதுவும் இல்லை எனவும், இந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் திருமாளிகைத் தேவரே எனவும் வரலாறு கூறுகிறது.
எண்ணற்ற சிறப்புக்களைக் கொண்ட திருத்தலம் திருவாவடுதுறை.
இறைவி பசு வடிவில் வழிபட்ட ஸ்தலம்.
தன் தந்தையின் வேள்விக்காகத் திருஞானசம்பந்தர் இறைவனிடம் பொற் கிழி பெற்ற இடம்.
போக சித்தருடைய மாணவராகிய திருமாளிகைத் தேவர் பல அற்புதங்கள் செய்த திருக்கோவில்.
இறைவன் முசுகுந்தனுக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும் காண்பித்தமை.
திருமூலர், திருமாளிகைத் தேவர் சமாதிகள் உள்ள இடம்.
கோமுக்திநகர், அரசவனம், முத்திஷேத்திரம் , கோகழி, சிவபுரம், பிரமபுரம், அகத்தியபுரம், தருமநகர், நந்திநகர்முதலான வேறு பல பெயர்களும் இத்தலத்திற்குண்டு.
கிழக்கு நோக்கிய திருவாவடுதுறைத் திருக்கோவில் 5 நிலைக்கோபுரம் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது. கோபுரத்திற்கு எதிராக அகன்ற – நேர்த்தியான படிக்கட்டுக்களைக் கொண்ட ஸ்தல தீர்த்தமான “ கோமுக்தி தீர்த்தம் ” உள்ளது. கோபுரத்தின் இரு புறமும் அழகான பண்டிகையுடன் வலது பக்கம் விநாயகரும் , இடது பக்கம் சுப்பிரமணியரும் அமர்ந்துள்ளனர். கோபுரவாசல் தாண்டி அகன்ற-நீண்ட நடைபாதையில் கால் வைத்து உள்ளே போகிறோம். வலது பக்கமாக “ ஆதிகோமுக்தீஸ்வரர்” தனிச் சந்நிதி காணப்படுகிறது.
அந்த சந்நிதியின் முகப்பு வாசல் மேலே சிவனின் மடியில் அம்பாள் அமர்ந்த படியுள்ள சுதைச் சிற்பம் உள்ளது. அருகே அன்னதான மண்டபம் உள்ளது. இடது புறமாக உள்ள ஒரு மண்டபத்தில் சிறுசிறு சேதங்களுக்குட்பட்ட சிவன், தெட்சணாமூர்த்தி, கணபதி, லக்குமி போன்ற பல தெய்வ கல்விக் கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விக்கிரகங்கள் சேதமடைந்த காரணங்கள் கண்டறியக் கூடியதான எந்த விபரமும் அங்கில்லை என்பதுடன் இவற்றிற்கு பூசை வழிபாடுகளும் இல்லை.
அடுத்துள்ள ஒரு முகப்பு மண்டப வாசலின் மேலே, மையத்தில் சிவன் அம்பாள் நின்ற படியான அமைப்பு, வலது புறம் கணபதி, அடுத்து சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரிந்த படியுள்ள அமைப்பு, இடது புறம் முருகனும் சுதைச் சிற்பமாக உள்ளனர். இந்த முகப்பு வாசலின் உள்ளே இருபுறமும் உள்ள சந்நிதிகளில் விநாயகரும் முருகனும் வீற்றுள்ளனர். உமையம்மை பசுவாக மாறி இறைவனைத் தொழ வந்த வேளையில் துணையாக வந்த விநாயகரும் முருகனும் இவர்களே யாவர். முகப்பு வாசலின் தொடர்ச்சியாக உள்ள மண்டபத்தில் ஒருபெரிய பீடம் (பலிபீடம் போன்ற அமைப்பில் ) காணப்படுகிறது.
தனது தந்தையான சிவபாதவிருதையரின் வேண்டுகோளை ஏற்று, அவரது யாகத்திற்காகப் பணமுடிப்பு ஒன்றினை இறைவனிடம் கேட்டு நிற்கிறார் திருஞானசம்பந்தர் இந்த வேளையில் திருவாவடுதுறையில் சம்பந்தர் பாடிய பதிகம் “ இடரினும் தளரினும்…. ” என்று தொடங்கும் பாடலாகும்.
இடரினும் தளரினும் எனது றுறோய்
தொடரினும் உன்கழல் தொழுதொழு வேன்
கடல் தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கு இல்லையேல் அதுவோ
உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
திருவாவடுதுறையில் சம்பந்தர் பாடிய இப்பதிகம் ஏனைய பதிகங்களை விட வித்தியாசமானது. நாலடியின் மேல் “ வைப்பு ” என்று. இரண்டு அடிகள் மேலதிக பாவாகக் கொண்டது. விருத்தப்பா நான்கடியில் நிறைவு பெறும். அதன் மேல் இரண்டு அடிகள் தொடர்கிறது இப்பா. பதிகத்தின் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் “ இதுவோ எமை ஆளுமாறு…..” எனவரும் இரு அடிகளும் பதிகத்தின் பத்துப் பாடல்களிலும் மீண்டும் மீண்டும் வரும் சிறப்பினை அன்பர்கள் நோக்க வேண்டும். இப்பாடற் சிறப்பினைப் பெரியபுராணம் (பாடல்இல: 2323) இவ்வாறு கூறுகிறது.
எடுத்த வண்டமிழ்ப் பதிக நாலடியின் மேல் இரு சீர்
தொடுத்தவைப்பொடு தொடர்ந்த இன்னிசையினால் துதிப்பார்
மடுத்தகாதலில் வள்ளலார் அடியினை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்தஞ்சலி அளித்தார்.
பதிகம் பாடி நிறைவு பெற்றதும் பூதகணம் ஒன்று ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பணமுடிப்பு ஒன்றினை (மேற் குறித்த ) பீடத்தின் மீது வைத்தது. இதனைப் பெரிய புராணம் (பாடல்இல: 2323 ) இவ்வாறு கூறுகிறது.
எடுத்த வண்டமிழ்ப் பதிக நாலடியின் மேல் இரு சீர்
தொடுத் தவைப்பொடு தொடர்ந்தஇன்னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடியினை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்தஞ்சலி அளித்தார்.
பதிகம் பாடி நிறைவு பெற்றதும் பூதகணம் ஒன்று ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பண முடிப்பு ஒன்றினை மேற்குறித்த ) பீடத்தின் மீது வைத்தது. இதனைப் பெரியபுராணம் (பாடல்இல: 2324 ) இவ்வாறுகூறுகிறது.
நச்சி இன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர்
இச்சையே புரிந்தருளிய இறைவர் இன்அருளால்
அச்சிறப்பருள் பூதமுன் விரைந்த கல்பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக்கிழி ஒன்று.
இப்புனிதம் வாய்ந்த கற்பீடத்தினை நாமும் தொட்டு வணங்கிக் கொள்கிறோம். பீடத்திற்குமுன்பாக மிகப்பெரிய நந்தி ஒன்றுள்ளது. நந்தியின் செவிகளுக்கும் – கொம்புகளுக்கும் மட்டும் கவசம் இடப்பட்டுள்ளது. மற்றொரு நுழைவாசல் தாண்டி உட்சென்றால் இதுவே வெளிப்பிரகாரம். வடமேற்கு மூலையில் உள்ள திருமூலர் சந்நிதி தவிர இந்தத் திறந்த பிரகாரத்தில் வேறு சந்நிதிகள் எதுவுமில்லை.
சைவத் திருமுறைகளுள் திருமூலர் அருளிய “ திருமந்திரம் ” பத்தாம் திருமுறையாகக் கொள்ளப்படுகிறது. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்கள் பாடினார் எனத் திருமூலர் வரலாறு கூறினாலும் – அவர் நீண்ட காலம் வாழ்ந்தார் என்பதையே இக்கூற்றுக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருமந்திரம் ஏட்டுச்சுவடிகள் திருவாவடுதுறை மடத்தில் மறைவாக வைக்கப்பட்டிருந்தது எனவும், ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்த சீர்காழிப்பிள்ளையாரே அதனை வெளிப்படுத்தினார் எனவும் – திரு மந்திரம் பாடல் நூலின் முற்குறிப்பான திருமூலர் வரலாற்றில் உள்ளது.
அவரது சந்நிதியே வடமேற்கு மூலையில் உள்ளது. இங்கிருந்த படி பார்த்தால் வடகிழக்கு மூலையில் அம்பாள் சந்நிதியின் பின்புறம் தெரிகிறது. புதிதாக வர்ணம் தீட்டப்பட்ட அம்பாள் கோவில் பண்டிகைகள் – காலை நேர சூரிய ஒளியில் ஜொலிக்கின்றன. அம்பாள் சந்நிதியை சுற்றி வந்து அம்பிகை ஒப்பிலா முலையம்மைத் தரிசனம் செய்கிறோம். நான்கு திருக்கரங்களுடன் புன்சிரிப்புடன் நின்ற திருக்கோலத்தில் அழகிய-அலங்காரத்துடன் அருள்பாலிக்கிறார் அம்பிகை. அம்பாள் கோவிலின் மண்டபச்சுவரில் தெரிவு செய்யப்பட்ட 18 திருமந்திரப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. 6, 20, 51, 67, 95, 109, 140, 193, 203, 317, 934, 1789, 1849, 2290, 2325, 2453, 2953, 2971 இலக்கமுடைய திருமந்திரப் பாடல்களே அவை. அம்பாள் வாசலில் சிறிய பிரதோஷ ரிஷபம் வைக்கப்பட்டிருந்தது.
அம்பாள் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஒரு அடிக்கோபுர வாசல் வழியாக நுழையும் போது இரு புறமும் (அடிக் கோபுரத்தின் உள்ளேயே ) அறைகள் போன்ற அமைப்பில் கண்ணாடிப் பேழைகளில் மெய்கண்ட சாத்திரம், பன்னிரு திருமுறைகள், பண்டாரசாத்திரங்கள் (12 தர்மபோதனைகள். அவை உண்மையில் எனக்குப் புரியவில்லை) மற்றும் கிடைத்தற்கரிய பழைய ஓலைச் சுவடிகள், பழைய புத்தகங்கள் ஆகியன வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மண்டபம் நடுவே தம்பம் – பலிபீடம் –நந்தி காணப்படுகின்றன. உள்ளே இரு மண்டபங்களுக்கு அப்பால் நேராக கருவறை தெரிகிறது. உள் மண்டபத்தின் வலது புறத்தில் ஸ்ரீதியாக ராஜர் சந்நிதி காணப்படுகிறது.
ஒரு பக்கச் சுவரில் அப்பரின் திருத்தாண்டகமும், திருமூலரின் “ சிவனோடு ஓக்கும் தெய்வம் தேடினும் இல்லை”. எனும் திருமந்திரப் பாடலும் எழுதப்பட்டுள்ளது. நடு மண்டபத்தில் உள்ள சிறிய இரண்டு நந்திகளில் ஒன்று உலோகத்தால் ஆனது. கருவறை வாசலில் துவார பாலகர்களுக்குப் பதிலாக வலது புறம் பிள்ளையாரும் இடது புறம் முருகனும் உள்ளனர். உள்ளே கருவறையில் லிங்கவடிவில்“ மாசிலா மணீஸ்வரர்” அருள் பாலிக்கிறார். “ கோமுக்தீஸ்வரர்”எனும் திரு நாமமும் இவருக்குண்டு கோஷ்ட மூர்த்தங்களாக தலவிநாயகர், அகத்தியர், ஆலமர், செல்வன், லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டிசேருக்கு தனிச் சந்நிதி காணப்படுகிறது.
உட்பிரகாரத்தை வலம் வரும் போதுகிழக்கில் (வலது பக்கம் ) சூரியன் தன் தேவியர் இருவருடனும் உள்ள சந்நிதியும், சுந்தரரின் உற்சவத் திருமேனியையும் தரிசிக்கலாம். தென்சுற்றில் நந்நிகேஸ்வரர் , ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீவிசாலட்சி, மாணிக்கவாசகர் , திரு முறை கண்ட விநாயகர், அடுத்து வரிசையாக அறுபத்து மூவரும் உள்ளனர். மேற்குச் சுற்றில் பிரகாரப்பாதையை விட்டு ஐந்துபடிகள் மேலேறி நடந்தால் ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீகாளத்தீஸ்வரர், ஸ்ரீபாண்டியலிங்கம், கொங்கணேஸ்வரி அம்பாளைத் தரிசிக்கிறோம்.
அடுத்திருப்பது ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியாகும். இச் சந்நிதி வழமைக்கு மாறாக கருவறைக்கு சரி பின்புறமாக அமைந்திருப்பது வித்தியாசமான அம்சமாகும். தொடர்ந்தும் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசொக்கலிங்கம், ஸ்ரீசேரலிங்கம், ஸ்ரீமகாலெட்சுமி ஆகியோர் வரிசையாக உள்ளனர்.
மீண்டும் கிழக்குச் சுற்றின் இடது புறம் பார்த்தால் லிங்கத்தின் மீது பால் சொரியும் ஒரு சொரூபம், ஸ்ரீசோழலிங்கம் , சனிபகவான், வைரவர், ஸ்ரீபஞ்சலிங்கம், சந்நிரன் உள்ளனர். சனிபகவானுக்குத் தனிச் சந்நிதி இருப்பதைத் தவிர நவக்கிரக மண்டபம் எதுவும் இல்லை ஒரு அற்புதத் திருக்கோவில் தரிசனம் பூரணமாகக் கிடைக்கப்பெற்ற மனநிறைவோடு திருவாடுதுறைத் திருக்கோவிலை விட்டு வெளியே வருகிறோம்.
“ மஞ்சனே மணியுமானாய் மரகத் திரளுமானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே
துஞ்சம் போதாக வந்து துணையெனக் காகிநின்று
அஞ்சல் என்றருள வேண்டும் ஆவடுதுறையுளானே”
-அப்பர்-
நன்றி: ஞானச்சுடர், வைகாசி 2016
அடுத்த வாரம்: “ திருநாவலூர்”சுந்தரர் பிறந்து - தவழ்ந்து- வளர்ந்து விளையாடிய இடம் திருநாவலூர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.