கல்வி, ஆலயப்பணி, சமூகப்பணி என தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர் அமரர் அதிரூபசிங்கம் - தெய்வேந்திர ஜயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/07/2017 (புதன்கிழமை)
அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் சிறுபராயம் முதல் முருகப்பெருமானது அருளினால் ஈர்க்கப்பட்டு கந்தபுராண காலத்தில் வீரபாகுதேவர் தூது சென்ற சமயம் இத்தலம் அமைந்துள்ள "கல்லோடை " பகுதிகளில் காலடி பதித்த சுவடும் வழிபாடும் இன்றும் போற்றத்தக்கது.
இச்சுவடு அமைந்துள்ள கல்லோடை பகுதிகளில் பெருமான் திருவருளினால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த காலப்பகுதியில் கல்வி, ஆலயப்பணி, சமூகப்பணி என தனது இளமைக்காலத்தில் இருந்தே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்துவந்தார்.
அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் இங்கு வாழ்ந்த காலப்பகுதியில் எமது ஆலயப்பகுதியில் சனசமூகநிலையம் இல்லாதமையை உணர்ந்து எம்முடன் இணைந்து ஓர் சனசமூக நிலையம் அமைக்க முயற்சி செய்தி அதன் பலனாக பொன்னொளி ஐக்கிய இலவச வாசிகசாலை நிறுவுவதில் பெரும் பங்காற்றியிருந்தார்.
அமரர் வ.ஆ .அதிரூபசிங்கம்
அதுமட்டுமன்றி இவ்வூர் மாணவர்களின் கல்வி நிலையினை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு கல்வியறிவினையும் இலவசமாக வழங்கியிருந்தார். இவ்வாறு வாழ்ந்துவரும் வேளையில் இலங்கை போக்குவரத்துசபை பருத்தித்துறை சாலையில் நடத்துனராக கடமையாற்றிக் கொண்டே தனது கல்விகற்கும் பணியையும் தொடர்ந்து வெளிவாரியாக கலைத்துறையில் பட்டம் பெற்று (B.A) இலங்கை போக்குவரத்துசபை பருத்தித்துறை சாலையில் அதிகாரியாகவும் பணியாற்றினார்.
அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் இல்லற பந்தத்தில் இணைந்து வல்வெட்டித்துறையில் வாழ்ந்தாலும் எமது ஆலய மகோற்சவம், கந்தசஷ்டி, மாதாந்த கார்த்திகை உற்சவங்கள் என அனைத்து ஆலய நிகழ்வுகளிலும் பூத் தொண்டனாக பெருமானுக்கு சேவை செய்தமை எம் மனக்கண்முன் பசுமையான நினைவுகளாக இன்றும் நிற்கிறது.
அமரர் அவர்கள் முருகப் பெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தி , அன்பு தான் அனுபவித்த தெய்வீக திருவருள், முருகப் பெருமானின் பெருமைகள் என்பவற்றை உலகோர் அறியும் வண்ணமும் எதிர்கால சந்ததியினரும் தெரியும் வண்ணமும் எதிர்கால சந்ததியினருக்கு தெரியவும் வேண்டி " ஆறுமுக பாலன் ஆற்றங்கரை வேலன்" எனும் நூலினை இலவசமாக வெளியீட்டு முருகப் பெருமான் அருளில் திழைத்தார். அதுமட்டுமன்றி பெருமானது ஆலயப் பகுதியில் மகோற்சவ, கந்தசஷ்டி காலங்களில் பெருமளவிலான பக்தர்கள் ஆலய சுற்றாடலில் உள்ள மரங்களில் தங்கியிருப்பது வழமையாகும். இதனைக் கருத்திற் கொண்டு தனது புதல்வர்கள் மூலம் ஆலய சுற்றாடலில் நிழல் மரங்களை நாட்டி அதற்கான கூடுகளை அமைத்து தொடர்ந்து பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என்னும் இயற்கையின் நியதிகளை எவராலும் வெல்ல முடியாது ஆனாலும் மானுடனாக பிறந்த ஒவ்வொருவரும் மானுட பிறவியின் நோக்கத்தை அடைந்து கொள்ளலாம். இவ்வகை இலக்கணங்களுக்கு அமைவாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார். அமரரின் பிரிவால் பெரிதும் துயருற்று இருக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் யாவரினதும் மனக்கவலைகள் மாறவும் அமரர் அன்பர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் ஆன்மா பரிபூரண சாந்தி பெற்றுய்யவும் எல்லாம் வல்ல செல்வச்சந்நிதி வேலனின் பாதாரவிந்தங்களை பணிந்து பிராத்திக்கின்றேன் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.