ஸ்கொட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வதற்கான பொதுஜன வாக்கெடுப்பு தொடங்கியது!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2014 (வியாழக்கிழமை)
ஸ்கொட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து சென்று சுதந்திரமாக செயற்படுவதா? இல்லை தொடர்ந்தும் இணைந்தே இருப்பதா என்று பொதுமக்களிடம் இன்று வாக்கெளிப்பு இடம்பெறுகிறது. தற்பொழுது ஆரம்பித்துள்ள வாக்கெடுப்பு இலங்கை நேரப்படி நள்ளிரவு 2.30 மணிவரை இடம்பெறவுள்ளது. நாட்டிலுள்ள மொத்த சனத்தொகை 5.3 மில்லியனில் 4.2 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வாக்களிப்பதுக்கு தம்மை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
கடந்த சிலவாரங்களாக முதன்மை பேசு பொருளாக மேற்குலகில் காணப்பட்ட இத்தேர்தலானது மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன் நடாத்தப்பட்ட கருத்துகணிப்புகளிலும், ஆய்வாளர்களின் பார்வையிலும் தெளிவான ஒரு வெற்றியாளர் இல்லாதவாறு நெருக்கடியான போட்டி காணப்படுகிறது. இறுதியாக நேற்று வெளியாகிய கருத்துகணிப்பில் 51 வீதமானோர் பிரிட்டனில் இருந்து பிரிந்து சுதந்திரமாக போவதை எதிர்த்தும், 49 வீதமானோர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். மேற்படி கருத்துக்கணிப்பு தொலைபேசி வாயிலாக 1373 பேரிடம் நடாத்தப்பட்டதில் 5 வீதமானோர் எவ்வித முடிவையும் தெரிவிக்கவில்லை.
தேர்தல் ஆரம்பிக்க சில மணித்தியாலங்கள் இருக்கையில் வழமையான தேர்தலில் காணப்படும் அதே களநிலை ஸ்கொட்லாந்து வீதிகளில் காணப்பட்டது. கார்களில் ஸ்காட்லாந்து பாடல்கள் சத்தமாக பாடவிடப்பட்டும், வீடுகளின் ஜன்னல்களில் "Yes Scotland'', "No, Thanks'' போஸ்டர்களும், ஜாக்கெட்களில் உள்ள பட்டன்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் இருந்தன.
இதேவேளை பிரிட்டனில் இருந்து பிரியக்கூடாது சேர்ந்தே இருக்கவேண்டும் என்று நடாத்தப்படும் ஆதரவு பேரணி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்காட்லாந்து நாட்டவரான பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கோர்டன் பிரவுன் இனியும் யூனியன் ஸ்கொட்லாண்டவர்களின் பெரும்பான்மையானோர் அமைதி காக்க போவதில்லை என்றும் அதேவேளை ஸ்கொட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து சுதந்திரநாடாக வேண்டும் என்ற அணியின் தலைவரும், ஸ்கொட்லாந்து அமைச்சருமான அலெக்ஸ் சால்மோண்ட் கடந்த 307 வருடங்களில் இதுவே ஜனநாயகத்துக்கு தகுந்த தருணம் என்றும் வாக்காளர்களை கேட்டுள்ளார்.
மேற்படி கத்தி விளிம்பு தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப்போவது வாக்களிக்க முதற்தடவையாக தகுதி பெற்றுள்ள 16,17 வயதினரே, இவர்கள் எந்த பக்கம் சாய்கின்றனரோ அந்தபக்கமே வெற்றியலை இருக்கின்றது. இப்படியாக இள ரத்தங்கள் தீர்மானிக்கும் சக்தியாக அங்கே இருக்க எமது தமிழர் தரப்புகளில் இங்கே இப்போதுதான் அண்மையில் 77 வயது இளைஞர் அணித்தலைவர், தலைவராகியிருக்கிறார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.