சக்தி விரதமாகிய நவராத்திரி விழா இன்று 01.10.2016 ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று 10 ஆம் திகதி நவராத்திரி விழா நிறைவடைந்து 11 ஆம் திகதியான பதினோராம் நாளன்று விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது.
முதல் மூன்று நாட்களும் துர்க்கையை வழிபட்டு நாம் வாழ்வில் வீரத்தையும், அடுத்த மூன்று நாட்களும் மகாலக்சுமியை வழிபட்டு நாம் வாழ்வில் செல்வத்தையும், இறுதி மூன்று நாட்களும் சரஸ்வதியை வழிபட்டு நாம் வாழ்வில் கல்விச் செல்வத்தையும் பெற்றுக் கொள்ளும் வகையில் வழிபாடுகள் அமைவது வழமையாகும்.
நவராத்திரி விரதம் அமாவாசைக்கு அடுத்த முழு பிரதமையில் ஆரம்பிக்கப்படவேண்டும் அதாவது 01ஆம் திகதி நாளை ஆரம்பிக்கும் நவராத்திரி விழாவின் சரஸ்வதி பூசை ஆரம்பம் மூல நடசத்திரத்திலும், சரஸ்வதி பூசை நிறைவு திருவோண நட்சத்திரத்திலும் முடிவடைய வேண்டும். அதன் வரிசையில் நவராத்திரி விழா நடைபெறும் தினங்கள் வருமாறு. (01,02,03 ம் திகதிகள் - துர்க்காதேவி, 04,05,06,07 ம் திகதிகள் - மகாலக்சுமி,08,09,10ம் திகதிகள் - சரஸ்வதிதேவி, 11ம் திகதி - விஜயதசமி)
வல்வையிலும் வருகின்ற 10 ஆம் திகதி சூரன்போரும், 11 ஆம் திகதி மானம்பூத் திருவிழாவும் வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதியில் நடை பெறவுள்ளது.
வல்வையில் நவராத்திரி விழா
அன்னையாம் எம் சக்தி தெய்வத்திற்குரிய, நவராத்திரி விரத கால விசேட பூசை வழிபாடுகள், சைவப் பெருமக்களால் மிகுந்த பக்தி சிரத்தையுடன் மேற்கொள்ளப்படும் தன்மையில், இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறையிலும் வழமை போல மிகுந்த பக்தி உணர்வுகளுடன் மேற்கொள்ளப்படவுள்ளன.
சக்தி மீது மிகுந்த பக்தி செலுத்தி சக்தியை உரியமுறையிலே மனங்கொண்டு, சக்திக்குரியதான நவராத்திரி விரத நிகழ்வினைப் பெருந்தொகையான பெண்மணிகள் மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கும்பம் வைத்தலுடன் (2013) ஆரம்பமாகிய நவராத்திரி விழா, வல்வை குச்சம் சரஸ்வதி கோவில்
மேலும் நவராத்திரி விரத கால விசேட பூசை, வழிபாடுகள் இவ்வூரிலுள்ள புகழ்பூத்த ஆலயங்களான வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்), ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் (அம்மன் கோவில்) ஆகியவற்றில் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்படுவது வழமை.
இவை தவிர , இப்பகுதியில் ஆங்காங்கே அமைந்துள்ள வழிபாட்டிற்குரிய சக்தி ஆலயங்களிலும் இவ்விசேட பூசை வழிபாடுகள் அவ்வக்காலங்களில் உரியமுறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தவிர இப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகள், படிப்பகங்கள், தனியார் கல்விக்கூடங்கள் ஆகியவற்றிலும் அவற்றின் வசதிகளுக்கேற்ப உரியமுறையில் மேற்கொள்ளப்படுவது வழமை.
இவ்விரத கால நாள்களில் வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகியனவற்றில் சூரன் போர், மானம்பூ ஆகிய விசேட நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுவது வழமை ஆகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.